You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜீ - சோனி இணைப்பு: இந்தியாவின் பெரும் பொழுதுபோக்கு நிறுவனம் இனி எப்படி இருக்கும்?
ஜப்பானின் பெருநிறுவனமான சோனியின் இந்திய பிரிவு, உள்ளூர் போட்டியாளரான ஜீ நிறுவனத்துடன் இணைகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக இவை உருப்பெறவுள்ளன.
இந்த இணைப்பு சாத்தியமானதன் மூலம் கிட்டத்தட்ட 75 தொலைக்காட்சி சேனல்களும், சினிமா தொடர்பான சொத்துகளும், இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்களும் இனி ஒரு குடையின் கீழ் இருக்கும்.
வால்ட் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு துறையில் முக்கிய நிறுவனமாக இது விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 900 மில்லியனுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பார்வையாளர்களும், 800 க்கு மேற்பட்ட சேனல்களும் உள்ளன.
இந்த சேனல்கள் விளையாட்டு, தொலைக்காட்சி தொடர்கள் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரை பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
இந்த நிறுவனங்களின் இணைப்பு பற்றிய அறிவிப்பு செவ்வாய்கிழமை (டிசம்பர் 21) அறிவிக்கப்பட்டது. இதன்படி கூட்டு நிறுவனத்தில் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியாவின் (எஸ்.பி.என்.ஐ) பங்கு 51 சதவீதம் ஆக இருக்கும். 90 ஊக்க கால (Diligence Period) நடைமுறைக்குப் பிறகு, இந்நிறுவனத்தை ஜீ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புனித் கோயங்கா தலைமை தாங்குவார்.
இந்த ஒப்பந்தத்தை "முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்", என்று கோயங்கா குறிப்பிட்டார்.
"இக்கூட்டு நிறுவனம் விரிவடைந்த பொழுதுபோக்கு தொழிலை உருவாக்கும். இதன் மூலம், பல்வேறு தளங்களில் பரவலான பொழுதுபோக்கு தேர்வுகளுடன், எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய இயலும்.", என்று அதிகாரபூர்வமான அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இந்த இரண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டுவருகின்றன. மேலும், ஜீ5 மற்றும் சோனிலைவ் என்ற ஸ்ட்ரீமிங் தளங்களையும் அவை சொந்தமாக கொண்டுள்ளன.
அந்நி்றுவனங்களுக்கு சோனி மேக்ஸ் மற்றும் ஜீ டிவி போன்ற பிரபலமான சேனல்களுடன் பரவலான தொலைக்காட்சி வணிகம் உள்ளன.
"இது பெரும் நிறைவான ஒப்பந்தம்", என்று ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை நிபுணர் வனிதா கோலி காண்டேகர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
"உதாரணமாக, ஜீ-யிடம் இருப்பது போல இந்தியா முழுவதுமான, சிறிய நகரங்கள் மற்றும் பிராந்திய வணிகம் சோனியிடம் இல்லை. மேலும், சோனிக்கு இருப்பதை போன்ற குழந்தை ரசிகர்கள், விளையாட்டு ரீதியான வணிகம் ஜீ-க்கு இல்லை."
"இந்த ஒப்பந்தம் ஜீ-யை சர்வதேச அரங்கில் உயர்த்தும் என்றும் காண்டேகர் கூறினார்.
"இந்த நிறுவனம் இப்போது 82 மில்லியன் டாலர்கள் (61 மில்லியன் பவுண்ட்கள்) நிறுவனமான சோனியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போது ஜீ ஒரு வெளிநாட்டு நிறுவனமாக மாறியுள்ளது. அந்நிறுவனத்திற்கு இது ஒரு பெரிய தளத்தை அளிக்கும்".
"பெரும்பாலான இந்தியர்கள் இன்னும் டைரக்ட்-டூ-ஹோம் டிவி பொழுது போக்கையே சார்ந்து இருக்கின்றனர். இருப்பினும், நம் நாடு ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு ஒரு லாபகரமான இடமாக உள்ளது. இது டிஜிட்டலில் இளம் பார்வையாளர்களை குறிவைத்து பரந்த இணையச் சந்தையை உருவாக்க முயற்சி செய்துவருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக நெட்ஃபிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு இடையே போட்டி அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம், பலரும் தொலைக்காட்சியை விடுத்து டிஜிட்டல் நிகழ்ச்சிகளை தேர்வுசெய்வதே.
சோனி மற்றும் ஜீ இடையேயான இந்த இணைப்பு, இந்த போட்டியை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
- யோகி ஆதித்யநாத்: அஜய் மோகன் முதல்வர் 'மகாராஜா' ஆக மாறியது எப்படி?
- மலேசியா மழை: 100 ஆண்டுகளுக்கு பிறகு கதி கலங்க வைக்கும் காட்சிகள்
- யூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை - என்ன நடந்தது?
- தாய்மை அச்சுறுத்துகிறதா? - குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் இளம் தலைமுறை
- ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அமலாக்கத் துறை விசாரணை - பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்