You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியேற்பு எப்போது? எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு?

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு இன்னும் 2 தொகுதிகளுக்கு முடிவு, இன்று அறிவிக்கப்படவுள்ளது. எனவே கள நிலவரம் குறித்த அண்மைய தகவல்களை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

    ஆத்தூர் (தனி) தொகுதியில் 8297 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி வேட்பாளர் ஜெயசங்கரன் வெற்றி பெற்றுள்ளார்.

    தர்மபுரிமாவட்டம்பாலக்கோடுதொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.அன்பழகன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முருகனை விட 28100 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில்திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தை காட்டிலும் 31,646 வாக்குகள் கூடுதலாக பெற்றுஅமைச்சர் தங்கமணி வெற்றி பெற்றுள்ளார்.

    ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  2. புதுச்சேரி தேர்தல் முன்னிலை நிலவரம்

    தேசிய ஜனநாயகக் கூட்டணி - 12 வெற்றி

    என்.ஆர்.காங்கிரஸ் - 9 பாஜக - 3

    மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி - 5 வெற்றி

    காங்கிரஸ் - 2 திமுக - 3 சுயேட்சை - 5 வெற்றி

  3. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோதி

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ”தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும், பிராந்திய தேவைகளை பூர்த்தி செய்யவும், கொரோனா பெருந்தொற்றை வீழ்த்தவும் நாம் இணைந்து செயல்படலாம்” என பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் வாழ்த்து

    இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், தலைவர்கள் பலர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்து செய்தியில் ”நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

  4. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் நிலவரம்

    கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்தகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

    அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

    2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றிபெற்ற வசந்த் அன்ட் கோ வணிக நிறுவனர் வசந்தகுமார், 2020 ஆகஸ்ட் மாதம் காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழக சட்டபேரவை தேர்தலின் போது நடைபெற்றது.

    முன்னதாக, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தபின் வெற்றி வாய்ப்பு மிகவும் நன்றாக இருப்பதாக விஜய் வசந்த்குமார் தெரிவித்திருந்தார்.

    இந்த தொகுதியில் தந்தை வசந்தகுமார் வைத்திருந்த கனவை நனவாக்குவதே தலையான கடமை என்று உணர்ந்து, அவரது மறைவுக்கு பின்பு, அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக விஜய் வசந்த் தெரிவித்திருந்தா

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் முன்னிலை

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் 1114 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி மொத்தம் 26 சுற்றுகளில், 24 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதன் முடிவில் 48,270 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முதலிடத்தில் உள்ளார். 47,156 வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 40,234 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

  6. வெற்றி பெறும் திமுக வேட்பாளர்கள்

    திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு 60,849 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பழனி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் குமார் 1,07,270 வாக்குகள் பெற்று 77,709 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் டெப்பாசிட் இழக்கச்செய்துள்ளர் ஐ.பெரியசாமி

    ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 22வது சுற்று முடிவில் திமுக கண்ணன் 78634 வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளார்.

    திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த கொமதேக தலைவர் ஈஸ்வரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பொன்.சரஸ்வதியை விட 1750 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்

  7. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    “தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  8. புதுச்சேரி அரசியல் களத்தை தன் வசமாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, நடராஜன் சுந்தர், புதுவையிலிருந்து பிபிசி தமிழுக்காக

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு இடையே இரு முனை போட்டி நடைபெற்றது.

    கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணி தொடங்கி முன்னணி நிலவரங்கள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்தே பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

    புதுச்சேரி அரசியல் வரலாற்றில் இந்த 2021 சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருந்த நிலையில், முக்கிய பிரமுகர்கள் விலகியதால் கட்சி தலைமைக்கு சட்டமன்ற தேர்தலில் முகம் தெரிந்த வேட்பாளர்கள் இல்லாத காரணத்தினால் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என்ற குழப்பமான சூழல் நிலவியது. இதன் காரணமாக கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, இந்த முறை 6 தொகுதிகள் குறைந்து 15 தொகுதிகளில் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டது. மேலும், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணராவ் என்.ஆர்.காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்ட காரணத்தினால், ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதற்கு மாறாக ஏனாம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களாக பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி உள்ளிட்டோர் தோல்வி அடைந்துள்ளனர்.

    இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அறிமுகம் இல்லாத வேட்பாளர்கள், தொகுதியில் செல்வாக்கு குறைந்த வேட்பாளர்களை கொண்டு களம் கண்டது அக்கட்சிக்கு சரிவாக அமைந்துள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் மக்கள் நல திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியாமல் போனது காங்கிரஸுக்கு பாதமாக மாறியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களில், பாஜக குறைந்த பட்ச வாக்குகள் பெற முடியாமல் இருந்தனர்.

    இந்த நிலையில், இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, மாற்று கட்சியை சேர்ந்த முகம் தெரிந்த அரசியல் பிரபலங்களை பாஜக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரியின் அரசியல் ஆளுமை பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் என்.ரங்கசாமியின் ஈர்ப்பு பாஜக வெற்றிக்கு படிக்கட்டுக்களாக அமைந்துள்ளது என மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  9. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் அதிமுகவின் தோல்விக்கு காரணமா? – பிபிசி தமிழின் நேரலை

  10. தமிழக தேர்தல் முடிவுகள் – சில முக்கிய தகவல்கள்

    அதிமுக இரு இடங்களிலும் திமுக இரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 75 இடங்களிலும் திமுக 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    பாஜக மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் மநீம சார்பில் முன்னிலையில் உள்ளார்.

    பாமக 6 தொகுதியிலும், விடுதலை சிறுத்தைக் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் இரு தொகுதியிலும் , இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) இரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

    எடப்பாடி தொகுதியில் மொத்தம் 28 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 92, 700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ’திமுகவை ஆறாவது முறையாக ஆட்சியமைக்க கட்டளையிட்ட மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’ என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, 92700 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பழனிசாமி வெற்றிமுகம்

    எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வாக்குகள் மொத்தம் 28 சுற்றுகள் வரை எண்ணப்படுகின்றன. தற்போது 28 வது சுற்று முடிவடைந்துள்ள நிலையில் அங்கு போட்டியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 92700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

  12. ’மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி’ - ஸ்டாலின்

    திமுகவை ஆறாவது முறையாக ஆட்சியை செலுத்த கட்டளையிட்ட மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்மொழிக்கும் - இனத்துக்கும் - நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கழகத்திடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைக் கழகக் கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள்.

    தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கழக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும்.

    ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் - ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.

    ஜனநாயகப் போர்க்களத்தில் தி.மு.க. கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

    தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும்.” என மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  13. மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் டிஎம்சி

    மேற்கு வங்க தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 294 இடங்களில் 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதையடுத்து, அக்கட்சி மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகி விட்டது.

    நந்திகிராம் தொகுதியில் தேர்தல் களம் கண்ட முதல்வர் மமதா பானர்ஜி, அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரியை சுமார் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக இன்று மாலை 4.45 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நந்திகிராம் தொகுதியில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தை எதிர்த்து மமதா பானர்ஜி கடுமையாக குரல் கொடுத்த விவகாரம் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸுக்கு ஆதரவான மனநிலையை வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, புதுச்சேரி தேர்தல் முன்னிலை நிலவரம்

    தேசிய ஜனநாயகக் கூட்டணி - 11

    என்.ஆர்.காங்கிரஸ் - 7

    பாஜக - 4

    மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி - 6

    காங்கிரஸ் - 3 திமுக - 3 சுயேட்சை - 3

  15. ஏம்பலம், காரைக்கால் நெடுங்காடு, காரைக்கால் வடக்கு தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி

    புதுச்சேரி ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட லட்சுமிகாந்தன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கந்தசாமியை விட 2576 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில் லட்சுமிகாந்தன் 13,701 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி 11125 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

    காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டசந்திர பிரியங்கா 2,214 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதில் இவர் அதிக பட்சமாக 10,774 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து 8560 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    காரைக்கால் வடக்கு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமுருகன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏவி.சுப்ரமணினை விட 135 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில் திருமுருகன் 12,704 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஏவி.சுப்ரமணியன் 12569 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

  16. மு. க. ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

    தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக அதிக தொகுதிகளில் முன்னணியில் இருந்துவரும் நிலையில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பிகார் மாநில முன்னாள் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவ், தமிழக தேர்தல் வெற்றிக்காக மு. க. ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்வதாக ட்விட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஒமர் அப்துல்லாவும், திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் ஸ்டாலினுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

    மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான சுப்ரியா சுலேவும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி அதிமுக 78 தொகுதிகளிலும், திமுக 124 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதியிலும், காங்கிரஸ் 16 தொகுதியிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும், பாமக 6 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தை கட்சி 3 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சி 2 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

  18. புதுச்சேரி நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக வெற்றி

    புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரிச்சர்ட் ஜான்குமார் 496 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி. இவர் 11,757 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 11261 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை உள்ளார்.

    அதேபோல மண்ணாடிப்பட்டுதொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் 2750 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் 14,939 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிருஷ்ணன் என்கின்ற ஏ.கே.குமார் 12189 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை உள்ளார்.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான 15வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் 98,647 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    அவர் பெற்றுள்ள வாக்குகள் 3,33,665 ஆகும். பாஜக சார்பில் போட்டியிட்ட இராதகிருஷ்ணன் 2,33,665 வாக்குகளை பெற்றுள்ளார்.

  20. வால்பாறை தொகுதியில் அதிமுக வெற்றி

    வால்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுல் கந்தசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வால்பாறை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 1,43, 584 வாக்குகள் பதிவாகின. 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

    இங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுல்கந்தசாமி 70,957 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர்ஆறுமுகம் 58,694 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், நாம்தமிழர்கட்சி வேட்பாளர் கோகிலா 7560 வாக்குகள் பெற்று மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.

    வால்பாறை தொகுதியில் வெற்றிபெற்றுள்ள அதிமுக வேட்பாளர் அமுல்கந்தசாமியிடம் தேர்தல் அலுவலர்கள் வெற்றிக்கான சான்றிதழ்வழங்கினர்.