காவிரி விவகாரத்தில் திருப்பம் - தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட வேண்டிய நிலை கர்நாடகாவுக்கு ஏற்பட்டது ஏன்?

பட மூலாதாரம், X/@DKShivakumar
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கேரளத்தை வெள்ளத்தில் மூழ்கடித்த அதிதீவிர மழைப்பொழிவு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையேயான காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான உடனடிப் பிரச்னையை ஓரளவு தீர்த்து வைத்துள்ளது.
கர்நாடகா "நேற்று பிற்பகல் முதல்" தமிழ்நாட்டிற்கு நீரைத் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் அளவு கபினி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஆறு முன்னாள் முதல்வர்கள், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கலந்து கொண்ட இரண்டு மணி நேர அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு அவர் ஊடகங்களிடம் பேசினார்.
ஜூலை 29 முதல் 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்கு 3,500 கனஅடி நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பெய்த அதிதீவிர மழைப்பொழிவு, காவிரியின் நான்கு அணைகளுக்கான நீர்வரத்தை அதிகரித்தது.

பட மூலாதாரம், X/@DKShivakumar
கபினி அணையைப் பாதுகாக்க மட்டுமே நீர் திறப்பு
கபினி அணைக்குச் சுமார் 26,000 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணைக்குச் சுமார் 22,000 கனஅடியும், ஹாரங்கி அணைக்குச் சுமார் 10,440 கனஅடியும், ஹேமாவதி அணைக்குச் சுமார் 11,884 கனஅடியும் நீர் வந்தடைந்தது.
பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவைகளுக்காகச் சுமார் 36 டி.எம்.சி அடி நீர் தேவைப்படுகிறது, மேலும் ஆவியாதலுக்காகச் சுமார் நான்கு டி.எம்.சி அடி நீர் ஒதுக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் எந்தக் கூடுதல் நீரையும் திறக்கவில்லை. நீர்வரத்தைக் கட்டுப்படுத்தவும், அணையின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மட்டுமே நாங்கள் கபினி அணையில் இருந்து நீரைத் திறந்தோம். கபினி அணை நிரம்பிவிட்டது" என்று சிவகுமார் கூறினார்.
குடிநீருக்கு முதன்மை முன்னுரிமை அளித்து, கால்வாய் நீரை எச்சரிக்கையுடன் திறக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை யோசனை தெரிவித்தார்.
"கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் தலைவர்களும் இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை ஆதரித்தனர் மற்றும் பல பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன், சட்டக் குழுவுடன் கலந்தாலோசிக்கும் போது அந்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும்," என்று சிவகுமார் கூறினார்
ஒரு வழக்கமான மழை ஆண்டில், கர்நாடகா தமிழ்நாட்டிற்கு 177 டி.எம்.சி நீரைத் திறக்க வேண்டும். தென்மேற்கு பருவமழையின் சீரற்ற போக்கின் காரணமாக, ஜூலை மாதத்தில் 40 டி.எம்.சி நீர் திறக்கப்பட வேண்டிய இடத்தில், கர்நாடகாவால் வெறும் 3.6 டி.எம்.சி அடி நீரை மட்டுமே திறக்க முடிந்தது.
தமிழ்நாட்டின் கோடைக்கால/பருவமழைக் கால நெல் சாகுபடியான குறுவை பயிரைக் காப்பாற்ற இந்த நீர் அவசியமாகத் தேவைப்படுகிறது.

விஜய் கூறியது என்ன?
திமுகவின் நலனுக்காகச் செயல்படுவதாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த சிவகுமார், "இல்லை. நான் யாருடைய சார்பாகவும் பேசவில்லை. எனக்குத் தமிழ்நாடும் ஒன்றுதான், கர்நாடகாவும் ஒன்றுதான். நாங்கள் மேகேதாட்டு அணையைக் கட்ட விரும்புகிறோம். இதன் தொண்ணூறு சதவீத நன்மை கர்நாடகாவை விடத் தமிழ்நாட்டிற்கே செல்கிறது," என்றார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறு செய்வதற்கே இந்த முயற்சி என்று தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்து குறித்த மற்றொரு கேள்விக்குத் சிவகுமார் பதிலளிக்கையில், "இல்லை. ஒருபோதும் அப்படி இல்லை. அவர் ஒரு நல்ல மனிதர், அவருக்கு எனது முழு மரியாதையையும் வழங்க விரும்புகிறேன். நாங்கள் அவருக்குப் புரிய வைக்க விரும்புகிறோம், அவரும் புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன். அவர் அரசியலுக்குப் புதியவராக இருந்தாலும் மிகவும் முதிர்ச்சியடைந்தவராக உணர்கிறேன். அவர் துணிச்சலான ஒரு தலைவர்.'' என்றார்
"முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும், அவர் கர்நாடகாவிற்கு வர விரும்பினார். எனது நண்பர்கள் யாரும் இங்கே கூச்சலிடுவதை நான் விரும்பவில்லை என்பதால் நான் அவரிடம் இன்னும் சிறந்த, மிகவும் இணக்கமான சூழலில் சந்திக்குமாறு மட்டுமே கேட்டுக்கொண்டேன். நாம் நமது நண்பர்களை மதிக்க வேண்டும். நாம் ஒன்றாக வாழ வேண்டும். நாம் இணைந்து செயல்பட வேண்டும். இறுதியில், இந்தியா ஒன்றுதான்," என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































