ராகுலின் படத்துடன் தமிழக பாஜக பிரமுகர் பகிர்ந்த ட்வீட் சர்ச்சை ஆனது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ராகுல் காந்தியின் படத்துடன் தமிழ்நாடு பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் மாநில தலைவர் சி.டி. நிர்மல் குமார் வெளியிட்ட ட்வீட் சர்ச்சை ஆகியிருக்கிறது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவராக உள்ள சி.டி. நிர்மல் குமார் ஞாயிற்றுக்கிழமையன்று ராகுல் காந்தியை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ராகுல் காந்தி, தனது சகோதரி மகளுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்த அவர், "குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த #pappuவை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த பத்துப் பேரை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

(தற்போது இந்த ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது).

நிர்மல் குமாரின் இந்த ட்வீட்டிற்கு கடுமையான எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டன. அனுமதியின்றி, ராகுல் காந்தியின் உறவினரான பெண் குழந்தையின் படத்தைப் பகிர்ந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதித்ய கோஸ்வாமி என்பவர் டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார்.

தேசிய அளவில் வைரல்

இதற்கிடையே ஆல்ட் - நியூஸ் இணையதளத்தைச் சேர்ந்த முகமது ஜுபைர் இந்த விவகாரம் குறித்து, ஒரு ட்வீட்டைப் பதிவு செய்ய, இந்த விவகாரம் குறித்து இந்திய அளவில் கண்டனங்கள் வெளியாக ஆரம்பித்தன.

இதற்குப் பிறகு நிர்மல்குமார் தனது ட்வீட்டை நீக்கிவிட்டு, விளக்கம் ஒன்றை பதிவு செய்தார். "யாருடைய தனிப்பட்ட வாழ்வையும் பொதுவெளிக்குக் கொண்டுவருவது எனது நோக்கமல்ல. ராகுல் காந்தி குறித்த எனது தமிழ் ட்வீட் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. எனது ட்வீட்டின் உள்ளடக்கம் அரசியல் ரீதியானது என்பதாலும் அதில் எந்தத் தவறும் இல்லை என்பதாலும் அந்தக் கருத்திலிருந்து நான் பின்வாங்கவில்லை. ட்வீட்டை நீக்கிவிட்டேன்" எனப் பதிவுசெய்திருக்கிறார்.

கண்டித்த தமிழக அமைச்சர் பிடிஆர்

இதற்கிடையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் இந்த ட்வீட்டைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

"பெண்களைப் பற்றி மிக மோசமான கருத்துகளைக் கொண்டிருப்பவர்களிடமிருந்து இம்மாதிரி குப்பைகளைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாடு பா.ஜ.க. இதற்காக அவருக்கு விருதளித்துப் பாராட்டுமென நினைக்கிறேன். அவர் தன் தலைவரின் வழிகாட்டுதலைத்தான் நிறைவேற்றியிருக்கிறார்" என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், தனது ட்வீட் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாக நிர்மல்குமார் குற்றம்சாட்ட, அதைவைத்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.கவினர் ஆன்லைனில் புகார்களைத் தந்துவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து நிர்மல்குமாரின் கருத்தைப் பெற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: