தமிழக முன்னாள் வீரர் ராபின் சிங் ஐக்கிய அரபு எமிரேட் கிரிக்கெட் இயக்குநராகிறார்

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ராபின்சிங் ஐக்கிய அரபு எமிரேட் கிரிக்கெட் அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்ரினிடாட்டில் பிறந்த ராபின் சிங், 1984ல் சென்னைக்கு படிக்க வந்தார். முதலில் கல்லூரி அளவிலான கிரிக்கெட்டில் விளையாடிய அவர், பிறகு தமிழ்நாடு அணியில் விளையாடி, அணி ரஞ்சி கோப்பை வெல்ல உதவினார். பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுன்டராக இடம் பெற்று சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார்.
1989 முதல் 2001 வரையிலான காலத்தில் 136 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 2,236 ரன்கள் குவித்ததுடன், 69 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் ராபின். ஃபீல்டிங்கிலும் அவர் சிறந்து விளங்கினார்.
பிறகு, காலப்போக்கில் அவர் கிரிக்கெட் பயிற்சியாளராக தடம் பதிக்கத் தொடங்கினார்.
ஐபிஎல் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணியோடு அந்த வகையில் சேர்ந்து செயல்பட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட் கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளராக இருந்த டௌகி பிரௌன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 56 வயதாகும் ராபின் சிங் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட் தேசிய அணி, ஃபிக்சிங் ஊழலில் சிக்கி அதில் இருந்து மீண்டுவரப் போராடிவரும் நிலையில் பொறுப்புக்கு வருகிறார் ராபின்.
இந்த ஊழலின் விளைவாக அணித் தலைவர் முகமது நவீத் உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிலர் தற்காலிகமாக நீக்கப்பட்டனர். அணியின் தேர்வுக் குழு கலைக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












