You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மகளிர் டி20 உலகக் கோப்பை - வெற்றிகரமான தொடக்கத்தை அமைத்து சாதனை படைத்த தீப்தி ஷர்மா
ஒன்று அல்லது இரண்டு அல்ல, மொத்தம் ஐந்து விக்கெட்டுகள். பர்மிங்காம் மைதானத்தில் பந்துவீச்சாளர் தீப்தி சர்மா பாகிஸ்தான் அணியின் பாதி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி, மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு ஒரு வெற்றிகரமான தொடக்கத்தை அமைத்துத் தந்தார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில், பாகிஸ்தான் அணியின் முனீபா அலி மற்றும் குல் ஃபிரோசா ஆகியோர் இணைந்து 38 ரன்கள் சேர்த்தனர். இருப்பினும், தீப்தி சர்மா பந்துவீச வந்ததும், பாகிஸ்தான் அணியின் முன்னணி வரிசை பேட்டர்களைச் சரித்தார்.
அவர் முதலில் ஐந்தாவது ஓவரில் ஃபிரோசாவையும், பின்னர் ஏழாவது ஓவரில் ஆயிஷா ஜஃபாரையும் வீழ்த்தினார். பதினேழாவது ஓவரில், ஆலியா ரியாஸ், தஸ்மியா ருபாப் மற்றும் நஷ்ரா சந்து ஆகிய மூன்று பேட்டர்களை வீழ்த்தினார்.
தனது நான்கு ஓவர்களில் வெறும் பத்து ரன்களை மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி, முனீபா அலியை ரன்-அவுட் மூலமும் வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்டநாயகியாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், டி20 மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் தீப்தி படைத்துள்ளார்; அவர் 145 சர்வதேச டி20 போட்டிகளில் 166 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தீப்தி 'தொடரின் சிறந்த வீராங்கனை'யாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இப்போது, டி20 உலகக் கோப்பையின் தொடக்கத்திலேயே இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
விரிவாக பார்க்கலாம் இந்த காணொளியில்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு