You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அபு பக்கர் அல்-பாக்தாதி: கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவரின் அக்காவை கைது செய்தது துருக்கி
அண்மையில் கொல்லப்பட்ட இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் அக்காவை வடக்கு சிரியாவில் கைது செய்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
65 வயதான ராஸ்மியா அவாட் திங்கள்கிழமை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது அஸாஸ் நகருக்கு அருகில் கைது செய்யப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அபு பக்கர் அல்-பாக்தாதியின் அக்காவை கைது செய்திருப்பது, ஐ.எஸ். பற்றிய உளவுத் தகவல்களை வெளிக் கொண்டுவர வகை செய்யும் என்று துருக்கி அதிகாரிகள் கூறுவதாக சமூக ஊடகத் தளங்களில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் வடமேற்கு சிரியாவில் பாக்தாதி பதுங்கியிருந்த வளாகத்தில் அமெரிக்க சிறப்பு படைப்பிரிவுகள் நடத்திய அதிரடி தாக்குதலின்போது, பாக்தாதி தான் தரித்திருந்த தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்து தன்னை அழித்து கொண்டார்.
பாக்தாதியின் இறப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றியென கூறிக்கொண்டாலும், சிரியாவிலும், பிற இடங்களிலும் ஐ.எஸ். இன்னும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே விளங்குவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பாக்தாதியின் அக்காவை கைது செய்திருப்பது ஐ.எஸ். அமைப்புக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவும் என்று துருக்கி அதிகாரி ஒருவர் ராய்ட்ர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
"இந்த கைது நடவடிக்கை எமது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையின் வெற்றிக்கு இன்னொரு எடுத்துக்காட்டு" என்று துருக்கியின் அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் தகவல் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாக்தாதியின் அக்கா பற்றி அதிக தகவல்கள் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட பெண்ணின் அடையாளத்தை சுயாதீன முறையில் பிபிசியால் உறுதிசெய்ய முடியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்