பிரதமர் நரேந்திர மோதி பார்வையிட்ட மருத்துவமனை - சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் புகைப்படம் - என்ன சொல்கிறது இந்திய ராணுவம்?

பிரசுரிக்கப்பட்டது

லே லடாக்கில் இந்திய ராணுவத்தினர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என்று கூறப்படும் விமர்சனத்தை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

விமர்சனம்

லே பொது மருத்துவமனை சென்ற மோதி அங்கு சிகிச்சை பெற்று வரும் இந்திய ராணுவத்தினருடன் உரையாடினார்.

இந்தப் புகைப்படம் பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

சிலர் இந்த புகைப்படத்தையும், சில ஆண்டுகளுக்கு முன் தோனி அங்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் ஒப்பிட்டு விமர்சித்து இருந்தனர். அதாவது, மோதி வருகைக்காகப் போலியாக அமைக்கப்பட்ட இடம் இது என்றும், போதுமான வசதிகள் அங்கு இல்லை என்றும் விமர்சித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்திய ராணுவம் இது குறித்து விளக்கமளித்துள்ளது.

துரதிர்ஷ்டம்

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிரதமர் நரேந்திர மோதி ஜூலை 03, 2020 அன்று லேவில் உள்ள பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்த போது பார்வையிட்ட மருத்துவமனை வசதியின் நிலை குறித்து சில பகுதிகளில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நமது துணிச்சலான ஆயுதப்படைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் அபிப்ராய பேதங்கள் முன்வைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஆயுதப்படைகள் தங்கள் பணியாளர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கின்றன.

இந்த 100 படுக்கைகளுடன் உள்ள மருத்துவ வசதி, நெருக்கடிக் காலத்தில் விரிவாக்கப்பட்டதில் ஒரு பகுதியாகும், இது பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது." என்கிறது.

மேலும் அந்த அறிக்கையில், "கோவிட்-19 நெறிமுறைகளின் படி பொது மருத்துவமனையின் சில வார்டுகளைத் தனிமைப்படுத்தும் வசதிகளுடையதாக மாற்ற வேண்டும். எனவே, பொதுவான பயிற்சி ஆடியோ வீடியோ ஹால் ஆகப் பயன்படுத்தப்பட்ட அரங்கம், ஒரு வார்டாக மாற்றப்பட்டது, ஏனெனில் இந்த மருத்துவமனை கோவிட் சிகிச்சைக்கான மருத்துவமனையாகவும் செயல்பட்டது.

கோவிட் பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கால்வானில் இருந்து வந்ததிலிருந்து காயமடைந்த வீர்ர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைமை இராணுவத் தளபதி ஜெனரல் எம். எம். நாரவனே மற்றும் ராணுவத் தளபதியும் அதே இடத்தில் காயமடைந்த வீர்ர்களை பார்வையிட்டனர்." என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: