நீரஜ் சோப்ராவை முந்தி தங்கம் வென்ற இலங்கை வீரர் - கிரிக்கெட்டை விட்டு ஈட்டி எறிதலுக்கு மாறிய அவர் யார்?

நீரஜ் சோப்ரா, ருமேஷ் பத்திரகே, ஈட்டி எறிதல், காமன்வெல்த் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீரஜ் சோப்ரா
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இலங்கையின் ருமேஷ் பத்திரகே 89.75 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். நீரஜ் 85.83 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

மற்றொரு இந்திய வீரரான யஷ்விர் சிங், தனது தனிப்பட்ட சிறந்த அளவாக 85.41 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர வீரரும், நீரஜின் போட்டியாளருமான அர்ஷத் நசீம் ஒன்பதாவது இடத்தையே பிடித்தார்.

பலமான எதிர்காற்று வீசியபோதிலும், நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 80.97 மீட்டர் தூரம் எறிந்தார்.

இரண்டாவது முயற்சியில் சிறப்பாக மீண்டு வந்த நீரஜ், முழு பலத்துடன் ஈட்டியை எறிந்தார்.

நீரஜை ருமேஷ் பத்திரகே முந்தியது எப்படி?

நீரஜ் சோப்ரா, ருமேஷ் பத்திரகே, ஈட்டி எறிதல், காமன்வெல்த் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கையின் ருமேஷ் பத்திரகே, நீரஜ் சோப்ராவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஸ்கோர் போர்டில் 85.83 மீட்டர் தூரத்தை பதிவு செய்ததன் மூலம், இந்த சீசனில் தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய நீரஜ் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் முதல் இடத்தில் இருந்தார்.

பின்னர் நீரஜ் 81.29 மீட்டர் மற்றும் 80.73 மீட்டர் என மேலும் இரண்டு முறை எறிந்தார். அவரது ஐந்தாவது மற்றும் ஆறாவது முயற்சிகள் ஃபவுல் ஆயின.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டோக்கியோ உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு, நீரஜ் வெல்லும் முதல் முக்கிய பதக்கம் இதுவாகும்.

ஆனால் அவரது முதலிடம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

சிறிது நேரத்திலேயே, இந்த சீசனின் உலகின் முதன்மை ஈட்டி எறிதல் வீரரான இலங்கையின் ருமேஷ் பத்திரகே, 89.75 மீட்டர் தூரத்திற்கு அற்புதமாக ஈட்டியை எறிந்தார்.

இதற்குப் பிறகு, பத்திரகே தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் முன்னிலை பெற்று, இறுதியில் தங்கத்தையும் வென்றார்.

இந்த ஆண்டில் சிறந்த ஃபார்மில் இருக்கும் ருமேஷ் பத்திரகே, ஒரே ஒரு முறை மட்டுமே செல்லுபடியாகும் வகையில் ஈட்டி எறிந்தார்; அது நீரஜை விட அவருக்கு முன்னிலை பெற்றுத் தந்தது. ருமேஷ் பத்திரகே தற்போது உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராகக் கருதப்படுகிறார்.

இந்த சீசனில் 92.62 மீட்டர் தூரம் எறிந்து உலகின் சிறந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த ஆண்டு தான் பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ரோம் டைமண்ட் லீக்கில் 2026ஆம் ஆண்டு சீசனில் 90 மீட்டர் எல்லையைக் கடந்த முதல் ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையை ருமேஷ் பத்திரகே பெற்றார்.

23 வயதான பத்திரகே 92.62 மீட்டர் எறிந்து புதிய போட்டி சாதனை, புதிய இலங்கை தேசிய சாதனை மற்றும் சீசனின் உலகின் சிறந்த சாதனையைப் படைத்தார்.

தகுதிச் சுற்றுக்குப் பிறகு, நீரஜ் சோப்ராவும் ரொமேஷைப் பாராட்டினார்.

"அவர் நல்லவர். அவர் என் நண்பர். இந்த ஆண்டு அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவர் இலங்கைக்காகப் பெரிதாக ஏதோ ஒன்றைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று நீரஜ் கூறியிருந்தார்.

ருமேஷ் பத்திரகே என்பவர் யார்?

நீரஜ் சோப்ரா, ருமேஷ் பத்திரகே, ஈட்டி எறிதல், காமன்வெல்த் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ருமேஷ் பத்திரகே முன்னதாக கிரிக்கெட் விளையாடியவர் மற்றும் ஒரு மிதவேகப் பந்துவீச்சாளர் ஆவார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவலின்படி, ருமேஷ் பத்திரகே ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு ஒரு மிதவேகப் பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால் பின்னர் ஈட்டி எறிதல் விளையாட்டுக்கு மாறினார்.

அவரது பயிற்சியாளர் டோனி பிரசன்னா தான் அவரை இந்த விளையாட்டில் அறிமுகப்படுத்தினார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான நேர்காணலில் ருமேஷ் கூறுகையில், "பயிற்சியாளர் டோனி தான் எனக்கு ஈட்டி எறிதலை அறிமுகப்படுத்தினார். அடிப்படை நுட்பங்களைச் சரியாகக் கற்றுக்கொண்டு, அதில் உறுதியாக இருந்தால், என்றாவது ஒரு நாள் அதற்குப் பலன் கிடைக்கும் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் எனக்குப் பயிற்சியாளர் மட்டுமல்ல, விளையாட்டு மற்றும் வாழ்க்கையைப் பற்றியும் எனக்குக் கற்றுத் தருகிறார்" என்றார்.

தனது பதின்ம பருவத்தில், ருமேஷ் சுமார் 130 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசக்கூடியவராக இருந்தார்.

18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அவர் ஒருமுறை மணிக்கு 134 கிலோமீட்டர் வேகத்தை எட்டினார்.

அந்தப் போட்டியில், இலங்கை மற்றும் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் இஷான் மாலிங்காவுக்கு அடுத்தபடியாக அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

85 மீட்டர் எல்லையைக் கடந்த பிறகு தனது ஃபார்மைத் தக்கவைக்கத் தவறிய முன்னாள் இலங்கை ஈட்டி எறிதல் வீரர் சுமேதா ரணசிங்கவைப் போலல்லாமல், ரொமேஷின் வாழ்க்கையின் அடையாளமாக இருப்பது அவரது நிலையான செயல்பாடே ஆகும்.

ருமேஷ் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

யஷ்வீர் சிங்கிற்கு வெண்கலப் பதக்கம்

நீரஜ் சோப்ரா, ருமேஷ் பத்திரகே, ஈட்டி எறிதல், காமன்வெல்த் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் யஷ்வீர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது நட்சத்திரமாக யஷ்வீர் உருவெடுத்தார்.

கடைசி சுற்று தொடங்குவதற்கு முன்பு, யஷ்வீர் ஆறாவது இடத்தில் இருந்தார்.

உலக சாம்பியனான கெஷோர்ன் வால்காட் 82.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அவரை ஏழாவது இடத்திற்குத் தள்ளினார்.

ஆனால் யஷ்வீர் தனது கடைசி முயற்சியில் 85.41 மீட்டர் தூரம் எறிந்து தனிப்பட்ட முறையில் புதிய சாதனையைப் படைத்தார்.

இது அவரை நேரடியாக வெண்கலப் பதக்கம் வெல்லும் நிலைக்குக் கொண்டு சென்றது; இதன் மூலம் அவர் தனது வாழ்க்கையின் முதல் முக்கிய பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் மூன்றாவது வீரரான ரோஹித் யாதவ், சிறிது நேரம் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

ஆனால் தென்னாப்பிரிக்காவின் டவ் ஸ்மித் 82.88 மீட்டர் தூரம் எறிந்து அவரைப் பின்னுக்குத் தள்ளினார்.

ரோஹித்தின் சிறந்த செயல்பாடு அவரது இரண்டாவது முயற்சியில் வெளிப்பட்டது. அப்போது அவர் 81.56 மீட்டர் தூரம் எறிந்தார். போட்டி முடிவில் அவர் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

பாகிஸ்தானின் அர்ஷத் நதீமின் செயல்பாடு எப்படி இருந்தது?

நீரஜ் சோப்ரா, ருமேஷ் பத்திரகே, ஈட்டி எறிதல், காமன்வெல்த் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீரஜின் போட்டியாளரான பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார்.

பாகிஸ்தானுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ள அர்ஷத் நதீமால் ஒன்பதாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இறுதிப் போட்டியில் அர்ஷத்தால் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

அவரது முதல் முயற்சி ஃபவுல் ஆனது; அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது முயற்சிகளில் முறையே அவர் 77.41 மீட்டர் மற்றும் 75.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

12 வீரர்களில் அவர் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். முதல் 8 இடங்களுக்குள் அவரால் நுழைய முடியாமல் போனது.

இதனால், வெறும் மூன்று சுற்றுகளுக்குப் பிறகு அவர் போட்டியிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது?

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் எட்டாவது நாளில் இந்தியா மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றது. இதில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். ஜூடோ வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை அஸ்மிதா டே வென்று தந்தார்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஹர்ஷ் சிங் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். யாமினி மௌரியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தடகளப் போட்டியில், டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தேஜஸ்வின் சங்கர் சாதனை படைத்தார்;

இதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

பதக்கப் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. இந்திய அணி இதுவரை 5 தங்கம், 12 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உட்பட மொத்தம் 23 பதக்கங்களை வென்றுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு