பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: சி.பி.ஐக்கு மாற்றிய தமிழக அரசு

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ படமாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பிப்ரவரி மாதத்தில் வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் சபரீஷ், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் புகார் தெரிவித்த பூபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் செந்தில், பாபு, மணி, வசந்தகுமார், நாகராஜ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் கோபமும் எழுந்தன. மாணவர்களும் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம்: இதுவரை நடந்தது என்ன?

பிறகு இந்த வழக்கு மார்ச் 12ஆம் தேதி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டது. இருந்தபோதும் வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற வேண்டுமென கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு மிகக் கடுமையான குற்றங்களை உள்ளடக்கியதாக இருப்பதாலும் சமூக வலைதளங்களிருந்து ஆதாரங்களைத் திரட்ட வேண்டியிருப்பதாலும் வழக்கை மாநில குற்றப் பிரிவு புலனாய்வுத் துறையிலிருந்து மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

யார் இந்த திருநாவுக்கரசு?

இந்த வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் சமயத்தில் இருந்தே பெண்களிடம் இந்த மாதிரியான அணுகுமுறையோடு நடந்து வந்துள்ளார். ஆனால் , பாதிக்கப்பட்ட பெண்களின் முழுமையான எண்ணிக்கை, விவரங்கள் கிடைக்கவில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ராதிகா என்பவர், 2012ம் ஆண்டில் இருந்து அந்தப்பகுதியில் நடைபெற்ற இளம் பெண்கள் தற்கொலை வழக்குகளை மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பொள்ளாச்சி பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்களின் வழக்குகளில் ஆராய்ந்து அந்த தற்கொலைக்கும், தற்போது கைதாகியுள்ள குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதா என புலன் விசாரணை மேற்கொண்டு, அப்படி இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி வன்கொடுமை குறித்த பிபிசி செய்திகள்:

பொள்ளாச்சி வன்கொடுமை: "sex trafficking ஒரு மிகப்பெரிய பிசினஸ்"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :