You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சிவகங்கையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 11 பேர் பலி

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் வீடு உள்பட 11 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

    அவர்களின் வீடுகள் மட்டுமல்லாமல், நடிகர் அரவிந்த் சாமி, கங்கை அமரன், லிவிங்ஸ்டன், இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ், செஸ் வீரர் பிரக்ஞானந்தா, குஷ்பு ஆகியோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் நடத்திய சோதனையில் இவை அனைத்தும் புரளி என்று தெரியவந்தது.

  2. தேசிய கார் பந்தயம்: கோவையில் சீறி பாய்ந்த கார்கள்!

    கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவேயில் தேசிய அளவிலான கார் பந்தயம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, டெல்லி, மராட்டியம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

    மிக முக்கிய பந்தயமான எல்.பி.ஜி. பார்முலா 4 பந்தயத்தில் பெங்களூருவை சேர்ந்த வீரர் துருவ் கோஸ்வாமி 19 நிமிடம், 58 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். ருகன் ஆல்வா 2-ம் இடமும், தில்ஜித் 3-ம் இடம் பிடித்தனர்.

    நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் புவன் பானு முதலிடம், பொள்ளாச்சியை சேர்ந்த லோகித் லிங்கேஷ் ரவி 2-ம் இடமும், அபிஜித் 3-ம் இடம் பிடித்தனர்.

    கான்டினென்டல் ஜி.டி. கோப்பைக்கான போட்டியில் ஜார்கிங் வர்ஷா முதலிடம் பிடித்தார். பிராயன் நிகோலஸ் 2-ம் இடம், சரண்குமார் 3-ம் இடம் பிடித்தனர்.

    அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வீரர்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

  3. பாகிஸ்தானில் இருந்து கோதுமை, மாவு இறக்குமதியை நிறுத்தியது ஆப்கன்

    பாகிஸ்தானிடம் இருந்து கோதுமை இறக்குமதியை முழுமையாக நிறுத்தியிருக்கிறது ஆப்கானிஸ்தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலான அளவுக்கு பாகிஸ்தானிடம் இருந்து மாவு இறக்குமதி செய்திருந்தது ஆப்கானிஸ்தான்.

    அப்போது முதல் கொஞ்சம் கொஞ்சமாக இறக்குமதியைக் குறைத்துக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் இப்போது முழுமையாக அதை நிறுத்தியிருக்கிறது.

    இரு நாடுகளுக்கிடையேயான சமீபத்திய பதற்ற நிலையைத் தொடர்ந்து, ஆப்கன் தாலிபான் அரசு பாகிஸ்தானுடன் உள்ள வர்த்தக உறவுகளை முடித்துக்கொள்வது பற்றி பேசியிருந்தது.

    தனது வர்த்தகர்களுக்கு, பாகிஸ்தானைத் தவிர்த்து பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் வழிகளைத் தேட வேண்டும் என்று அறிவுறுத்தி தாலிபன் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    கடந்த சில தசாப்தங்களாக, ஆப்கானிஸ்தான் தனது வர்த்தகத்தின் பெரும்பகுதியை பாகிஸ்தான் வாயிலாகவே மேற்கொண்டு வந்தது; இது அதன் மொத்த வர்த்தகத்தில் சுமார் பாதி அளவாக இருந்தது.

    சர்வதேச மற்றும் ஆசிய சந்தை கண்காணிப்பு அமைப்புகளின் தரவுகளின்படி, 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு 320 மில்லியன் டாலர் மதிப்பில் மாவு ஏற்றுமதி செய்தது. ஆனால் தற்போது அது பூஜ்யமாகியிருக்கிறது.

    இனி மாவுக்காக பாகிஸ்தானை நம்பி ஆப்கானிஸ்தான் இல்லை என்பதை இது காட்டுகிறது.

    2024ம் ஆண்டு உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான் மற்றும் ரஷ்யாவிடமிருந்து 689 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கோதுமை மற்றும் மாவை ஆப்கானிஸ்தான் வாங்கியது. இது 2025ம் ஆண்டு 750 மில்லியன் டாலர்களாக உயரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

  4. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

    இலங்கை கடற்கரைக்கு தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    "இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வரை வீசக்கூடும். இடையிடையே 55 கி,மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (திங்கட்கிழமை 17/11/25) காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

  5. வணக்கம் நேயர்களே!

    இன்று (17-12-2025) பிற்பகல் வரை உலகம் முழுவதும் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தொகுத்து அளிப்பது பிரதீப் கிருஷ்ணா.