You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லொஸ்லியா தந்தை மரணம்: கலங்கும் பிக்பாஸ் ரசிகர்கள் - இலங்கைக்கு உடலை கொண்டு வர நடவடிக்கை
"பிக்பாஸ்" புகழும், தென்னிந்திய திரைப்பட நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், உடல் சுகவீனத்தால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் வாழ்ந்து வந்த மரியநேசன், நேற்றைய தினம் தனது 52வது வயதில் காலமானார்.
மரியநேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அவரது உடலை, தாய்நாடான இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வருகிறது.
அதேபோன்று, லொஸ்லியா, தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார்.
இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடுகளில் இருந்து வருகின்றமையினால், லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் பூதவுடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சில சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில், பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி, அவரது உடலை தாயகத்துக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, லொஸ்லியாவின் தந்தை உயிரிழந்த தகவல் தொடர்பாக அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
லொஸ்லியாவும் மரியநேசனும்
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டு லொஸ்லியாவின் குடும்பம் வாழ்ந்து வந்தது.
யுத்த சூழ்நிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரை நோக்கி லொஸ்லியாவின் குடும்பம் பின்னரான காலத்தில் இடம்பெயர்ந்தனர்.
மிகவும் வறுமை நிலைமைக்கு மத்தியில் வாழ்ந்த மரியநேசன், குடும்பத்தின் கஷ்ட சூழ்நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடன், 2009ஆம் ஆண்டில் தொழில் வாய்ப்புக்களை தேடிஅவர் கனடா சென்றார்.
அப்போது லொஸ்லியா தனது இரண்டு சகோதரிகளுடனும், தாயின் அரவணைப்பிலும் இலங்கையிலேயே வாழ்ந்தார்.
லொஸ்லியாவின் தந்தை தனது உழைப்பில் குடும்பத்தை சிறந்ததொரு இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பல வருடங்களின் பின்னர் தனது தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அப்போதே அவருக்கு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென நிகழ்ச்சிக்குள் மரியநேசன் வருகை தந்து, லொஸ்லியாவை அவேசமாக திட்டிய காட்சி, ரசிகர்கள் மத்தியில் இன்றும் நினைவில் இருக்கும் ஒரு சம்பவமாக காணப்படுகிறது.
அந்த சம்பவமே, மரியநேசனை உலகறிய செய்தது.
அது தொடர்பான காட்சியில், "என்ன சொல்லி வந்த நீ... நான் உன்னை அப்படியா வளர்த்தேன்... கதைக்கக்கூடாது..'' என மரியநேசன், லொஸ்லியாவை பார்த்து கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்த திரைப்பட இயக்குநர் சேரன், அவரை சமாதானப்படுத்த முயற்சித்த காட்சிகள் இன்றும் நினைவிலிருந்து நீங்காதுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், அந்த சில நிமிடங்கள் மாத்திரமே, லொஸ்லியா, தனது தந்தை மரியநேசனை பார்த்துள்ளதாக அவரது நண்பர்கள் பிபிசி தமிழிடம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சென்னையில் தற்போது வாழ்ந்து வரும் லொஸ்லியா, இலங்கைக்கு வருகை தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.
கொவிட் தொற்று இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் சூழலில், இலங்கைக்கு வருகை தருவதற்கான அனுமதியை கோரி லொஸ்லியா விண்ணப்பித்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: