சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் - சமூக வலைதளங்களில் டிரெண்டான ஹேஷ்டேக்

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் நிகழ்த்திய உரையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உடனடியாக வெளியேறிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை என்ற பொருளில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திமுக விமர்சித்துள்ளது.

டிரெண்டாகும் ஹேஸ்டேக்

சட்டப்பேரவையில் இருந்து தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனுடன் #GetOutRavi, #MKStalin போன்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதள பயனர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நண்பகல் 2 மணி வரை #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி 18 ஆயிரம் டிவீட்கள் வரை பதிவிடப்பட்டு இருந்தன.

ஆளுநரை விமர்சித்த திமுக

திமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை என்ற பொருளில், #GetOutRavi என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

திமுக சார்பாக பதிவிடப்பட்டு இருந்த மற்றொரு பதிவில் ஆளுநரின் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை படிக்கும் காணொளியுடன் ஒரு திருக்குறளும் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது.

அரசியல் கட்சிகள் விமர்சனம்

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரான பிரசாத் சிரிவெல்லா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆளுநரை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். அவரது பதிவில், "அமைச்சரவைக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்றும், ஆளுநர் தனது உரையில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணாவின் பெயர்களை புறக்கணித்திருப்பது ஆளுநரின் வெறுப்புணர்வையும், அர்ப்பத்தனத்தையும் காட்டுகிறது," என குறிப்பிட்டு இருந்தார்.

ஆளுநர் விவகாரம் தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன், "தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்துள்ளார். ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி, விசிக சார்பாக போராட்டம் நடத்தப்படும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் உரையை தயாரித்து, திமுக அரசு தனது அதிகாரத்தை ஆளுநருக்கு முன்பாக காட்ட முயற்சி செய்வதாக அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பதிவிட்டுள்ளனர்.

'ஆளுநர் உரையும் அரங்கேற்றப்பட்ட நாடகமும்' என டிவிட்டரில் தனது விமர்சனத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், "ஆளுநர் பேசிய பின்னர் மரபை மீறி முதல்வர் குறிக்கிட்டு பேசியது தவறானது," என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், அந்த கட்சியின் சட்டமன்ற குழுவின் தலைவருமான செல்வபெருந்தகை தனது டிவிட்டர் பதிவில், "பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநரை வைத்து போட்டி அரசாங்கம் நடத்தும் சர்வாதிகார போக்கை தமிழ்நாடு உடைத்து இருக்கிறது, இனி வரும் காலங்களில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் அடக்கி வாசிக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தனது டிவிட்டர் பதிவில், "ஆளுநர் பதவி தேவையில்லை என்பது தான் எங்கள் நிலைப்பாடு. ஆனால் திமுக அரசுக்கும், ஆளுநருக்கு இடையே இருக்கும் மோதல் போக்கு, ஜனநாயகத்தை பலவீனப்படும்," என பதிவிட்டுள்ளார்.

பட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்றைய ஆளுநர் விவகாரம் தொடர்பாக தனது கருத்தை டிவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரை ஆளுநர் மாற்றிப் படிப்பது மரபை மீறிய செயல் என்றும், அதே நேரத்தில் நாணயத்தின் இருபக்கமாக ஆளுநரும், அரசு செயல்பட வேண்டும்," என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து ஆளுநர் குறித்தான கருத்துக்களை பலரும் சமுக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: