மே 18 இலங்கை முள்ளிவாய்க்கால் போர்: "புலிகளின் தாக்குதல் தொடர்பில் வெளியான செய்தி பொய்யானது" - சரத் பொன்சேகோ

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இன்றைய (மே 18) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

"சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் ஊடாக தீர்வு காண முடியாது. தனது இருப்புக்கு மக்களின் போராட்டத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பில் தற்போது குறிப்பிடப்படும் செய்தி பொய்யானது. தீவிரவாதிகள் தலைமறைவாகியிருந்த தீவில் அரசு தலைவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளார்கள்" என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகோ சபையில் சுட்டிக்காட்டியதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "அவசரகாலச் சட்டம் கடந்த 6ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட போது சமூகத்தின் மத்தியில் அத்தியாவசிய சேவை விநியோகத்தில் மாத்திரம் சிக்கல் நிலைமை காணப்பட்டது. கடந்த 9ஆம் தேதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை முன்கூட்டியதாக அறிந்து அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முடக்கவே அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தியது.

வன்முறைச் சம்பவத்துக்கான தூண்டுதல் அலரி மாளிகையில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டது. அரசு தலைவர்கள் அதற்கு ஆதரவு வழங்கினார்கள். தூண்டுதலின் விளைவை தற்போது ஆளும் தரப்பினர்கள் எதிர்கொள்கிறார்கள். ஆகவே, பிற கட்சிகளின் மீது பழியை சுமத்தி உண்மையை மறைக்க முடியாது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பில் குறிப்பிடப்படுகின்றமை முற்றிலும் பொய்யானது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் முறையற்ற விடயங்களை குறிப்பிட்டு பிரச்னைகளை தீவிரப்படுத்திக்கொள்ள வேண்டாம்" என அவர் தனது உரையின்போது தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்தியாவிலிருந்து 40 மில்லியன் உணவு மூட்டைகள் வருகின்றன"

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு வார காலத்துக்கு தேவையான பால்மா (பால் பவுடர்) உட்பட உலர் உணவுகள் அடங்கிய 40 மில்லியன் உணவு மூட்டைகள் இலங்கைக்கு அன்பளிப்பாக இந்திய அரசு வழங்கியுள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா வழங்கியுள்ள இந்த அன்பளிப்பு உணவுகள் அடங்கிய முதல் தொகையை ஏற்றிய கப்பல், இன்று இலங்கையை வந்தடைய உள்ளதாக, அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்த குழுவின் தலைவர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, கிழக்கு மாகாணம், பதுளை உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உட்பட கவனத்தில் கொண்டு 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் மாவு, 137 வகை உயிர்காக்கும் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு அரசாங்கம், இந்திய அரசாங்கத்தின் ஊடாக இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளது என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழர்களிடம் இருந்து முகவர்களை தேடாதீர்கள்"

புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து, புலிகளை பலவீனப்படுத்திய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே, தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு அடித்தளமிட்டதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார் என 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர்களிடம் இருந்து தலைவர்களை தேடுங்கள், மாறாக முகவர்களை தேட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

"தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராகவும், சரத் பொன்சேகா ராணுவத் தளபதியுமாக இருந்து தமிழ் மக்கள் மீது இன அழிப்பு யுத்தத்தை செய்தார். ஆயுதங்கள் மௌனித்துவிட்டதாக புலிகள் அறிவித்த பின்னரும் கூட இசைப்பிரியா போன்ற பலர் ராணுவ தளபதிகளுக்கு முன்பாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இனப்படுகொலைக்கு பிரதமர் ரணிலே அப்போது வழியேற்படுத்திக்கொண்டார். இனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண்பதற்கான சமாதான உடன்படிக்கையை ரணிலே செய்தார். இதன்போது புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து புலிகளை ரணில் பலவீனப்படுத்தினார். அத்தோடு, புலிகளால் பலவீனப்பட்டிருந்த ராணுவத்தை மீள கட்டியெழுப்ப ரணிலே அடித்தளமிட்டார்" எனவும் தெரிவித்ததாக, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :