11 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அவைத் தலைவர் நோட்டீஸ்

பிரசுரிக்கப்பட்டது

கடந்த 2017ம் ஆண்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட சமயத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, எம்எல்ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு அவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக எம்எல்ஏ சக்கரபாணி மற்றும் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட அந்த வழக்கில், எம்எல்ஏ-க்களின் மீதான நடவடிக்கையை அவைத்தலைவர் முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் நடவடிக்கை எடுக்க காலக்கெடு விதிக்கமுடியாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 11 எம்எல்ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு, அவைத்தலைவர் தனபால் இன்று (மார்ச் 9) நோட்டீஸ் அளித்துள்ளார். எம்எல்ஏ-க்கள் விளக்கம் தருவதற்கு அவகாசம் கேட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

2020-21-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 14 அன்று நிதியமைச்சராக உள்ள பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு நடைபெற்றது. ஆனால், துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்டமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று கூடிய தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் 11 எம்எல்ஏ-க்ளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: