கர்நாடகா: மாநில காங்கிரஸில் தொடரும் குழப்பம் – டி.கே.சிவக்குமார் கூறியது என்ன?
கர்நாடக காங்கிரஸில் தொடரும் குழப்பங்களுக்கு மத்தியில், துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பிடிஐ செய்தி முகமையிடம் பேசியபோது, "காங்கிரஸ் கட்சி நீண்ட வரலாற்றைக் கொண்டது. டெல்லி எப்போதும் எங்களுக்கு வழிகாட்டியுள்ளது. நாங்கள் இங்கு (கர்நாடகாவில்) அரசாங்கத்தில் இருக்கலாம், ஆனால் இறுதியில் நாங்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்டமைப்பிற்குள் பணியாற்ற வேண்டும். எனவே, கட்சி எப்போது முதலமைச்சருடன் என்னை டெல்லிக்கு அழைத்தாலும், நாங்கள் செல்வோம்," என்று கூறியுள்ளார்.
"என்னுடைய சமூகம் காங்கிரஸ். ஆம், நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம், அவர்களுக்கு என்னைப் பிடிக்கும், ஆனால் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்துடனும் அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தாலும், சிறுபான்மையினராக இருந்தாலும், அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி எனக்குத் தொடர்பு உள்ளது. ஒக்கலிகர்களும்கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே," என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக வியாழக்கிழமை அன்று, டி.கே. சிவக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளிட்ட பதிவில், “ஒருவர் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதுதான் உலகில் மிகப்பெரிய சக்தி. அது நீதிபதியாக இருந்தாலும், குடியரசுத் தலைவராக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும், ஏன் நானாக இருந்தாலும் சரி. எல்லோரும் அவர்கள் சொல்வதைப் பின்பற்ற வேண்டும். வாக்கின் சக்திதான் உலக சக்தி," என்று குறிப்பிட்டிருந்தார்.
2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகளும் முதலமைச்சராக இருப்பார்கள் என்று காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக டி.கே. சிவக்குமார் சமீபத்தில் பேசியிருந்தார்.
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் அதன் இரண்டு தலைவர்களுக்கு இடையிலான மோதலால் ஆபத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் பதிவின் மூலம், காங்கிரஸ் தலைமை தனக்கு அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோருவதாகக் கூறப்படுகிறது.