பொருளாதார தடைகள் ரஷ்யாவை மிகவும் பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.
கிழக்கு யுக்ரேனின் பிரிவினைவாத கட்டுப்பாட்டுப் பகுதிகளை அங்கீகரிக்கும் முடிவை ரஷ்யா எடுத்துள்ள நிலையில், அந்நாடு மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் சாத்தியம் மிக்க பொருளாதாரத் தடைகள் பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் பாரிஸில் நடந்த செய்தி யாளர் சந்திப்பில் விவரித்தார்.
பொருளாதாரத் தடைகள் "ரஷ்யாவை காயப்படுத்தும்.அது மோசமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவுடன் கொண்டுள்ள வலுவான ஒருங்கிணைப்பின் வரிசையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இது குறித்து விவரித்த ஜோசப் பொரெல், இந்த தடைகள் யுக்ரேனிய பிரிவினைவாத பகுதிகளில் ரஷ்யா அதன் படைகளை குவிக்க ஆதரவாக வாக்களித்த 351 எம்பிக்களுக்கும் மற்றும் அதை முன்மொழிந்த 11 பேருக்கு எதிராகவும் இருக்கும் என்று கூறினார்.
"யுக்ரேனின் இறையாண்மையை குறை மதிப்பிட்ட நடவடிக்கையில் அவர்களும் ஒருவராக கருதப்படுவர்" என்றார் பொரெல்.
அவரது கூற்றுப்படி, யுக்ரேனிய நிறுவனங்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட முடிவெடுப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பவர்கள் மீது இந்த தடை பாயும்.
யுக்ரேனுக்கு எதிராக தவறான தகவலை பரப்புவோர் மற்றும் அந்நாடு மீதான படையெடுப்பு நடவடிக்கையில் தொடர்புடைய பாதுகாப்புத்துறை, பாதுகாப்பு தளவாட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மீது தடை பாயும்.
யுக்ரேனிய பிராந்தியங்களில் இயங்கும் பிரிவினையாத பகுதிகளுக்கு நிதியளிக்கும் வங்கிகள் மீதும் பொருளாதார தடை நடவடிக்கை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.