கொரோனா வைரஸ்: மாசற்ற சூழல், 213 கி.மீ தொலைவிலிருந்து தெரியும் இமயமலை - 25 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த அற்புதம்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்து தமிழ் திசை: 213 கி.மீ. தொலைவில் உள்ள இமயமலை காற்று மாசு குறைவால் தெரிந்த அற்புதம்

பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர் பகுதியில் வசிக்கும் இன்றைய தலைமுறையினர் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகரித்துள்ள காற்று மாசு, அந்த மலைத்தொடரை மறைத்துவிட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரைதான் இந்தப் பனிமலை கண்ணில் புலப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் காற்று மாசு பல மடங்கு குறைந்திருக்கிறது. அந்த வகையில், ஜலந்தர் பகுதியிலும் காற்று மாசு குறைந்திருப்பதால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் புலனாகியுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள ஜலந்தர்வாசிகள், தங்கள் வீடுகளிலிருந்து இந்த மலைத்தொடரின் பின்னணியில் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி: "தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல் : 64, 733 பேர் கைது"

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை 58,440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64,733 போ் கைது செய்யப்பட்டனா்.

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி சனிக்கிழமை காலை வரை 24 மணி நேரத்தில் மொத்தம் 58,440 வழக்குகளைப் பதிவு செய்து 64,733 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 48,945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.18,29,444 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 162 இரு சக்கர வாகனங்கள்,6 ஆட்டோக்கள், 2 காா்கள் என மொத்தம் 170 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தலைக்கவசம் அணியாமல் மோட்டாா் சைக்கிள் ஓட்டியதாக 30 போ் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக 164 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக 169 மோட்டாா் சைக்கிள்கள், 7 ஆட்டோக்கள் உள்பட மொத்தம் 176 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி: "வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.50 ஆயிரம் அபராதம்"

வெளிநாடு, மாநிலம் சென்று வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நாகை மீனவ கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாகையில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள கிராமமக்கள் யாரும் நாகை கடைத்தெரு மற்றும் பொது இடங்களுக்கு செல்ல கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிராம மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஊர் திரும்பியவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. மீறி வெளியே வந்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும். மேலும் அவர்கள் தொழில் செய்யவும் தடை விதிக்கப்படும்.

கிராமத்தில் ஒன்று கூடி சீட்டு விளையாடக்கூடாது. சீட்டு விளையாடுவது தெரியவந்தால் ஒரு நபருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்படும். கரையோரத்தில் வலைவீசி மீன் பிடிக்க கூடாது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்த மீனவ கிராமங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்புகளை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் ஆகிய 3 மீனவ கிராம பஞ்சாயத்தார்களும் சேர்ந்து முடிவு செய்து அறிவித்துள்ளனர். இந்த முடிவுகள் குறித்து கிராமமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: