கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில்
அதிமுக கட்சியே வெற்றி பெற்றது. இதனால், 2016 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த போது கொங்கு மண்டலத்தைச்
சேர்ந்தவர்களுக்கு முதன்மையான அமைச்சரவை இடங்கள் கிடைத்தன. முதல்வராக இருந்த ஜெயலலிதா
மறைவுக்கு பின்பு எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்துவரும் நிலையில்,
அதிருப்தி அலையால் கொங்கு மண்டலத்தில் திமுக பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை என்பதும், கொங்கு
மண்டலம் மீண்டும் அதிமுக-வுக்கு கைகொடுத்துள்ளது என்பதையும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள்
உணர்த்துகின்றன.
கொங்கு மண்டலத்தில் உள்ள 60 தொகுதிகளில் 41 தொகுதிகளில் அதிமுக
கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 18 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம்
கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் எட்டு தொகுதிகளிலும்,
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 8 தொகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில்
நான்கு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது.தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் அனைத்திலும்
அதிமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில்
நான்கு தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில்
அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக
கூட்டணியே முன்னிலையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் திமுக ஐந்து
தொகுதிகளில் முன்னிலையில் பெற்றுள்ளது.
மூன்று தொகுதிகளில் மட்டும் அதிமுக முன்னிலையில் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அதிமுக முன்னிலையில் உள்ள மூன்று தொகுதியில் இரண்டு அமைச்சர்களின்
தொகுதிகள் ஆகும்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில்
திமுக முன்னிலை பெற்று வருகிறது. ஒரே தொகுதியில் மட்டும் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது.கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக
கூட்டணியில் இடம்பெற்ற பாஜக கட்சியில் நட்சத்திர வேட்பாளரான அண்ணாமலையும் பின்னடைவைச்
சந்தித்து வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட
பிஜேபி கட்சியில் மாநிலத்தலைவர் எல். முருகன் முன்னிலை பெற்று வருகிறார்.
அதிமுக கட்சிக்கு மீண்டும் கொங்கு மண்டலம் கைகொடுத்திருக்கிறது
என்பதையே தேர்தல் முன்னிலை நிலவரங்கள் உணர்த்துகின்றன.
கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல்,
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.