இந்தியர்கள் பணம் சேமிக்க வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்கிறார்களா?

    • எழுதியவர், ஆகிருதி தபார்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

கடந்த 15 மாதங்களில், இந்தியாவின் 3 பெரிய வங்கிகள், மோசமான கடன்களால் (Bad debts) தத்தளித்தன. இதனால், இந்திய நிதி நிறுவனங்கள் வலுவாக இருக்கின்றனவா? என வல்லுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கொரோனாவால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு, எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. சமீபத்தில், எங்களின் சேமிப்புப் பணத்தைக் கூட வங்கிக் கணக்கில் இருந்து பெற முடியவில்லை. காரணம் எங்கள் வங்கி பிரச்சனையில் சிக்கி இருந்தது. எங்கள் ஊழியர்களுக்கு எப்படிச் சம்பளம் கொடுப்பது எனத் தெரியவில்லை என்கிறார் 50 வயது மங்கிலால் பரிஹார். இவர் தனியார் வங்கியான லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் செலுத்தி இருக்கிறார்.

மும்பை புறநகர் பகுதியில், மங்கிலாலுக்குச் சொந்தமாக ஒரு சிறிய கடை இருக்கிறது.

கவர்ச்சிகரமான வட்டி விகிதம் மற்றும் எந்த வங்கிக் கிளை தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து தான் இந்தியர்கள், பொதுவாக வங்கிகளைத் தேர்வு செய்து வருகிறார்கள். மங்கிலாலும் அப்படித் தான் தன் வங்கியைத் தேர்வு செய்தார்.

94 ஆண்டு பழமையான லக்ஷ்மி விலாஸ் வங்கியை, ஆர்பிஐ, கடந்த நவம்பர் மாதம் மாரடோரியம் எனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வங்கியின் நிதிநிலை மோசமாக இருந்ததால், லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் வைத்திருந்தவர்கள், மாதம் ஒன்றுக்கு 25,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாட்டையும் கொண்டு வந்தது ஆர்பிஐ.

தன் பணம் இப்படிப் பிரச்சனையில் சிக்குவது, இது முதல் முறை அல்ல என்கிறார் மங்கிலால். எட்டு வருடங்களுக்கு முன், ஒரு கூட்டுறவு வங்கி பிரச்சனையில் சிக்கிய போது, அந்த வங்கியில் செலுத்தி இருந்த பணத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு எடுக்க முடியாமல் மாட்டிக் கொண்டார் மங்கிலால்.

கடந்த 15 மாதங்களில், இப்படி நிதி நெருக்கடிகளைச் சந்திக்கும் மூன்றாவது வங்கியாகி இருக்கிறது லக்ஷ்மி விலாஸ் வங்கி.

கடந்த செப்டம்பர் 2019 காலத்தில், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிதி நெருக்கடிகளைச் சந்தித்தது. தற்போது 600 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் மோசடிக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 2020-ல், இந்தியாவின் ஐந்தாவது பெரிய வங்கியான யெஸ் வங்கி, தன் கடன்களை சரி செய்து மீண்டும் வியாபாரம் செய்ய போதுமான முதலீடுகளைத் திரட்ட முடியாமல் தவித்தது. ஆர்பிஐ களத்தில் இறங்கி யெஸ் வங்கிக்குத் தேவையான முதலீடுகளைக் திரட்டிக் கொடுத்தது.

லக்ஷ்மி விலாஸ் வங்கியை, சிங்கப்பூரின் மிகப் பெரிய வங்கியான டிபிஎஸ் உடன் இணைத்து காப்பாற்றியது ஆர்பிஐ.

ஆனால் இப்போது வரை பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணம் செலுத்தி இருக்கும் டெபாசிட்தாரர்கள், எதாவது நல்ல தீர்வு கிடைக்காதா எனக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் வித்யா மேர்வாட் என்பவரும் ஒருவர். 53 வயதாகும் இவர் வீட்டுக்குச் சென்று பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது இவரின் குடும்பம், வித்யாவின் வயதான தாயாரிடம் கடன் வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறது. பிஎம்சி வங்கியில் இருந்து பணத்தை எடுக்க முடியாததால், வித்யாவின் மகள் ஜெர்மனிக்குச் சென்று படிக்கும் திட்டம் மற்றும் அவரது மகனின் திருமணம் கிடப்பில் இருக்கின்றன.

எங்கள் மொத்த வாழ்கையின் சேமிப்பும் ஒரே அடியாக பறிபோய்விட்டது. நாங்கள் எப்படி வாழ முடியும் என கேள்வி எழுப்புகிறார் வித்யா.

ஆர்பிஐ, பிஎம்சி வங்கியில் இருந்து பணத்தை வெளியே எடுக்கும் அளவை மெல்ல அதிகரித்தது. ஆனால் தங்களுக்குத் தேவையான பணத்தை விட, ஆர்பிஐ அனுமதித்து இருப்பது மிகவும் குறைவு என வித்யா போன்ற டெபாசிட்தாரர்கள் கூறுகிறார்கள்.

வங்கிகளுக்கு ஏன் இந்த சிக்கல்கள்?

கடந்த பல ஆண்டுகளாக, கார்ப்பரேட் நிறுவன கடன்கள் திவாலானதால், இந்திய வங்கிகள் கடுமையான அழுத்தத்தில் இருக்கின்றன. இந்திய வங்கிகள் பல பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களை வாராக் கடன்களாக எழுதி வைக்க (Written off) வேண்டி இருந்தது.

பல பொருளாதார நிபுணர்களும் இதை "legacy bad debt problem" என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் வியாபாரங்களுக்கு தாராளமாகக் கடன் கொடுத்தது, இந்திய வங்கிகளின் மோசமானக் கடன்களை அதிகரிக்கச் செய்தது என்கிறார்கள் பல பொருளாதார வல்லுநர்கள்.

வங்கியாளர்கள் அதீத நம்பிக்கையில் கடன் கொடுத்தது தான், இந்திய வங்கிகளின் மோசமான கடன் அளவு அதிகரிப்புக்குக் காரணம் என முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.

தற்போதைய பொருளாதார சூழலுடன் தான், வங்கிகள் பிரச்சனைகளைச் சந்தித்து வருவதைப் பார்க்க வேண்டும். இந்தியா தொடர்ந்து பொருளாதார மந்தநிலையில் இருக்கிறது. கொரோனா பிரச்சனையால், இந்த பொருளாதார மந்த நிலை அதிகரித்து இருக்கிறது. இதனால் வங்கிகளில் மோசமான கடன்கள் அதிகரித்து இருக்கிறது என்கிறார் எஸ்பிஐ வங்கியின் முன்னாள் முதன்மைப் பொருளாதார நிபுணர் பிரிந்தா ஜாகிர்தார்.

மோசமான நிர்வாகம், தவறான நிர்வாகம் மற்றும் வங்கியின் இயக்குநர் குழுவின் மேற்பார்வை குறைந்தது போன்றவைகள், வங்கிகளின் மோசமான கடன்கள் அதிகரித்தமைக்கு மற்ற காரணங்களாக இருக்கும் என்கிறார் பிரிந்தா.

இது போல சில பின்னடைவுகள் இருந்தாலும், கடந்த ஆண்டுகளில், இந்திய வங்கிகள் அமைப்பு ரீதியாகவும் செயல்பாடுகள் ரீதியாகவும் வலுப்படுத்தப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் பொருளாதார நிபுணர் பிரிந்தா.

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா முதல் திவால் சட்டத்தைக் கொண்டு வந்தது. கடன் கொடுத்த வங்கிகள் பணத்தைத் திருப்பி வசூலிக்கும் விதத்தில், சட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இவைகள், டெபாசிட்தாரர்களின் பயத்தைக் குறைக்கவில்லை.

பிஎம்சி மற்றும் யெஸ் வங்கி இரண்டிலுமே வங்கிக் கணக்கு வைத்திருந்த ஜலஜா மேத்தா என்பவர், இரண்டு வங்கிகளுமே நெருக்கடிகளை எதிர்கொண்டதால் மிகவும் சிரமப்பட்டார்.

இனி ஒரு சிறிய தொகையை மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. என்னுடைய கணிசமான சேமிப்புகளை ரொக்கப் பணமாக வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஜலஜா மேத்தா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: