You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அதனால்தான் அவர் மன்னன்' - அர்ஜென்டினா 2 கோல் அடிக்க உதவி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற மெஸ்ஸி
- எழுதியவர், எம்லின் பெக்லி
- பதவி, பிபிசி ஸ்போர்ட் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லியோனல் மெஸ்ஸியின் சரித்திரம் முடிந்துவிட்டது போன்றே தோன்றியது.
அவர் தனது 35 ஆவது வயதில், இந்தத் தொடரில் இதுவே எனது கடைசிப் போட்டி என்று கூறி உலகக் கோப்பையை இறுதியாக வென்று இதை படிப்பவரின் பார்வையைப் பொறுத்து வரலாற்றின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் என்ற தனது இடத்தையும் உறுதி செய்தார்.
அதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 31 வயதாக இருந்தபோது, அவரைச் சுற்றியிருந்தவர்கள் உட்பட பலரும், அதுவே அவரது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்றும், உலகக் கோப்பையை வெல்லாமலேயே அவரது கால்பந்து தொழில்முறை வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் கருதினர்.
ஆனால், இதோ 39 வயதில் அவர் இங்கிலாந்தை முழுமையாக வீழ்த்தி, அர்ஜென்டினாவைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவியுள்ளார்.
மெஸ்ஸியின் இரண்டு அசிஸ்ட்கள் (கோல் அடிக்க வழங்கிய பங்களிப்பு), தென் அமெரிக்க அணியான அர்ஜென்டினா பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற உதவின. இதன் மூலம் 2026 உலகக் கோப்பையில் அவர் அடித்த 8 கோல்களுடன், 4 அசிஸ்ட்களையும் செய்துள்ளார்.
இந்த ஒட்டுமொத்தத் தொடரிலும் அவர் அதிக கோல் அடித்தவர்களில் முதலிடத்தையும், அதிக அசிஸ்ட் செய்தவர்களில் இரண்டாவது இடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நியூஜெர்சியில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினை எதிர்கொள்கிறது. இந்த ஸ்பெயின் நாட்டில்தான் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காகத் தனது கால்பந்து வாழ்க்கையின் பெரும்பகுதியை விளையாடியுள்ளார்.
அர்ஜென்டினா தேசிய அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி கூறுகையில், "அவர்தான் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர், அதை நிரூபிக்க அவர் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஸ்பெயின் மக்களில் பெரும்பாலானோர் அவரை நேசிக்கிறார்கள்" என்றார்.
"அவர்களிடம் லியோனல் மெஸ்ஸி உள்ளார். அவர்தான் 'கோட்' (GOAT : தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம் - வரலாற்றின் மிகச்சிறந்தவர்), என பிபிசி நிபுணர் மைக் ரிச்சர்ட்ஸ் கூறினார்.
"(இது எல்லாமே) அந்த முக்கியத் தருணங்களைப் பொறுத்தது. நாம் ஜூட் பெல்லிங்ஹாம் அல்லது ஹாரி கேன் அந்தத் தருணங்களை உருவாக்குவார்கள் என்று நினைத்தோம், ஆனால் அதைச் செய்ததால்தான் அவர் மன்னன்" என்றார்.
இங்கிலாந்தின் நம்பிக்கையை மெஸ்ஸி தகர்த்தது எப்படி?
பார்சிலோனா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகளின் முன்னாள் முன்கள வீரரான மெஸ்ஸி, இதற்கு முன்பு தனது கால்பந்து வாழ்க்கையில் இங்கிலாந்தை எதிர்கொண்டதே இல்லை. தாமஸ் டுச்செல் மற்றும் த்ரீ லயன்ஸ் (இங்கிலாந்து) ரசிகர்கள் அனைவரும் அது இப்படியே நீடித்திருக்கலாம் என்று விரும்பியிருப்பார்கள்.
களத்தின் மையப்பகுதியில் ஆடிய இந்த மூத்த வீரர், கடுமையான மோதல்கள் நிறைந்த முதல் பாதியில் சில தரமான 'டச்'களை (touch) வெளிப்படுத்தினார். ஆனால், 55 ஆவது நிமிடத்தில் அந்தோணி கார்டன் இங்கிலாந்துக்கு முன்னிலை தேடித்தந்த பிறகே அர்ஜென்டினாவின் ஆட்டம் சூடுபிடித்தது.
டுச்செல் கூடுதல் தடுப்பாட்ட வீரர்களைக் களமிறக்கி இங்கிலாந்து தற்காப்பு ஆட்டத்துக்கு மாறியதால், அடுத்த 37 நிமிடங்களுக்கு அர்ஜென்டினா 88% நேரம் பந்தை தன் வசம் வைத்திருந்தது.
மெஸ்ஸி வலது பக்க விங்குக்கு (right wing) மாறிய பிறகு களம் அவரது வசமானது.
"மெஸ்ஸியை விங்குக்கு கொண்டு வந்ததுதான் எங்களுக்கான திருப்புமுனையாக அமைந்தது" என்று கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் பின்னர் தெரிவித்தார்.
மெஸ்ஸி இங்கிலாந்துக்கு எதிராக ஒன்பது டிரிபிள்களை வெற்றிகரமாகச் செய்ததுடன், இரண்டு கோல்களுக்கு உதவியும் (அசிஸ்ட்) செய்தார். 1966 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் இவ்வாறு செய்த முதல் வீரர் அவரே.
இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக இணைந்து அட்லாண்டாவில் ஏழு வெற்றிகரமான டிரிபிள்களை மட்டுமே செய்திருந்தது.
எதிரணியின் பாக்ஸுக்குள் மெஸ்ஸி ஏழு முறை பந்தைத் தொட்டார். இது இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் இணைந்து தொட்ட எண்ணிக்கைக்குச் சமமாகும். அதேபோல் அவர் உருவாக்கிய நான்கு கோல் வாய்ப்புகளும் இங்கிலாந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு நிகரானது.
மேலும், அவர் ஆட்டத்திலேயே அதிகபட்சமாக ஒன்பது கிராஸ்களை செய்தார்.
இவை அனைத்தையும் விட முக்கியமாக, அர்ஜென்டினாவின் இரண்டு கோல்களையும் அவரே அமைத்துக் கொடுத்தார்.
முதலாவது, 85 ஆவது நிமிடத்தில் ஒரு கார்னர் உத்தியின் போது அவர் என்சோ பெர்னாண்டஸைக் கண்டறிந்து பந்தை அனுப்ப, அவர் பாக்ஸிற்கு வெளியிலிருந்து பந்தை உதைத்து சமன் செய்தார்.
அதன் பிறகு, இன்ஜுரி டைமில் லாடாரோ மார்டினெஸ் தலையால் முட்டி வெற்றி கோல் அடிப்பதற்குக் கிராஸ் செய்து கொடுத்தார்.
"அவர் மைதானத்தில் சாதாரணமாக உலா வருகிறார், பின்னர் பந்து அவரது காலடிக்கு வரும்போது அவர் உயிர்பெறுகிறார். இந்த மேதைத்தனம் ஆட்டத்துக்குள் வரும்போதுதான் வித்தியாசம் ஏற்படுகிறது" என முன்னாள் இங்கிலாந்து தடுப்பாட்ட வீரர் ரிச்சர்ட்ஸ் கூறினார்.
"மெக்சிகோ மற்றும் நார்வே அணிகளுக்கு எதிராக விளையாடியபோது அவர்கள் செய்ததைப் போலவே, இந்தப் போட்டியிலும் வீரர்கள் தற்காப்பை வலுப்படுத்தி எதிரணிக்கு வாய்ப்பளிக்காமல் விளையாடினர்.
"அதன் பலனாக, லயோனல் மெஸ்சிக்கு அதிக சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. போட்டியின் முடிவை மாற்றக்கூடிய திறவுகோல் அவரிடமே இருந்தது. கடைசி 15 நிமிடங்கள் அவர் ஆட்டத்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்" என்றார் முன்னாள் இங்கிலாந்து கீப்பர் ஜோ ஹார்ட்.
"ஆட்டத்தின் பெரும் பகுதியில் நாங்கள் அவரை நன்றாகவே கையாண்டோம், ஆனால் உலகின் மிக அபாயகரமான வீரர்களிடம் பந்து இருக்கும்போது அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எதையாவது உருவாக்கி விடுவார்கள். வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக அவர் இருப்பதற்கு காரணம் இருக்கிறது" என இங்கிலாந்து கேப்டன் கேன் கூறினார்.
மெஸ்ஸி கோல்டன் பூட் விருதை வெல்ல முடியுமா?
இந்த கோடையில் மெஸ்ஸி உலகக் கோப்பை வரலாற்றில் 21 கோல்களுடன் (அவரது ஒட்டுமொத்த 125 அர்ஜென்டினா கோல்களில்) அதிக கோல் அடித்த வீரரானார்.
அந்த 21 கோல்களில் 15 கோல்கள் அவரது 35 ஆவது பிறந்தநாளுக்குப் பிறகு அடிக்கப்பட்டவை.
இந்தத் தொடரில் அவர் எட்டு கோல்களை அடித்துள்ளார். இது 2022 இல் அவர் அடித்த ஏழு கோல்களை விட அதிகமாகும். அப்போது கோல்டன் பூட் பரிசுக்கான போட்டியில் கைலியன் எம்பாப்பேயை விட ஒரு கோல் மட்டுமே குறைவாக எடுத்திருந்தார்.
இந்த முறை மெஸ்ஸியும் எம்பாப்பேயும் தலா எட்டு கோல்களுடன் சமநிலையில் உள்ளனர். எம்பாப்பேயின் பிரான்ஸ் அணி சனிக்கிழமை மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்தின் பெல்லிங்ஹாம் மற்றும் கேன் ஆகியோர் தலா ஆறு கோல்களுடன் இன்னும் போட்டியில் உள்ளனர்.
வீரர்கள் சமமான கோல்களுடன் முடித்தால், அடுத்தபடியாக அசிஸ்ட்கள் கணக்கில் கொள்ளப்படும். இதில் மெஸ்ஸி 4 அசிஸ்ட்களுடனும், எம்பாப்பே 3 அசிஸ்ட்களுடனும் உள்ளனர்.
மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் அதிக அசிஸ்ட் செய்தவராகவும் முடிக்கும் வாய்ப்புள்ளது. பிரான்சின் மைக்கேல் ஓலிஸை விட ஒரு அசிஸ்ட் மட்டுமே அவர் பின்தங்கியுள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து கோல்கீப்பர் பால் ராபின்சன் பிபிசியிடம் பேசுகையில், "அவர் ஒரு மந்திரவாதி, அவர் உண்மையிலேயே அப்படித்தான். இந்தத் தொடர் முழுவதும் அவர் அதைச் செய்துள்ளார். அவர் அடித்த கோல்களையும், இங்கிலாந்தின் பாக்ஸுக்குள் அவர் அனுப்பிய பந்துகளையும் பாருங்கள்" என்றார்.
மெஸ்ஸியின் வேகம் குறையுமா?
2016 ஆம் ஆண்டில், பார்சிலோனா அணியில் இருந்தபோது தனது 29 ஆவது வயதில் மெஸ்ஸி சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெற்றார் என்பதை மறப்பது எளிது.
அவர் 2014 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடமும், மூன்று கோபா அமெரிக்கா இறுதிப்போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தார்.
ஓய்வு பெறும் முடிவை மாற்றிக்கொண்ட பின்னர் அவர் இரண்டு முறை கோபா அமெரிக்காவை வென்றுள்ளார்.
2022 இல் பிஎஸ்ஜி வீரராக இருந்த மெஸ்ஸி கத்தாரில் உலகக் கோப்பையை உயர்த்தியபோது, அவரது கால்பந்து வாழ்க்கையின் விடுபட்ட இறுதிப் புதிர்ப் பகுதி நிறைவடைந்தது போல் தோன்றியது.
வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் யார் என்ற விவாதத்தில் இறுதிப் புள்ளியாக இதுவே விடுபட்டிருந்தது என்று பலரும் கருதினர். ஏனெனில், ஏற்கெனவே உலகக்கோப்பையை வென்ற பீலே மற்றும் டீகோ மரடோனா ஆகியோரே மிகச்சிறந்தவர்கள் என்று பலராலும் கருதப்பட்டனர்.
"உலகக் கோப்பைகளில் எனது பயணத்தை ஓர் இறுதிப்போட்டியுடன் முடிப்பதிலும், கடைசிப் போட்டியை இறுதிப்போட்டியில் விளையாடுவதிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது உண்மையில் மிகவும் திருப்திகரமானது" என்று மெஸ்ஸி 2022 இறுதிப்போட்டிக்கு முன்பு கூறியிருந்தார்.
"இந்த ஆண்டிலிருந்து அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன. என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வழியில் முடிப்பது அற்புதமானது" என அவர் கூறியிருந்தார்.
அடுத்த ஆண்டு அவர் ஐரோப்பாவை விட்டு வெளியேறி எம்எல்எஸ் தொடரின் இண்டர் மியாமி அணியில் இணைந்தபோது, அவர் தனது கால்பந்து வாழ்க்கையை நிறைவு செய்யப் போகிறார் என்றே தோன்றியது.
கடந்த ஆண்டு அவர் விளையாடிய ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையின் போது கூட, இந்த கோடையில் அவர் பங்கேற்பாரா என்பது தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை.
ஆனால் இதோ, அவரது ஆட்ட முறை மாறினாலும், அவர் இன்னும் தடுக்க முடியாதவராக இருக்கிறார்.
இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக, இந்தத் தொடரில் அவர் கடந்த தூரத்தில் 47% தூரத்தை அவர் நடந்தே கடந்துள்ளார், இது எந்தவொரு கள வீரரையும் விட அதிக சதவிகிதமாகும்.
உத்தி ரீதியாக அவர் தன்னை குறைந்தது ஐந்து முறையாவது மறுசீரமைப்பு செய்துகொண்டுள்ளார் என்கிறார், மெஸ்ஸியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஸ்பானிஷ் பத்திரிகையாளர் கில்லெம் பலாக்.
மெஸ்ஸி இப்போது இண்டர் மியாமி மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காகத் தொடர்ந்து 13 போட்டிகளில் கோல் அடித்துள்ளார் அல்லது அசிஸ்ட் செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் ஒரு கோலில் பங்களித்தால், அது 2011 இல் அவர் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் செய்த சாதனையைச் சமன் செய்யும்.
மேலும் காஃபுவுக்குப் பிறகு மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.
அதுவே அவரது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்குமா? என்ன இருந்தாலும் 2030-ல் அவருக்கு 43 வயதாகிவிடும்.
ஆனால், எட்டு முறை பாலன் டி ஆர் விருதை வென்ற இவரைப் பொறுத்தவரை நாம் எதையும் முன்கூட்டியே கணிப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு