You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் வீடுகளை இடிப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம் - 10 தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் திங்கட்கிழமையன்று மாநகராட்சி தங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்த முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறோம்.
- ஷாஹின் பாக் பகுதியில் டெல்லி காவல்துறை உதவியுடன் டெல்லி மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்ற அங்கு சென்றது. ஆனால், சற்று நேரத்திலேயே, அங்குள்ள பொதுமக்கள் வீதிகளில் அமர்ந்து, வீடுகளை இடிக்க பயன்படுத்தப்படும் புல்டோசர்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை கடந்த வெள்ளிக்கிழமையன்று அகற்ற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், இன்று மே 9-ம் தேதி திங்கள்கிழமை கட்டடங்களை இடிக்கத் தொடங்கிய நிலையில், சற்று நேரத்திலேயே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், இடிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
- சில நாட்கள் முன், டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வடக்கு டெல்லி மாநகராட்சி நடவடிக்கை ஒன்றை தொடங்கியது. ஆனால், எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் வீடு, கடைகளை இடிக்கும் பணிகள் தொடங்கியதால், இப்பணிகளை நிறுத்தும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து முஸ்லிம்களை குறிவைத்தே இந்த இடிப்புப் பணிகள் நடந்ததாக பரவலான விமர்சனம் எழுந்தது. இதன் காரணமாக, இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது.
- இந்த விவகாரத்தில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவு அளித்துள்ளன. ஓக்லாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கான் கூறுகையில், தாங்கள் இப்பகுதியில் ஏற்கனவே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டதாகவும், அத்தகைய ஆக்கிரமிப்பு கட்டடங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
- இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 10 நாள் நடவடிக்கைக்கான செயல் திட்டத்தை தெற்கு டெல்லி மாநகராட்சி வகுத்தது. இந்த நடவடிக்கையின் முதல் கட்டம், மே 13ம் தேதி வரை நடைபெறும்.
- முன்னதாக, போதிய பாதுகாப்பு படையினர் இல்லாததால், காளிந்தி குஞ்ச்-ஜாமியா நகர் பகுதியிலும், ஸ்ரீனிவாஸ்புரி பகுதியிலும், ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டன.
- பாஜக கட்சியின் டெல்லி தலைவரான ஆதேஷ் குப்தா, ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அமைத்த சட்டவிரோதமான கட்டுமானங்களை அகற்றக் கோரி, மாநகராட்சி மேயர்களுக்கு கடந்த மாதம் கடிதம் ஒன்றை எழுதினார்.
- ஜஹாங்கிர்புரி போன்று ஷாஹீன் பாக் பகுதியிலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். இது ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை அல்ல, புல்டோசர் நடவடிக்கை என்று மக்கள் கூறுகின்றனர்.
- டெல்லியின் ஷாஹீன் பாக், தெற்கு டெல்லி மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் உள்ளது. இது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் மையப் பகுதியாக இருந்தது ஷாஹீன்பாக். இந்த போராட்டம் கொரோனா தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் முடிவடைந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்