You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லக்னெள நகரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி
உத்தர பிரதேச மாநிலம் லக்லக்னெளவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
லக்னெளவில் உள்ள தில்குஷா எனும் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
இந்த விபத்து கனமழை காரணமாக நிகழ்ந்துள்ளது என, காவல்துறை இணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பியூஷ் மோர்டியா தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பல்வேறு வட இந்திய மாநிலங்களில் நேற்று முதல் (செப். 15) தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
செப். 15 முதல் செப். 17 வரை உத்தர பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
- செப். 16, 17 தேதிகளில் உத்தர பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் மிதமான முதல் மிக கனமழை வரை பெய்யும்.
- உத்தராகண்ட் மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தில் செப். 17 அன்று, கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- பிகார், இமய மலைக்குக் கீழே உள்ள மேற்கு வங்கப் பகுதி மற்றும் சிக்கிம், குஜராத் மாநிலங்களில் இன்று (செப். 16) கனமழையும் செப். 18, 19ம் தேதிகளில் ஒடிஷாவில் கனமழையும் பெய்ய வாய்ப்புண்டு.
- அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் & திரிபுராவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர் மழையிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்த வழிகாட்டுதல்களை லக்னெள மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
பேரிடர் சமயங்களில் தொடர்புகொள்வதற்கென கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
செப். 17 வரை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என, லக்னெள மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவிலும் நடைபெற்றுள்ளது. உன்னாவ் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில், பெண் ஒருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூன்று பேர் உயிரிழந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்