நாடு முழுவதும் இன்று முதல் 2 நாட்களுக்கு வேலை நிறுத்தம் - இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

இந்தியா - வேலை நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இன்றைய (மார்ச் 28) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொது போக்குவரத்தை தனியார் மயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும் ( மார்ச் 28 ), நாளையும் (மார்ச் 29) பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக 'தினமலர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது..

வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை. வேலை நிறுத்தத்தை ஒட்டி தமிழகத்தில் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னர், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால், 'பணியில்லை, சம்பளமில்லை' என்ற கொள்கை அடிப்படையில், அந்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்திருந்தார்.

கடந்த ஆட்சியில் வெளிநாட்டு பயணங்களால் என்ன முதலீடுகள் வந்தன? - அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது வெளிநாட்டு பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயில் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளதாக 'இந்து தமிழ் திசை செய்தி' வெளியிட்டுள்ளது.

துபாய் பயணம்

பட மூலாதாரம், @TThenarasu/Twitter

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமையன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மேற்கொண்டு இருக்கக்கூடிய துபாய் வெளிநாட்டு பயணத்தைக் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகள் குறித்து பேசியிருக்கிறார். நான் கேட்க விரும்புவது, அவர் முதல்வராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. இன்றைக்கு முதல்வர் இந்த மூன்று நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ 6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார். வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் கடந்த ஆட்சியில் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக ஈர்த்தாக சொல்லப்படும் முதலீடுகள் குறித்து சட்டமன்றத்தில் நான் மிகத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறி அவையெல்லாம் அவை குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.

இன்னொன்று, சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து பேசியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது, சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரித்தது என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் ", என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.

சென்னையில் 6வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கடந்த ஒரே வாரத்தில் 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images

பெட்ரோல் இன்று விலை ஒரு லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18க்கு விற்பனையாகிறது.

டீசல் விலை ஒரு லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றுதான் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

சென்னையில் கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.78, டீசல் விலை ரூ.3.90 அதிகரித்து உள்ளதாக கூறுகிறது தினத்தந்தி செய்தி.

ஹிஜாப் விவகாரத்தில் பெண்கள் குறிவைக்கப்பட்டுகிறார்கள் - மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்து

ஹர்னாஸ் சந்து

பட மூலாதாரம், Getty Images

சமூகத்தில் ஹிஜாப் விவகாரம் உட்பட பெண்கள் குறிவைக்கப்படுவதாக மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்து தெரிவித்துள்ளதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலானது. மார்ச் 17 தேதியன்று ஹர்னாஸ் சந்து கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ஒரு நிருபர் ஹிஜாப் விவகாரம் குறித்து அவரிடம் கேட்கிறார்.

அப்போது அரசியல் குறித்த கேள்விகளை தவிர்க்கலாம் என்று அந்நிகழ்ச்சி ஒருக்கிணைப்பாளர் கூறுகிறார். இந்நிலையில், நிருபரின் கேள்விக்கு பதிலளித்த ஹர்னாஸ் சந்து, "உண்மையில் கூறவேண்டுமெனில், நீங்கள் ஏன் எப்போதும் பெண்களை குறிவைக்கிறீர்கள்?

இப்போதும் நீங்கள் என்னை குறிவைக்கிறீர்கள். ஹிஜாப் விவகாரத்தில் கூட பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள். பெண்கள் அவர்கள் விரும்பும்படி வாழ விடுங்கள். அவர்களின் சிறகுகளை வெட்டாதீர்கள்," என்று தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

ஒரு ரூபாய் நாணயங்கள் கொண்டு வாங்கிய பைக்

சேலம் - ஒரு ரூபாய் நாணயங்கள்

பட மூலாதாரம், Getty Images

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி என்பவர், பைக் ஒன்றை வாங்க, 2.6 லட்ச ரூபாய் தொகையை அனைத்தையும், ஒரு ரூபாய் நாணயங்களாக கொடுத்து வாங்கியிருக்கிறார்.

இது குறித்து ஆங்கில இணையதளமான 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' வெளியிட்டுள்ள செய்தியில், "கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கனவு பைக்கை வாங்க பூபதி பணம் சேமித்து வைத்துள்ளார்.

முதலில் தான் 2.6 லட்ச ரூபாய் தொகை மொத்தமும் நாணயங்களாக வாங்க தயங்கியதாகவும், பின்னர் அவருக்கு ஏமாற்றமளிக்க விரும்பாமல் நாணயங்களை பெற்றுக்கொண்டதாக கடை நிர்வாகி மஹாவிக்ராந்த் கூறியுள்ளார்.

இந்த நாணயங்களை, பூபதி, அவரது நண்பர்கள், கடை ஊழியர்கள் என சேர்ந்து பத்து மணி நேரத்தில் எண்ணி முடித்தனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :