You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்ததை எதிர்த்து போராட்டம் - வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் டாக்காவில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து, போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கூறியது என்ன?
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை அவரது அவாமி லீக் கட்சி விமர்சித்துள்ளது. நீதிமன்றத்தின் முடிவு "தீங்கிழைக்கும் மற்றும் பழிவாங்கும் நோக்கில் வந்தது" என்று அக்கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
"வங்கதேச மக்கள், அவாமி லீக் மற்றும் அனைத்து விடுதலை ஆதரவு சக்திகளும் இந்த முடிவுக்கு எதிராக ஓர் இயக்கத்தைத் தொடங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவாமி லீக் கூறியுள்ளது.
இன்று (நவம்பர் 18) நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை அவாமி லீக் அறிவித்துள்ளது. நவம்பர் 19 முதல் 21 வரை நாடு தழுவிய பல்வேறு போராட்டங்களுக்கும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
வங்தேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் தண்டனையை அறிவித்த தீர்ப்பாயம் குறித்தும் அவாமி லீக் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
"தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குப் பதிலாக, சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு விரோதமான, தேர்ந்தெடுக்கப்படாத பாசிச யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் நாட்டில் சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர் அவர்கள் சர்வதேச கொள்கைகளை மீறி ஒரு சட்டவிரோத தீர்ப்பாயத்தை நிறுவியுள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இந்த தீர்ப்பாயம் முற்றிலும் சட்டவிரோதமானது, தீங்கிழைக்கக் கூடியது, பழிவாங்கல் மற்றும் மோசமான எண்ணங்களால் தூண்டப்பட்டது, யூனுஸ் சட்டவிரோதமாக கைப்பற்றிய அதிகாரத்தைக் காப்பாற்ற ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார்" என்று அவாமி லீக் விமர்சித்துள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான விசாரணை 'ஒரு நாடகத்தைத் தவிர வேறில்லை' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முகமது யூனுஸ் என்ன சொன்னார்?
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நேற்று (நவ.17) தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
"வங்கதேச நீதிமன்றம் இன்று(நவ.17) வழங்கியுள்ள தெளிவான தீர்ப்பு நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் எதிரொலிக்கிறது" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"குற்றச்சாட்டு மற்றும் தண்டனை ஒரு அடிப்படைக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது: யாரும், எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இந்த முடிவு ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024 எழுச்சியின் போது பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கும், தங்கள் இழப்புகளால் இன்னும் போராடி வரும் குடும்பங்களுக்கும் நீதியை வழங்குகிறது." என்று அவர் கூறியுள்ளார்.
"பல ஆண்டுகளாக ஒடுக்குமுறையால் அழிக்கப்பட்ட ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 1400 பேர் உயிரிழந்தனர் என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற குடிமக்கள். நிராயுதபாணியான போராட்டக்காரர்களுக்கு எதிராக ஹெலிகாப்டர் உள்பட எவ்வளவு அதிக பலம் பயன்படுத்தப்பட்டது என்பதை பல மாத சாட்சியங்கள் விவரித்தன. நமது நீதி அமைப்பு குற்றவாளிகளை பொறுப்பேற்க வைக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது." என்று முகமது யூனுஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஷேக் ஹசீனா கூறியது என்ன?
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஷேக் ஹசீனா ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"அவாமி லீக்கை ஓர் அரசியல் சக்தியாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இடைக்கால அரசாங்கம் பயன்படுத்தும் வழிமுறையே மரண தண்டனை" என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கு ஓர் 'கேலிக்கூத்து' என்று கூறி, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
மேலும், "சாட்சியங்களை உண்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சோதிக்கக்கூடிய ஒரு முறையான நீதிமன்றத்தில் என் மீது குற்றம் சாட்டுபவர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறும் அவர் இடைக்கால அரசுக்கு சவால் விடுத்தார்.
ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்
கடந்த ஜூன் மாதத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அரசின் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், "கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 25,000 பேர் காயமடைந்தனர்" என வாதிட்டார். இறந்தவர்களின் பட்டியலையும் அரசு தரப்பு தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.
ஷேக் ஹசீனா உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 747 பக்க ஆவணமும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மூன்று பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி, சதி, உதவி செய்தல், உடந்தையாக இருத்தல் என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
"ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்களை 'ரசாக்கர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள்' என்று கூறி ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்" என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.
வங்கதேசத்தில், ரசாக்கர் என்பது தேசதுரோகி அல்லது துரோகி என்று பொருள்படும் இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்து கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பிட பயன்படுகிறது.
இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில், "குற்றம் சாட்டப்பட்ட அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் சவுத்ரி அப்துல்லா அல் மாமூல் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலும், உதவியுடனும், சட்ட அமலாக்க முகமைகளும் அவாமி லீக்கின் ஆயுதமேந்திய ஆட்களும் கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் அப்பாவி மற்றும் நிராயுதபாணியான மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பெரியளவில் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் துன்புறுத்த உதவினர்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் இந்தக் குற்றங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தே செய்யப்பட்டவை என்று கூறுகிறது.
ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது, ரங்பூரில் உள்ள பேகம் ரோகையா பல்கலைக்கழக மாணவர் அபு சயீத்தை தூண்டுதலின்றி கொலை செய்ததாகவும், தலைநகரில் உள்ள சங்கர் புல்லில் ஆறு பேரைக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தவிர, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளில் அஷுலியாவில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களின் உடல்களை எரித்ததாகவும், ஒருவரை உயிருடன் எரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு