இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடனத்துடன் ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன் தொடங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே இம்முறை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கியுள்ளது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்துள்ளது.
டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்ளெஸிஸ் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். கோலி, டூப்ளெஸிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். 2வது ஓவரில் இருந்து டுப்ளெஸிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தேஷ்பாண்டே ஓவரில் 4 பவுண்டர்களை டூப்ளெஸிஸ் விளாசினார். டூப்ளெஸிஸ் அதிரடியால் ஆர்சிபி 10 ரன்ரேட்டில் பயணித்தது. 4வது ஓவரை முஸ்தபிசுர் வீசியபோது, 2வது பந்தில் பவுண்டரி அடித்த டூப்ளெஸிஸ், 3வது பந்தை ஸ்லோவர் பந்தாக வீசினார்.
இதில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து 35 ரன்களில் டூப்ளெஸிஸ் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பட்டிதார் டக்அவுட்டில் தோனியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஒரே ஓவரில் முஸ்தபிசுர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 6வது ஓவரை தீபக் சஹர் வீசினார்.
சஹர் வீசிய 3வது பந்தில் மேக்ஸ்வெல் ரன் ஏதும் சேர்க்காமல் தோனியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி மேக்ஸ்வெல் என்னும் மிகப்பெரிய விக்கெட்டை இழந்தது. பவர்ப்ளே ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் சேர்த்தது.
நான்காவது விக்கெட்டுக்கு கோலியும், கேமரூன் கிரீனும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்தது. முஸ்தபிசுர் வீசிய 12வது ஓவரில் கோலி 21 ரன்கள் சேர்த்த நிலையில் ரவீந்திராவிடம் விக்கெட்டை இழந்தார்.
அதே ஓவரின் 4வது பந்தில் கேமரூன் கிரீன் 18 ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். முஸ்தபிசுர் தனது 2வது ஓவரிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்து தடுமாறியது.
ஆறாவது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் இருவரும் ஜோடி சேர்ந்தனர். தொடக்கத்தில் இருவரும் மந்தமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 100 ரன்களைக் கடந்தது. ஆனால், 15வது ஓவர்களுக்குப் பின் ராவத், டிகே இருவரும் கியரை மாற்றி ரன் வேகத்தை அதிகரித்தனர்.
தீக்சனா வீசிய 16வது ஓவரில் டிகே ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார். தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் ராவத் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி, டிகே ஒரு சிக்ஸர் என 25 ரன்கள் சேர்த்தனர். இந்த ஓவர்தான் ஆர்சிபி அணிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பின் ராவத், டிகே இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்தனர். முஸ்தபிசுர் வீசிய 19வது ஓவரில் ராவத் ஒரு சிக்ஸரும்,டிகே ஒரு பவுண்டரியும் விளாசி 16 ரன்கள் சேர்த்தனர்.
தேஷ்பாண்டே வீசிய கடைசி ஓவரில் கார்த்திக் பவுண்டரி அடிக்கவே, கடைசிப் பந்தில் ராவத் ரன் எடுக்க முற்பட்டு 48 ரன்னில் தோனியால் ரன்அவுட் ஆனார். டிகே 38 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 57 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணியை தூக்கி நிறுத்தினர்.