You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி 16 வயதில் வாசிக்க கற்று, பின் மருத்துவராகி மலையேற்றமும் சென்று சாதித்த கதை
- எழுதியவர், பென்னி லு
- பதவி, பிபிசி சைனீஸ்
- எழுதியவர், விபெக் வெனிமா
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
37 வயதான மருத்துவர் லீ சுவாங்யேவின் துயரங்களை வென்றெடுத்த கதை மற்றும் மலை ஏறுதல் மீதான அவரது காதல் ஆகியவை சீனாவில் வைரலானது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிறுவயதில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 16 வயதில்தான் இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.
1988 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லீ சுவாங்யேவுக்கு ஏழு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியது. இது அவரை குதி கால்களில் குந்தி அமர்ந்தால் அன்றி, நடக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றது.
சிறுவயதில், மற்ற குழந்தைகளைப் போலப் பள்ளிச் சீருடையுடன் செல்வதே லீயின் கனவாக இருந்தது. ஆனால், அவர் நிறைய ஏளனத்தைச் சந்தித்தார். சில குழந்தைகள் அவரை "வீணானவர்" என்றும், அவரால் "சாப்பிட மட்டுமே முடியும், வேறு எந்தப் பயனும் இல்லை" என்றும் கூறினர்.
"இது என்னை மிகவும் காயப்படுத்தியது," என்று லீ கூறுகிறார்.
லீக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, கால்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால் அவரால் நடக்க முடியும் என்று அவரது பெற்றோர் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மேலும் கடன் வாங்கி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
அந்த அறுவை சிகிச்சை மீது லீ மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். "நான் வார்டில் குணமடைந்து வந்தபோது, மற்ற குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் நான் சிரித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் என்னால் விரைவில் ஒரு சாதாரண மனிதரைப் போல நடக்க முடியும் என்று நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால், அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது. லீயின் நடக்கும் நம்பிக்கை சிதைந்ததுடன், அவர் ஆழமான மன அழுத்தத்திற்கு ஆளானார். தன் வாழ்க்கை அர்த்தமற்றது என்பதைப் போல உணர்ந்த அவர், தன் தாயிடம் தான் இறந்துவிட விரும்புவதாகக் கூறினார்.
ஆனால், அவருடைய தாயார் அவரிடம் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறினார். "நாங்கள் வயதான காலத்தில் பேசுவதற்கு ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக உன்னை வளர்க்கிறோம். ஒரு பூனையோ நாயோ பேச முடியாது, ஆனால் உன்னால் பேச முடியும்," என்று அவர் கூறினார்.
அவரது வார்த்தைகள் ஆழமாகப் பதிந்தன. "எனக்காக என் பெற்றோரும் குடும்பத்தினரும் எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்று நான் நினைத்தேன். கண்ணீர் விட்டு அழுதேன். நான் எனக்காக மட்டுமல்ல, அவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்று உணர்ந்தேன்," என்கிறார் லீ.
அதன்பிறகு சிறிது காலத்திலேயே, வெளியூர் நபர் ஒருவர் கிராமத்திற்கு வந்து, கோவில்களில் ஊதுபத்தி விற்க மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தேடினார். அந்த நபர், லீ அந்த நேரத்தில் அவரது தந்தையின் மாதச் சம்பளத்திற்குச் சமமான தொகையை வீட்டிற்கு அனுப்புவார் என்று உறுதியளித்தார்.
"என் பெற்றோர் அதை உறுதியாக எதிர்த்தனர். ஆனால், பணம் சம்பாதிக்கவும், என் குடும்பத்தின் சுமையைக் குறைக்கவும் எனக்கு இது ஒரு வாய்ப்பாகத் தெரிந்தது," என்று லீ கூறுகிறார். அவர் அந்த நபருடன் செல்ல ஒப்புக்கொண்டார்.
தெருவில் பிச்சை எடுக்க நேரிட்ட துயரம்
ஆனால், வேலை குறித்த வாக்குறுதி ஒரு ஏமாற்றுவேலை என்று லீ விரைவில் அறிந்தார்.
அந்த வெளியூர் நபர் ஒரு பிச்சை எடுக்கும் கும்பலை நடத்தி வந்ததாக மருத்துவர் லீ கூறுகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, அவர் மற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தனது புதிய "முதலாளியுடன்" கழித்த முதல் நாள் இரவில், மற்ற குழந்தைகளில் ஒருவர், கடினமாக உழைக்கவில்லை என்றால் அடிக்கப்படுவீர்கள் என்று லீயை எச்சரித்தார். இது உண்மையாகவும் ஆனது.
அடுத்த நாள் காலையில், லீ சட்டை இல்லாமல், நாணயங்களுக்கான ஒரு கிண்ணத்துடன், அதிக அனுதாபத்தைத் தூண்டும் வகையில் அவரது கால்கள் முதுகுப்புறமாக முறுக்கப்பட்ட நிலையில் நடைபாதையில் விடப்பட்டார்.
மக்கள் தன் கிண்ணத்தில் பணம் போடுவது ஏன் என்று லீக்கு முதலில் புரியவில்லை. அப்போது, பாதசாரிகள் அவரிடம், பள்ளியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது.
"என் சொந்த ஊரில், பிச்சை எடுப்பது அவமானகரமானது. நான் அதையே செய்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்திருக்கவில்லை. உண்மை தெரிந்தபோது நொறுங்கிப் போனேன்," என்று லீ கூறுகிறார்.
லீ ஒரு நாளைக்குச் சில நூறு யுவான்களைச் சம்பாதிக்க முடிந்தது – இது 1990களில் ஒரு பெரிய தொகையாகும் – ஆனால் அது அனைத்தும் அவரது முதலாளியிடம் சென்றது.
"நான் மற்ற குழந்தைகளை விடக் குறைவாகச் சம்பாதித்தால், அவர் நான் சோம்பேறித்தனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி, சில சமயங்களில் என்னைத் தாக்குவார். அதனால் அந்த ஆண்டுகள் மிகவும் வேதனையாக இருந்தன." என்று அவர் கூறுகிறார்.
அடுத்து வந்த ஆண்டுகளில் மற்ற குழந்தைகள் ஓடிவிட்டனர் அல்லது காவல்துறையால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தன் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற உறுதியுடன் லீ அங்கேயே தங்கினார். காவல்துறை உதவி வழங்கிய போது, அவர் மறுத்துவிட்டார்.
ஏழு ஆண்டுகளாக கோடை மற்றும் குளிர்காலத்தில், லீ நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்தார்.
"அது நரகத்தில் வாழ்வது போல் இருந்தது. நான் வெட்கப்பட்டேன், கண் தொடர்பைத் தவிர்த்தேன். பரிதாபத்தைத் தூண்டுவதற்காக என் காலை வலி நிறைந்த நிலையில் பின்புறமாக முறுக்கிக் கொள்வேன். பிச்சை எடுப்பதைத் தவிர்க்க மழை அல்லது இருளுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்," என்று அவர் பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் கூறினார்.
ஒவ்வொரு புத்தாண்டுக்கு முந்தைய தினம் அவர் வீட்டிற்கு அழைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் தன் பெற்றோரை ஆசுவாசப்படுத்துவார்.
"ஆனால், அழைப்புக்குப் பிறகு, நான் என் அறையில் அழுது கொண்டிருப்பேன். நான் தெருவில் பிச்சை எடுக்கிறேன் என்பதை அவர்களிடம் சொல்ல முடியவில்லை." என்று அவர் கூறுகிறார்.
இப்போதும், 20 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வேதனை நீங்கவில்லை எனக் கூறும் அவர், "பிச்சை எடுத்தது ஆழமான உளவியல் காயங்களை விட்டுச் சென்றது - நான் இன்னும் அதைப் பற்றி கொடிய கனவு காண்கிறேன். அது ஒரு கனவு மட்டுமே என்று அறிந்து நிம்மதியுடன் எழுந்திருக்கிறேன்." என்கிறார்.
கல்வி மூலம் ஒரு புதிய பாதை
லீ தெருவில் ஒரு செய்தித்தாளைக் கண்டெடுத்து, அதில் தனது பெயரில் உள்ள எழுத்துகளை மட்டுமே வாசிக்க முடிந்ததை உணர்ந்தபோது எல்லாம் மாறியது. அப்போது 16 வயதான அவர், வீட்டிற்குத் திரும்பி இறுதியாகப் பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தார்.
"என்னால் படிக்கவோ எழுதவோ முடியாது, கல்வி மூலம் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும்," என்று அவர் நினைத்தார்.
அந்த நேரத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது குற்றமாக ஆக்கும் புதிய கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் லீ கேள்விப்பட்டார். அவர் தனது முதலாளியிடம் தான் தனது குடும்பத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்த போது, அவர் உண்மையில் எப்படி வாழ்ந்து வந்தார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவரைச் சுரண்டியவர் உறுதியளித்ததை விட மிகக் குறைவான பணத்தை அவர்களுக்கு அனுப்பியிருந்ததைக் கண்டு லீ கோபமடைந்தார்.
தனது பெற்றோரின் ஆதரவுடன், லீ ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் வகுப்பில் சேர்ந்தார். அங்குப் படிக்கும் மாணவர்கள் அவரை விட 10 வயது இளையவர்கள். அவர் முதல் நாள் பள்ளிக்குச் சென்றபோது, குழந்தைகள் அவரது மேசையைச் சுற்றி மொய்த்தனர் – ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
"நான் வருத்தப்படவில்லை - அதற்கு முன்பு நான் நிறைய ஏளனங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருந்தேன். இப்போது, ஒரு மாணவனாக, நான் கற்றலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார்.
லீ மிகவும் அர்ப்பணிப்புள்ள மாணவராக ஆனார், இருப்பினும் அவரது உடல்நிலை கழிப்பறைக்குச் செல்வது போன்ற வேலைகளைக் கூடச் சிரமமாக்கியது. "கழிப்பறைக்குச் செல்ல நிறைய முயற்சி தேவைப்படும். அதனால் நான் பெரும்பாலும் பள்ளியில் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்," என்று அவர் கூறுகிறார்.
தளர்வில்லாத உறுதியுடன், லீ ஒன்பது ஆண்டுகளில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். அவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளை விளையாட அழைத்து, பின்னர் வீட்டுப் பாடத்தில் உதவி கேட்பார்.
கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவரது உடல்நிலை அவருக்கு இருந்த வாய்ப்புகளை குறைத்தது. ஆனால், அவர் மருத்துவத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். "தான் ஒரு மருத்துவரானால், என் சொந்த நிலையைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம், என் குடும்பத்திற்கு உதவலாம், உயிர்களைக் காப்பாற்றலாம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கலாம்," என்று அவர் நினைத்தார்.
25 வயதில் லீ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குள்ள வசதிகள் அவருக்கு மிகவும் அணுகக்கூடியதாக இருந்தன. ஆனால், செய்முறை வகுப்புகள் மிகவும் கடினமானதாக இருந்ததை அவர் கண்டார்.
"சக மாணவர்கள் ஆசிரியரைப் பின்தொடர்ந்து நோயாளிகளைப் பார்க்கச் செல்ல அல்லது இன்டர்ன்ஷிப்பின் போது வார்டுகளுக்கு இடையில் ஓட முடிந்தாலும், எனது நடமாடும் பிரச்னைகள் அதைக் கடினமாக்கின. மற்றவர்கள் ஒரு நாளில் கற்றுக்கொண்டதை நான் கற்றுக்கொள்ள அதிக நேரம் ஆகும்." என் றார்.
லீ தான் பலமடைய வேண்டும் என்று உணர்ந்தார். மலை ஏறுதலைத் தொடங்க முடிவு செய்தார். தனது முதல் மலையேற்றத்தில், தைய் மலையின் உச்சியை அடைய அவருக்கு ஐந்து பகலும் இரவும் ஆனது. அவரது கைகளும் கால்களும் வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டபோதும், அவர் கைவிடவில்லை. ஒவ்வொரு கல் படியையும் தனது பிட்டத்தைப் பயன்படுத்தி நகர்ந்து ஏறினார்.
மருத்துவர் லீ தனது மலை ஏறும் காணொளிகளைப் பகிர்ந்தபோது, அது இந்த கோடையில் வைரலாக மாறியது. மலை ஏறுவது அவருக்கு இப்போதும் ஒரு விருப்பமான விஷயமாக உள்ளது.
இப்போது மருத்துவர் லீ, ஜின்ஜியாங்கில் ஒரு சிறிய கிராமப்புற கிளினிக்கை நடத்தி வருகிறார். அவர் இரவு பகலாகப் பணி செய்ய தயாராக உள்ளார். அவரது நோயாளிகள் அவரைத் தங்களின் "அற்புத மருத்துவர்" என்று அழைக்கிறார்கள்.
"என் சொந்தக் கைகளால் நோயாளிகளைக் கவனிப்பது, என் அண்டை வீட்டாரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது – இது எனக்கு எல்லாவற்றையும் விட அதிக திருப்தியை அளிக்கிறது," என்று அவர் கூறுகிறார்.
உலகம் முழுவதும் சீன சமூகத்திடம் முழுவதும் அவரது கதை சென்றடைந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர், இது மக்களின் மனப்பான்மையை மாற்ற உதவும் என்று நம்புகிறார்.
"சிலர் மாற்றுத்திறனாளிகளைப் பயனற்றவர்களாகப் பார்க்கிறார்கள். உணவகங்களில் நான் அமர்ந்திருக்கும்போது பிச்சைக்காரன் என்று தவறாகப் புரிந்துகொண்டு, உணவு இல்லை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். நான் சிரித்துவிட்டு வெளியேறுவேன் - பெரும்பாலான மக்கள் கனிவானவர்கள்," என்று அவர் கூறுகிறார்.
நம்பிக்கை மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கை
லீயைச் சுரண்டியவர் குறித்து ஏன் புகார் அளிக்கவில்லை என்று பலர் அவரிடம் கேட்டுள்ளனர். "நான் கடந்த காலத்தைக் கடந்த காலத்திலேயே விட்டுவிட முடிவு செய்தேன்," என்று அவர் கூறுகிறார். "அந்த ஏழு ஆண்டுகள் ஒரு வேதனையான அனுபவம், ஆனால் அவை என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன."
லீயின் பயணம் அவரது கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது. "பள்ளிக்குச் செல்ல முடிந்த பிறகு, மற்றவர்களின் கருத்துகள் அல்லது மதிப்பீடுகள் பற்றி நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். அந்த விஷயங்கள் அர்த்தமற்றவை என்று நான் உணர்ந்தேன். எனது நேரத்தையும் ஆற்றலையும் படிப்பதிலும், என் வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதிலும் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார்.
பல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்கள் தங்களை மதிப்பிடுவார்கள் அல்லது கேலி செய்வார்கள் என்று பயப்படுவதால் "முன்னோக்கிச் செல்ல அஞ்சுகிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.
"ஆனால், என்னைப் பொறுத்தவரை, அது முக்கியமில்லை. நான் வளாகத்திலும் நகரங்களிலும் வகுப்புகளுக்காகவோ, பட்டறைகளுக்காகவோ, அல்லது எனது வேலை மூலம் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு உதவுவதற்காகவோ குந்திக் கொண்டும், தவழ்ந்தும் செல்கிறேன். அதைச் செய்யும்போது நான் நம்பிக்கையுடன் இருப்பதாக நினைக்கிறேன். நான் மற்றவர்களின் பார்வையைப் பற்றி இப்போது கவலைப்படுவதில்லை." என்கிறார்.
பொதுமக்களுக்கு அவர் இந்த அறிவுரையையும் கூறுகிறார்: "நம் வாழ்க்கை மலைகளைப் போன்றது - நாம் ஒன்றில் ஏறுகிறோம், அதற்கு முன்னால் இன்னொன்று உள்ளது. நாம் தொடர்ந்து பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கனவுகளை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்."
மருத்துவர் லீ சுவாங்யே பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு