You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து டெல்லி அரசு ஆலோசனை
இந்தியத் தலைநகர் டெல்லியில் லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுத்து வரும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு முன்னதாக எடுக்கவேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டெல்லி அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
டெல்லி தேசிய தலைநகர் பிரதேசத்தில், வெட்டுக்கிளிகள் தாக்குதலைத் தடுப்பதற்கும், ஏற்பட்டால் கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவேண்டும் என்று அழைப்பு விடுத்தள்ளது டெல்லி அரசு.
வழக்கமாக இந்த வெட்டுக்கிளிகள் பகலில் பறந்து செல்லும், இரவில் ஓய்வெடுக்கும். இரவு நேரத்தில் அவற்றை ஓய்வெடுக்க விடக்கூடாது என்றும் அந்த அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி வளர்ச்சி ஆணையர் இந்த அறிவுரையை வெளியிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு நேரத்தில் தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்கொள்ளத்தேவையான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க தம்முடைய இல்லத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் டெல்லி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கோபால் ராய் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
தற்போது இந்தியாவில் நாசத்தை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிக் கூட்டத்தில் பெரும்பாலான வெட்டுக்கிளிகள் வயது முதிர்ந்தவை அல்ல. நல்ல காற்று அடிக்குமானால் ஒரே நாளில் அவை நீண்ட தூரம் பறந்து செல்லும் வல்லமை உள்ளவை. இந்தக் காரணத்தால் அவை எங்கே பறந்து செல்கின்றன என்று கண்காணிப்பது கடினமானது.
இந்தியாவில் முதல் முதலில் ராஜஸ்தானில்தான் இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு நடந்தது.
பிறகு இவை மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளன.
ஏற்கெனவே கொரோனாவினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் 11 மாவட்டங்களுக்கு வெட்டுக்கிளி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெட்டுக்கிளி படையெடுப்பு எப்போதும் மத்தியப்பிரதேசத்தோடு நின்றுவிடும் என்றும், அவை எப்போதும் தக்காண பீடபூமியைத் தாண்டி தமிழகம் வருவதில்லை என்றும் தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. எனினும் இவற்றின் நகர்வு குறித்து மத்திய அரசின் உதவியுடன் கண்காணித்து வருவதாக கூறியுள்ள தமிழ்நாடு வேளாண் துறை, தாக்குதல் நடைபெற்றால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: