You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழிசை சௌந்தரராஜன்: சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை தொடர்பாக விளக்கம்
"காலையில் முழுமன நிறைவோடு சிதம்பரம் நடராஜரின் ஆனி திருமஞ்சனம் விழாவில் தரிசனம் செய்துவிட்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பொதுநல வேண்டுதலுடன் கோயிலின் வெளியே வந்தால் வழக்கமாக சில வதந்திகளும், புரளிகளும் வருகிறது. அந்த புரளிகளை நான் புரந்தள்ளுகிறேன்," என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் தேரோட்ட விழாவிற்கு நேற்று காலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்றிருந்தார். அவர் கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த போது தீட்சிதர்கள் வேறு இடத்தில் அமரும்படி கூறி அவமதித்ததாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழிசை என்னை வேறு இடத்தில் அமரும்படி கூறியது உண்மை தான் ஆனால் அவமதிப்பு செய்யவில்லை என்று விளக்கமளித்தார்.
சிதம்பரம் கோயில் தொடர்பாக ஆளுநரின் விளக்கத்திற்கு பிறகும் அந்த விவகாரம் தமிழிசை சிதம்பரம் கோயில் தீட்சிதர்களால் அவமதிக்கப்பட்டார் என்ற கோணத்தில் சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியது.
இதனிடையே இந்த நிகழ்வு குறித்து தமிழிசை மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "நடராஜரும் நானும், இடையில் நாரதர்கள் வேண்டாம்," என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
அதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கோயில் நடந்த நடந்த சுவையான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.
"நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்வதற்காக சென்றேன்.
திருக்கோவில் நிர்வாகத்தினர் என்னை கோயிலில் வெளியே வந்து உள்ளே அழைத்துச் சென்று திருமஞ்சனம் நிகழ்வை காண்பதற்காக கோயிலில் ஒரு இடத்தில் அமரச் செய்தார்கள்.
பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்று என்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளை ஓரமாக அமர வேண்டும் என்று சொல்லி நானும் பொது மக்களின் தரிசனத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக அமர்ந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.
மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். யாரும் எனக்கு இடையூறு செய்யவில்லை. நானும் யாருக்கும் இடையூறு செய்யவில்லை.
தரிசனத்திற்கு இடையில் ஒருவர் என்னிடம் வந்து வேறு இடத்தில் அமர்ந்து கொள்கிறீர்களா? என்று கேட்டார்.
நான் அதற்கு அபிஷேகம் எனக்கு நன்றாக தெரிகிறது, நான் இங்கேயே அமர்ந்து கொள்கிறேன் என்று மட்டும்தான் கூறினேன்.
அதற்கு பின்பு அபிஷேகம் முடிந்தவுடன் சந்தனம், மாலை கொடுத்தார்கள். நானும் என்னருகில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் பிரசாதத்தை பகிர்ந்து கொண்டேன்.
நிறைவாக இறைவனுக்கு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. தங்க காசுகளால் நடைபெற்ற சொர்ணாபிஷேகத்தை மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.
சொர்ணாபிஷேகம் நிறைவடைந்தவுடன் அப்போது தீட்சிதர் ஒருவர் எனக்கு இரண்டு லட்டுகளை கொடுத்தார்.
லட்டுகளை கொடுத்துவிட்டு தீட்சிதர் என்னிடம் இறைவனின் அருள் உங்களுக்கு முழுவதுமாக உள்ளது இதை உங்களிடம் சொல்வதற்கு மிக ஆனந்தமாக உள்ளது என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியாமல் அவரை பார்த்தேன். அப்போது அவர் கூறினார் லட்டு மடித்திருக்கும் இந்த காகிதத்தை பாருங்கள் என்று கூறினார். நானும் பிரித்து பார்த்தேன் அதில் என்னுடைய வண்ணப்படம் இடம்பெற்றிருந்த ஒரு செய்தித்தாளாக இருந்தது.
கவர்னருக்கு லட்டு கொடுக்க வேண்டும் என்று ஒரு காகிதம் கொடுங்கள் என்று மற்றொரு தீட்சிதரிடம் தான் கேட்டதாகவும் அவர் கொடுத்த காகிதத்தில் என்னுடைய படம் இருந்ததாகவும் அப்போது தீட்சிதர் என்னிடம் கூறினார்.
ஆகையால் இந்த லட்டை உங்கள் படத்தோடு உங்களுக்கு தருகிறேன் என்றும் இது உங்களுக்கு நடராஜ பெருமான் அருளும் மானசீக ஆசிர்வாதமாக எனக்கு தோன்றியது என்றும் அவர் என்னிடம் கூறினார். இது ஒரு சுவையான அனுபவம்," என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்