You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. "விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்" - கமல்

    விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.

    என் சகோதரர் மு.க.ஸ்டாலின் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.

    இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.

    ‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

    நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

  2. "விஜய் முதலமைச்சராக வேண்டும்" - விஜய் வீட்டு வாசலில் தொண்டர் கண்ணீர்

  3. அதிமுக-திமுக கூட்டணியா? - செம்மலை பதில்

    அதிமுக-திமுக கூட்டணி குறித்து பரவும் தகவல் குறித்து அதிமுக மூத்த தலைவர் செம்மலை பதில் தெரிவித்துள்ளார்.

    சென்னை பசுமைவழிசாலையில் செய்தியாளர்களை சந்தித்த செம்மலை, “எங்களின் நிலைப்பாட்டை பற்றி எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவெடுப்பார். அவர் ஒரு தேர்ந்த அரசியல் தலைவர். எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டுமோ அதை கச்சிதமாக செய்வார். அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் நடக்கும். அவர் எடுக்கும் முடிவு நல்லதாகவே இருக்கும்.” என்றார்.

    புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, “எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் வரவழைக்கப்பட்டு சட்டப்பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது நடைமுறை. அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அவர்கள் ஊருக்கு செல்லாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிலென்ன தவறு?” என்றார்.

    செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவார் என்ற அச்சத்தினால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்விக்கு, “அப்படியெல்லாம் எதுவும் நடக்காது, அப்படிப்பட்ட நபர்கள் எங்கள் எம்எல்ஏக்கள் அல்ல. அனைவரும் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு கட்டுப்பட்டவர்கள். இது வதந்தி” என்றார்.

    அதிமுக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை என தகவல் பரவுவது குறித்த கேள்விக்கு, “எதுவாக இருந்தாலும் நல்ல முடிவை தீர்க்கமாக எடுப்பார்.” என்றார்.

    எடப்பாடி பழனிசாமி ‘கிங் மேக்கரா’ என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அவர் கிங் மேக்கர் அல்ல, அவரேதான் கிங்.” என்றார்.

  4. "மக்கள் அளித்த தீர்ப்பின்படி விஜய் பதவியேற்பதுதான் சரி" திருமாவளவன்

    தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக அனுமதிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பாஜகவும் (மத்திய உள்துறை அமைச்சர்) அமித் ஷா - (பிரதமர்) மோதி ஆகியோரும் தமிழ்நாடு அரசியலில் தலையீடு செய்து குழப்பத்தை உருவாக்குகின்றனர். தவெக தனிப்பெரும் கட்சியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அக்கட்சி தலைவரை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அதுதான் அரசியலமைப்பு சட்டம் காட்டும் வழிகாட்டுதல். அவர் ஆதரவு கோரிய நிலையில் இன்னும் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இங்கு குழப்பம் ஏற்படுவதற்கு இடம் கொடுக்கிறார்.

    அடுத்ததாக, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடியவர்கள் யார், யார் என்ற பட்டியலை ஆளுநர் கோர முடியாது. விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அறுதி பெரும்பான்மை இருக்கிறதா என்பதை சட்டப்பேரவையில் நிரூபிப்பதற்கு அவரை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், பாஜக திரைமறைவில் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.” என்றார்.

    மேலும் பேசிய அவர், மக்கள் அளித்த தீர்ப்பின்படி விஜய் பதவியேற்பதுதான் சரி, அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம் என்றும் பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அவரை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்புகிறோம் என கூறியிருப்பதை தங்கள் கட்சி பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.’

    “இதுகுறித்து முன்கூட்டியே முடிவை அறிவிக்க முடியாது, பரிசீலித்து அறிவிக்கப்படும். விஜய்க்கு மத்திய அரசே தாங்களாக பாதுகாப்பு அளித்தனர். இப்போது அதை நீக்குகின்றனர். விஜயை தங்களின் கைப்பாவையாக வைத்துக்கொள்ள பாஜக முயற்சிக்கிறது. ஆளுநரும் அதற்கேற்ப செயல்படுவதாக தெரிகிறது. அவரை முதலமைச்சராக்க அனுமதிக்காவிட்டால் தமிழ்நாட்டை மேலும் குழப்ப திட்டமிட்டுள்ளனர் என்றே தெரிகிறது.” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    பாஜக மீதான திருமாவளவன் விமர்சனம் குறித்து அக்கட்சி எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. அக்கட்சி கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் இங்கே வழங்கப்படும்.

  5. காணொளி: 'விஜய் பதவியேற்க போகிறார்' என்று எண்ணி நேரில் காண வந்த பெண்கள் கண்ணீர்

  6. "தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல" - இந்திய கம்யூனிஸ்ட்

    தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    “சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், தெளிவான தீர்ப்பை வழங்கவில்லை.

    எனினும், தவெகவுக்கு 108 உறுப்பினர்களை வழங்கி, அதனை தனிப் பெரும் முதன்மை எண்ணிக்கை கொண்ட கட்சியாக தேர்வு செய்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியுள்ளார். பதவி ஏற்புக்கு முன்பு தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல.

    தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் உணர்வை மதித்து நடக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

  7. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்க வாசலில் கண்ணீர் விட்ட தவெக தொண்டர்

    "விஜய் முதலமைச்சராக பதவியேற்க போகிறார் என்று வந்தோம்; வருத்தமாக உள்ளது" என, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்க வாசலில் கண்ணீர் விட்ட தவெக தொண்டர் ஒருவர் கூறியுள்ளார்.

  8. "மு.க.ஸ்டாலின் தோற்றதற்கு எடப்பாடி பழனிசாமி வருத்தப்பட்டார்" - புதுச்சேரி அதிமுக செயலாளர்

    மு.க.ஸ்டாலின் தோற்றதற்கு எடப்பாடி பழனிசாமி வருத்தப்பட்டதாக, புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “திமுக 70 ஆண்டுகளாக மக்களுக்காக உழைக்கும் கட்சி. மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருத்தமடைந்தார். அதிமுக தோற்றதற்கு நான் வருத்தப்பட்டபோது கூட எடப்பாடி பழனிசாமி ‘பார்த்துக்கொள்ளலாம்’ என்றார். ‘ஸ்டாலின் எவ்வளவு பெரிய தலைவர். அவரே வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்’ என கஷ்டப்பட்டார். அரசியலில் இரு துருவமாக இருந்தாலும் தலைவர்கள் வெற்றிபெற வேண்டும் என நினைப்பவர் எடப்பாடி பழனிசாமி.” என்றார்.

  9. தவெகவுக்கு கை கொடுத்த காங்கிரஸின் நிபந்தனையும் 'இந்தியா' கூட்டணியின் எதிர்காலமும்

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, பொறுப்பு ஆளுநரை மீண்டும் சந்தித்த விஜய்

    தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்துள்ளார். முன்னதாக நேற்றும் விஜய் பொறுப்பு ஆளுநரை சந்தித்தார்.

    தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. நேற்று காங்கிரஸ் தன் 5 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தது.

  11. முறிந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி, யாருக்கு பலம்? யாருக்கு பின்னடைவு?

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

    பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜயை நேரில் சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஆதரவு கடிதத்தை அவரிடம் வழங்கினர். இதன் மூலம் திமுக உடனான காங்கிரஸின் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

    திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தந்தது குறித்து கூறுவது என்ன? இந்த விவகாரத்தில் திமுகவின் எதிர்வினை என்ன?

  12. விஜய்க்கு இலங்கை அரசியல்வாதிகள் வாழ்த்து

  13. சன்ரைசர்ஸ் அணி முதலிடம்: கேட்ச்களுடன் ஆட்டத்தையும் கோட்டை விட்ட பஞ்சாப் கிங்ஸ்

  14. தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள்

    தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் நடந்துவரும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் பலர் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என அதிமுகவில் மற்றொரு தரப்பினரும் நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

    ஆனால், தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பது என்பது தவறான செய்தி என, அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக தவெகவுக்கு ஆதரவளிப்பது போன்ற செய்திகளும் கருத்துக்களும் வந்துகொண்டிருக்கின்றன. அது முற்றிலும் தவறான செய்தி. அதிமுக மிகப்பெரிய இயக்கம். எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.

    இந்த சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் பலர் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்குவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

  15. இதுவரை நடந்தது என்ன?

    இந்த நேரலை பக்கத்தில் தற்போதுதான் இணைந்திருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நேற்று அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்:

    • விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களுடன் தன் ஆதரவை வழங்கியுள்ளது.
    • "புதிய ஆட்சியில் காங்கிரஸ் பங்கு வகிக்கும்" என, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக ஆட்சியமைக்க பொறுப்பு ஆளுநரிடம் உரிமை கோரியது.
    • தமிழக 16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் தெரிவித்துள்ளார்.
    • அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி எந்த சூழலிலும் அதிமுக, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்காது என்று தெரிவித்தார்.
    • விஜய் தங்களிடம் ஆதரவு கோரியுள்ள நிலையில் இன்று கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    • திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என, 2 தொகுதிகளில் வென்ற திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
  16. ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய் – ஆளுநர் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

  17. காணொளி: விஜய்க்கு இலங்கை அரசியல்வாதிகள் வாழ்த்து

  18. காணொளி: முறிந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி, யாருக்கு பலம்? யாருக்கு பின்னடைவு?

  19. காணொளி: விஜய்க்கு கனிமொழி வாழ்த்து

  20. காணொளி: விஜய் முதல்வரானால் அவருக்கான சம்பளம் எவ்வளவு?