You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
"தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்" - திருமாவளவன்
தமிழ்நாட்டின் கடன் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடும் திருமாவளவன், "ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோடு ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும்.தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும்." எனத் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை பற்றி குறிப்பிட்ட திருமாவளவன், "இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்தப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்." என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், "இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும்." என்றார்.
காணொளி: முதலமைச்சராக விஜயின் முதல்நாள் - நகர்வுகள், சர்ச்சைகள் மற்றும் எதிர்வினைகள் என்ன?
காணொளி: முதலமைச்சர் விஜயிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?
மேற்கு வங்கம்: மமதா பானர்ஜியின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?
உர்வில் பட்டேல் சாதனை அரைசதம் - ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வு
திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராகும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது. நாளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திமுக கட்சியின் கொறடாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக 54 இடங்களில் வென்றிருந்தது. திமுக சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் 5 இடங்களில் வென்றிருந்தன.
காணொளி: முதலமைச்சர் விஜயின் சொந்த ஊரில் மக்கள் கொண்டாட்டம்
காணொளி: உதயநிதி ஸ்டாலின் முன் உள்ள சவால்கள் என்ன? பத்திரிகையாளர் குபேந்திரன்
காணொளி: 200 யூனிட் மின்சாரம் - விஜய் சொன்னதும் செய்ததும்
புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை பதவியேற்றுள்ள நிலையில் சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.
தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் முன்னிலையில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு நடத்தப்பட்டுள்ளது.
தவெகவின் கருப்பையா இன்று மாலை தற்காலிக பேரவைத் தலைவராக பதவியேற்றார்.
பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வரும்போது தேர்ந்தெடுக்கப் பெற்றதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - வைகோ, ராமதாஸ் கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ராமதாஸ் மற்றும் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற தமிழக முதலமைச்சர் பதவி ஏற்பு நிகழ்வில் பாரம்பரிய மரபு மாற்றப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் மாளிகையின் உத்தரவுப்படி இந்த நிகழ்வை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"இந்த நிகழ்ச்சி நிரலில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தவறு மீண்டும் தொடரக்கூடாது எனத் தெரிவித்த ராமதாஸ், "புதியதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு இதன் பிறகு நடைபெற உள்ள அனைத்து நிகழ்வுகளிலும் மற்றும் விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். நிகழ்ச்சிகள் தொடங்கும் போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தையும், நிறைவடையும் போது தேசிய கீதத்தையும் பாடுவதற்கு வழி செய்ய வேண்டும்." என்றும் கூறியுள்ளார்.
இதனைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், முதன் முதலில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடாமல் வந்தேமாதரம் பாடப்பட்டது தமிழ்நாட்டின் மரபை மீறிய நிகழ்வு ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், "தமிழ் மொழி வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை ஏற்கவே முடியாது. புதிய அரசு பதவி ஏற்பு விழா, ஆளுநர் வழிகாட்டுதலில் நடைபெற்றதால் "வந்தேமாதரம்" முதன்மைப் படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டின் அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து தொடக்கத்திலேயே பாடப்படுவதை முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பு - தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி
தமிழ்நாடு அரசின் 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான அறிவிப்பின் மீது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், "சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது." என்றும் தெரிவித்துள்ளார்.
200 யூனிட் மின்சாரம் - விஜய் சொன்னதும் செய்ததும்
தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தவெகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன? இது தொடர்பாக விஜய் பேசியது என்ன?
'காலம் என்னை ஓரிடத்தில் அமர்த்தும்': திரை வழியே மக்கள் மனதை வென்ற விஜய் 2011-ல் பேசியது என்ன?
தமிழ்த்தாய் வாழ்த்து: விஜய் பதவியேற்ற முதல் நாளே ஆதரவுக் கட்சிகள் கேள்வி
தமிழ்நாட்டில் இன்று காலை விஜய் தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சியில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கு அடுத்தபடியாக தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது விவாதப் பொருளானது.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என்று கூறிய என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏன் மூன்றாவதாக பாடப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்தச் சூழலில் இன்று மாலை நடைபெற்ற தற்காலிய சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவே பாடப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டதும், பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடியாமலும் இருந்தது. இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது ஏற்புடையதல்ல. ஆகவே, அரசு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் தளப் பதிவில், "தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள். சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வரானதும் விஜயின் முதல் 3 உத்தரவுகள் என்ன?
பிரதமர் மோதி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் நன்றி
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு சமூக ஊடகம் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோதியின் எக்ஸ் தளப் பதிவைப் பகிர்ந்து பதிவிட்டுள்ள விஜய், "எமது மக்களின் நலன் மற்றும் முன்னேற்றமே எங்களின் ஒரே நோக்கம். தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிலையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.
தனது இருப்பால் என்னுடைய பதவியேற்பு நிகழ்ச்சியை அலங்கரித்த நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி என விஜய் தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில், "மக்களுக்குச் சேவை செய்யும் இந்தப் பயணத்தை நாம் தொடங்கையில் உங்களுடைய ஆதரவும் கனிவான வாழ்த்துகளும் உண்மையில் பாராட்டப்படுகின்றன." எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு
தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையாவுக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
கருப்பையா, சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்றவராவார்.
2011-2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் கருப்பையா அதிமுக எம்எல்ஏவாக ஏற்கெனவே பதவி வகித்துள்ளார்.
இவர் நாளை (மே 11) புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
திருச்சி கிழக்கு தொகுதி - விஜய் ராஜிநாமா
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டிலும் வென்றார்.
சட்டப்படி, நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் ஒருவர் இரண்டு தொகுதியை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. அதன் அடிப்படையில் இரு தொகுதிககளில் வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை ராஜிநாமா செய்வது அவசியம்.
பதவியேற்பு நிகழ்ச்சி இன்று முடிந்துள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜிநாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கடிதத்தை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசனைச் சந்தித்து நேரில் வழங்கினார்கள். ஆகவே, பெரம்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமே விஜய் தொடர்வார்.
தேர்தல் ஆணையம் திருச்சி கிழக்குத் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவித்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்தும்.