You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய கப்பலுக்குள் 50 நாளாக தவிக்கும் 20 இந்தியர்கள் - எப்படி இருக்கிறார்கள்?
அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கண்டெய்னர் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவில் கண்டெய்னர் கப்பல் ஒன்று மோதியதில் ஒரு பாலம் ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்த நிலையில், சுமார் ஏழு வாரங்களுக்கு பிறகு, அந்த கப்பலுடன் சிக்கியிருந்த பாலத்தின் இடிபாடுகள் கடந்த மே 13-ம் தேதி வெடி வைத்து தகர்க்கப்ட்டுள்ளது.
கடந்த மார்ச் 26ஆம் தேதி அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட 948 அடி நீளமுள்ள ஒரு கண்டெய்னர் கப்பல் இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது.
ஆனால் கிளம்பிய சிறிது நேரத்திலேயே பட்டாப்ஸ்கோ நதியின் பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் மோதியது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்த 6 கட்டுமான பணியாளர்கள் பலியாயினர். சுமார் 4,000 டன் இரும்பு மற்றும் சிமெண்ட் சிதைவுகள் நதிக்குள் விழுந்தன. இது உலகம் முழுவதும் பேசுபொருளானது.
இந்தக் கப்பலில் 20 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் என 21 கப்பல் பணியாளர்கள் இன்னும் சிக்கி உள்ளனர். விசா கட்டுப்பாடுகள், பாஸ் இல்லாதது உட்பட பல்வேறு காரணங்களால் இவர்களால் இன்னமும் தரையிறங்க முடியவில்லை
இந்த நிலையில், கப்பலை ஒட்டி இருந்த பாலத்தின் இடிபாடுகள் திங்கட்கிழமை வெடிவைத்து தகர்க்கப்பட்டன. முன்னதாக ஊடகங்களிடம் பேசிய அதிகாரிகள், 2 நாட்களுக்குள் கப்பல் அங்கிருந்து நகர்த்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில், விபத்துக்கு 10 மணி நேரத்துக்கு முன்பு கப்பலில் இரண்டு முறை மின் தடை ஏற்பட்டது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை சீரமைக்க 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்றும், நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)