You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: 15 லட்ச ரூபாய்க்காக தனியார் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை அரசு
(மே 21: இன்றைய இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் போலிசாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்கத் தயார் என இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக லங்காஸ்ரீ இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததுடன், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்றது.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகியவை முற்றுகையிடப்பட்டு மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறைக்கான விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில்தான், இலங்கை பிரதமர் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
15 லட்ச ரூபாய்க்காக தனியார் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை அரசு
இலங்கையிலிருந்து தடகள வீரர்களை, கொலம்பியாவில் நடக்க உள்ள, உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வீரர்களை கொலம்பியா அனுப்புவதற்கு ஆகும் விமான செலவான சுமார் 1.5 மில்லியன் (15 லட்சம்) ரூபாய்க்காக தனியாரின் உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது என்று `தி ஐலேண்ட் ஆன்லைன்` இணையத்தில் செய்தி வெளியியாகியுள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, கொலம்பியாவின் காலி நகரில் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு தகுதியான வீர்ரகளை அனுப்ப வேண்டும்.
அதேபோல, இலங்கையில் ஏற்கனவே மே 9ஆம் தேதி நடக்கவிருந்த தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளும் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த போட்டிகளும் ஜூன் 7முதல் 10 வரையிலான தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை நடத்தி, இதன்மூலமும் வீரர்களை தேர்வு செய்து சர்வதேச போட்டிக்களங்களுக்கு அனுப்ப வாய்ப்புண்டு.
ஆனால், தேர்வு செய்யப்பட்ட வீரர்களை அனுப்புவதற்கான செலவைக் கையாளுவதில் பொருளாதாரத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசும்போது "முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சிறந்த வீர்ரகள் இருவரை மட்டும், தங்கள் சொந்தப் பணத்தில் செல்ல அனுமதிப்ப என்பது, பணம் ஏற்பாடு செய்யமுடியாத அதேசமயம் தகுதியுடையவர்கள் இருக்கும்போது முறையன்று. எனவேதான் இதில் தனியாரின் உதவியை நாடுகிறோம் என்கிறார் இலங்கை தடகளப்பிரிவின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் என்று ஐலேண்ட் ஆன்லைன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இனி நாடாளுமன்றத்தில் பணி புரிய மாட்டேன்: இலங்கை முன்னாள் அமைச்சர்
நாடாளுமன்றத்தில் ஆவேசமாக உரையாற்றிய இலங்கை முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, தான் இனி நாடாளுமன்றத்துக்கு வர நினைக்கமாட்டேன் என்று பேசியதாக வீரகேசரி நாளிதழின் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் உக்கிரமடைந்துள்ள நிலையில் நாட்டை மீட்டெடுப்பது எவ்வாறு என்பது தொடர்பிலேயே நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இனியும் அரசியல் நோக்கங்களுக்காக ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டிக் கொண்டு செயற்பட முற்படக்கூடாது.
அவ்வாறானால் நாம் விஜயன் காலத்திலிருந்தே அதை செய்வேண்டிவரும். நான் அமைச்சர் பதவியை பொறுப்பேற்பதற்கு முன்னர் 42 மில்லியன் ரூபாய் வருமான வரி நிலுவையை செலுத்திவிட்டே பதவியை பொறுப்பேற்றேன்.
அரசியல் மூலம் நான் ஒரு சதம் கூட பிழைக்கவில்லை. ஆனால் வீடு எரிவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் தரப்பினரையும் நான் பார்க்கின்றேன்.
அந்தளவு மோசமான கலாசாரம் எமது நாட்டில் தலைதூக்கி இருக்கின்றது. இதன் பின்னர் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு நான் நினைக்கமாட்டேன்.
சுற்றுலாத்துறை மூலம் 2018ஆம் ஆண்டு 4.4 பில்லியன் வருமானமாக கிடைத்தது. 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர் இப்போது அவை இல்லாமல் போயுள்ளன. 51 பில்லியன் டாலரை கடனாக செலுத்த வேண்டியுள்ளது.
எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு 43 ரூபா செலவாகிறது. சூரியசக்தி மூலம் அதனை உற்பத்தி செய்தால் 15 ரூபாய்க்கு அதனை குறைத்துக் கொள்ள முடியும். அதற்கு பங்களிப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என்று அலி சப்ரி பேசியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்