You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி - சஜித் பிரேமதாச பேட்டி: 'நரேந்திர மோதி இன்னும் உதவி செய்ய வேண்டும்'
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ், இலங்கையில் இருந்து...
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை அகற்ற அனைத்து ஜனநாயக வழிமுறைகளையும் பின்பற்றப் போவதாகவும், மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இருப்பதாகவும் இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிபிசி தமிழிடம் கூறினார்.
அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவு, எதிர் காலத் திட்டம், சர்வதேச செலாவணி நிதியத்தின் உதவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிபிசி தமிழுக்கு அவர் பேட்டியளித்தார்.
"குற்றப் பிரேரணை, நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவத்தை ஒழிப்பது போன்ற புதிய கருத்துக்களை முன்னெடுப்பது, 20-ஆம் சட்ட திருத்தத்தை திரும்பப்பெற்று, 19-ஆவதைக் கொண்டு வருவது போன்ற பல வழிகளில் நாங்கள் செயலாற்றுவதைப் பரிந்துரைக்கிறோம்." என்று அவர் கூறினார்.
இலங்கையில் இதுவரை இல்லாத பொருளாதர நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. நாணயத்தின் மதிப்பு சுமார் இரண்டு பங்கு வரை சரிந்திருக்கிறது.
"தற்போதைய நிர்வாகம், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி, மற்றும் நாடாளுமன்றத்தில் இருக்கும் அவரது கூட்டாளிகள் இந்த சிக்கலை உருவாக்கியிருக்கிறார்கள்." என்று சஜித் பிரேமதாச கூறினார்.
கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கொழும்பு காலி முகத்திடலில் ஏராளமான பொதுமக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இரவும் பகலுமாக தொடர்ச்சியாக பங்கேற்றிருக்கிறார்கள். ஆயினும் அதிபரோ, பிரதமரோ பதவி விலக இயலாது என அறிவித்து விட்டார்கள்.
"நெருக்கடிக்கு நாங்கள் பொறுப்பில்லை"
சஜித் பிரேமதாசாவும் போராட்டங்களில் அவ்வப்போது நேரடியாக பங்கேற்று வருகிறார்.
"அவர்கள் (மக்கள்) ஜனாதிபதியை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள். அவரது குடும்பத்தை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள். அரசாங்கத்தை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள். காலி முகத்திடலில் இருக்கும் இளைஞர்களும், பொது சமூகமும், பெரும்பான்மையான குடிமக்கள், மாற்றத்திற்காக ஏங்குகிறார்கள், பதட்டத்துடன் காத்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும்."
நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுமே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று பல போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று சஜித்திடம் கேட்டபோது, "அதை அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்," என்றார்.
"ஏனெனில் நாங்கள் ஒரு புதிய கட்சி. பிப்ரவரி 2020ல் தான் நாங்கள் கட்சியை பதிவு செய்தோம். நாங்கள் ஒரு புதிய பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். அனைவருக்கும் செழிப்பைக் கொண்டுவரும் கொள்கையினால் வழிநடத்தப்படும் பயணம் — ஒரு சிலருக்கோ, ஒரு அரசியல் குடும்பத்தினருக்கோ அல்ல."
"20-ஆவது சட்டத் திருத்தத்தை ஒழிப்போம்"
இலங்கையில் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் 20-ஆவது சட்டத் திருத்தம் 2020-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பிரதமரின் அதிகாரங்கள் குறைப்பட்டன. நாடாளுமன்றத்தைக் கலைப்பது உள்ளிட்ட கூடுதலான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டன.
தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் 20-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக ஒழிப்பதே முதல் வேலையாக இருக்கும் என்று சஜித் கூறினார்.
"முதலும் முக்கியமுமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ முறையை (Executive presidential system) மாற்ற வேண்டும். நிச்சயமாக. நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் கூட இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வோம். கண்காணிப்புகள் இருப்பதை உறுதி செய்வோம், ஒற்றைப்படையாக முடிவுகள் எடுக்கும் முறையை எதிர்ப்போம்."
"நல்ல திட்டங்களை ஆதரிப்போம்"
தற்போதைய அரசை எதிர்த்தாலும் நாட்டின் நலனுக்கான திட்டங்களை ஆதரிப்பதாகவும் சஜித் கூறினார்.
"[ஐஎம்எஃப் கடனுதவி] பலனளிக்கும் என்று நம்புகிறேன். சரியான கொள்கைகளை நான் ஆதரிப்பேன். ஆனால் அரசாங்கம் சரியான கொள்கைகளை பின்பற்றவில்லை. வேண்டுமென்றே இந்த நாட்டை அவர்கள் ஒரு குழப்பமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள். தவணைகளை நிறுத்தி வைக்கவும் தள்ளிவைக்கவும் முயற்சிக்க வேண்டும். நமது இருதரப்பு, பலதரப்பு கூட்டாளிகளுடன் பேச்சு நடத்த வேண்டும். நமது கடன் பத்திரங்களை வைத்திருப்போருடனும் பேச்சு நடத்த வேண்டும்."
"இந்தியா உதவ வேண்டும்"
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மேலும் உதவ வேண்டும் என வலியுறுத்துவதாக சஜித் பிரேமதாச கூறினார்.
"இலங்கைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவும் படி இந்திய அரசின் பிரதிநிதிகளிடம் கூறியிருக்கிறேன். மேலும் இந்தியாவின் வரிசெலுத்துபவரால் தரப்படும் உதவி, மக்களின் நலனுக்குப் பயன்படுவதை உறுதி செய்யுமாறு கூறியிருக்கிறேன்."
இந்தியாவைக் காட்டிலும் சீனாவையே அதிகம் நாடுவதாக கூறப்படும் கருத்துகளை சஜித் மறுத்தார். அது "குழந்ததைத் தனமானது" என்று அவர் கூறினார்.
"13-ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவோம்"
மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கும் 13-ஆவது சட்டத் திருத்தத்தை ஆதரிப்பதாகக் கூறிய சஜித், "நாங்கள் இரட்டை நாக்கு கொண்டவர்கள் அல்லர்" என்று தெரிவித்தார்.
"அந்த சட்டதிருத்தம் எதுவாக இருக்கிறதோ, அதை அவ்வாறே ஆதரிக்கிறோம். கவலைப்படாதீர்கள். நாங்கள் இரட்டை நாக்கு கொண்டவர்கள் அல்ல. அங்கு ஒன்றும், இங்கு ஒன்றும் பேசுபவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் கொள்கையை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். எங்களின் அரசியலமைப்பின் ஒற்றையாட்சி தன்மையை 13 வது சட்டதிருத்தம் பாதிக்காது. இதை உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது. என் தந்தையும் 13வது சட்டதிருத்தை ஆதரித்தார். அவரது மகனாகிய நானும் அதையே தான் செய்வேன்."
1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி 13-ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனினும் மாகாண சபைகளுக்கு காவல்துறை, நிதி போன்ற அதிகாரங்களை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் இந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இது பேட்டியின் சுருக்கமான வடிவம்: சஜித் பிரேமதாசவின் முழு பேட்டி இங்கே...
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்