ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டி, அவரது மனைவிக்கு வைரக்கல்; மோதி வழங்கிய பரிசுகள் என்னென்ன?

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவிற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோதி, அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பல பரிசுகளை வழங்கி நட்பு பாராட்டினார்.

அமெரிக்க அதிபர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற மோதி., ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டியையும் அவரது மனைவி ஜில் பைடனுக்கு வைரக்கல் ஒன்றையும் பரிசளித்தார்.

இதற்கு முன்னதாக நேற்றைய தினம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில், நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோதி, “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே ஐ.நா சபையில் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக முன்மொழியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மொத்த உலகமும் எனது அந்த யோசனைக்கு ஆதரவு அளித்தது குறித்து மிகுந்த மிகிழ்ச்சி.

யோகா இந்தியாவிலிருந்து வந்த ஒன்று, மிகவும் பழமையான பாரம்பரியம். யோகா இலவசமானது. பதிப்புரிமை, காப்புரிமை, ராயல்டி கட்டணங்களற்றது. எந்த வயதினரும், பாலினத்தவரும் யோகாவை பின்பற்றலாம். யோகாவை வீடு, பணியிடம் என எங்கு வேண்டுமென்றாலும் செய்யலாம். மத நம்பிக்கை, கலாச்சாரத்தை கடந்து யோகா அனைவருக்குமானது” என்றார்.

யோகா நிகழ்ச்சிக்கு பின்பு வாஷிங்டன் சென்ற பிரதமர் மோதி, அங்கு ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அளித்த சிறப்பு விருந்தில் கலந்துகொண்டார்.

ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் சுமார் 135 நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

வரும் 24ஆம் தேதி வரை மோதி அமெரிக்காவில் இருப்பார்.

மோதியின் பயணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

பிரதமர் நரேந்திர மோதியின் இந்த அமெரிக்க பயணம், இந்திய – அமெரிக்க உறவில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இதற்குமுன் அதிகார்ப்பூர்வமாக நான்கு முறை மோதி அமெரிக்கா சென்றிருந்தாலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரை உபசரிக்க இருப்பது இதுதான் முதல்முறை.

மோதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். 2016ஆம் ஆண்டு ஒருமுறை அங்கு உரையாற்றியதால், அமெரிக்க நாடளுமன்றத்தில் இரண்டுமுறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் ஆகவிருக்கிறார் மோதி.

மோதியின் இப்பயணம் இந்தியாவும் அமெரிக்காவும் சமமான நண்பர்கள் என்பதையும், மோதியின் பிம்பம் உலகளவில் வளர்ந்துள்ளது என்பதையும் காட்டுகிறது என்கிறார் குருகிராமிலுள்ள மேனேஜ்மென்ட் அண்ட் டவளப்மென்ட் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த அஜய் ஜெயின்

அமெரிக்கா வாழ் இந்தியர்களுடனான மோதியின் உரையாடல்கள் கலாசார உறவுகளை வலுப்படுத்த உதவியிருக்கின்றன, என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டின் ‘ஹௌடி மோதி’ நிகழ்வு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியா இடையே இருக்கும் பிணைப்பைக் காட்டுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவின் நற்பிம்பத்தை மேம்படுத்துகிறது, என்று அஜய் ஜெயின் கருதுகிறார்.

தனிப்பட்ட முறையில் இப்பயணத்தின் மூலம் மோதி அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலிலும் லாபம் ஈட்டப்பார்ப்பார், என்கின்றனர் வல்லுநர்கள்.

இப்பயணத்தின் மூலம் அமெரிக்காவுக்கு என்ன பலன் கிடைக்கும்?

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்வது எந்த ஒரு நாட்டின் தலைவருக்கும் ஒரு கௌரவம்தான்.

ஆனால் மோதியின் இப்பயணத்தின்மூலம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும்?

இப்பயணத்திற்குப் பின்னால் அமெரிக்காவின் நலன் ஒளிந்திருப்பதாகக் கூறுகிறார் லண்டனில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளர் பிரசூன் சோன்வால்கர். “அமெரிக்க-இந்திய உறவின் வரலாற்றில், அமெரிக்கா எப்போதும் தனது நலன் சார்ந்தே இயங்கி வந்திருக்கிறது. அது இந்தியாவை ஆத்திரமூட்டினாலும் கூட. இப்போதும், இரு நாடுகளின் கொள்கைகளும் வேறாக இருப்பினும், அமெரிக்கா இந்தியாவை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கும்,” என்கிறார்.

அதேபோல், அமெரிக்காவின் பல பெரிய நிறுவனங்கள் வேலையாட்களுக்காக இந்தியாவை நம்பியிருப்பதால், பொருளாதார ரீதியிலும் அமெரிக்காவுக்கு இந்தியா முக்கியம், என்று கூறுகிறார் பேராசிரியர் அஜய் ஜெயின்.

இருநாட்டு உறவு, பொருளாதாரம், உலக நாடுகளுக்கிடையே இந்தியாவின் இடம், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் மோதியின் இப்பயணம் அமையும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

மோதி பரிசளித்த சந்தனப் பெட்டியும், வைரக் கல்லும்

அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் மோதிக்கு அமெரிக்க அதிபர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்துகொள்வதற்காகச் சென்ற மோதியை ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றனர்.

அப்போது பிரதமர் மோதி அவர்களுக்கு சில பரிசுகளை வழங்கினார். ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டியையும், உபநிஷத புத்தகங்களையும் வழங்கிய பிரதமர்., ஜில் பைடனுக்கு வைரக்கல் ஒன்றையும் பரிசளித்தார்.

ஜோ பைடனுக்கு வழங்கப்பட்ட சந்தனப் பெட்டி, நுணுக்கமான வேலைபாடுகளைக் கொண்டிருந்தது. அதனுள் வெள்ளியிலான ஒரு விநாயகர் சிலையும், வெள்ளி விளக்கும் இருந்தன.

மேலும் அந்த சந்தனப்பெட்டிக்குள் ‘தஸ் தனம்’ என்ற பரிசும் இருந்தது. இது ஒருவர் 80 வயதை பூர்த்தி செய்யும்போது வழங்கப்படும் பரிசுப்பொருள் ஆகும். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகின்ற நவம்பர் மாதம் தனது 81வது வயதை அடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஜோ பைடனுக்கு வழங்கப்பட்ட சந்தனப் பேழைக்குள், 10 உபநிஷதங்கள் அடங்கிய நூலும் இருந்தது.

அதேபோல் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட வைரக்கல்லை, பிரதமர் மோதி பரிசாக வழங்கினார்.

ஜோ பைடன் மோதிக்கு என்ன பரிசளித்தார்

பிரதமர் மோதியிடம் இருந்து பரிசுகளை பெற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவருக்கு பதில் பரிசுகளை வழங்கினார்.

அமெரிக்க கவிஞர் ராபர்ட் ப்ராஸ்ட் கையெழுத்திட்ட புத்தகம் உள்பட பல புத்தகங்களை ஜோ பைடன் மோதிக்கு வழங்கினார். அதனுடன் ஒரு பழமையான கேமராவையும், அமெரிக்க வனவிலங்குகள் தொடர்பான புத்தகம் ஒன்றையும் தனது கையெழுத்துடன் அவர் மோதிக்கு பரிசளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: