கொரோனா வைரஸ் தடுப்பூசி: கோவிஷீல்ட் பரிசோதனை தமிழகத்தில் எப்போது தொடங்கும்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி: கோவிஷீல்டு - பரிசோதனை எப்போது தொடங்கும்?

சென்னையில் 'கோவிஷீல்ட்' தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்கிறது தினத்தந்தியின் செய்தி.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த 'கோவேக்சின்' தடுப்பூசி 2-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள 'கோவிஷீல்ட் ' தடுப்பூசி சோதனை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள 17 நகரங்களில் இந்த தடுப்பு மருந்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தியாவில் சுமார் 1,600 பேரிடம் சோதனை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்து மொத்தம் 300 பேரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசி பரிசோதனை ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது இந்நிலையில், சென்னையில் இந்த தடுப்பூசி சோதனை இந்த மாத இறுதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பரிசோதனையில் கலந்து கொள்ளும் 300 தன்னார்வலர்கள் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பட்டியலுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர் என விவரிக்கிறது அச்செய்தி.

இந்து தமிழ் திசை: கோவிட் 19 சிகிச்சையில் நம்பிக்கையூட்டும் கபசுரக் குடிநீர்

கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையூட்டுவதாக மக்களவையில் மத்திய சுகாதரத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியான சு.வெங்கடேசன் நேற்று எழுப்பியிருந்த கேள்விக்கானப் பதிலில் அவர் இதை குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 'சுமார் 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடிநீரும் நில வேம்புக் குடி நீரும் வழங்கப்பட்டுள்ளன.

அதில் நடத்தப்பட்ட ஒன்பது விதமான நோயர்களிடமான ஆய்வு, நான்கு வகையான முதல் கட்ட அடிப்படை ஆய்வுகள் மூலம் சித்த மருந்தான கபசுரக் குடிநீர் வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதையும், கோவிட் நோய் எதிர்ப்பாற்றல் தருவதையும் ஆயுஷ் துறை விஞ்ஞானிகள் ஆய்து அறிந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட பல சித்த மருந்துகளைக் கொண்டு கோவிட்19 நோயை கையாண்டு வருவதை மத்திய அரசு நன்கு அறியும். மத்திய ஆயுஷ் துறையானது, சித்த மருத்துவர்களுக்கு கோவிட் நோய்க்கான சித்த மருத்துவ வழிகாட்டுதல் அளித்தும், சித்த மருந்துகளின் மீது ஆய்வுகள் நடத்த அனைத்து ஊக்குவிப்பும் செய்தும் வருகின்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.

தினமணி: தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்ட 90% பேர்

தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இதுவரை நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு 4 லட்சத்து 86,479 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்கிறது தினமணியின் செய்தி.

அலோபதி மருத்துவத்துடன் சித்தா, யோகா, ஆயுா்வேதம் என ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை முன்னெடுத்ததும், 'ரெம்டெசிவிர்` 'டோசிலிசுமேப்', 'எனாக்ஸபெரின்' போன்ற உயா் மருந்துகளை நோயாளிகளுக்கு அளித்ததுமே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை அமைத்து கரோனா நோயாளிகள் அனைவருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சையளித்ததால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா் என மேலும் தெரிவிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :