You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? - மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்

“என் அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டேன்”, என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை, தி.நகரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிட்டவருக்கு சீட் வழங்கிய அதிமுக - வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?

    நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது.

    அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.

    எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரையும் சேர்த்து 34 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

    அதிமுக பட்டியலில் ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்து இரண்டே வாரங்களில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்.

  2. கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு டெல்லி அரசு எப்படி நடக்கும்?

    தில்லி அரசின் புதிய கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

    இதற்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள், டெல்லி முன்னாள் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் சிறையில் இருக்கும் போது, கட்சியும், டெல்லி அரசும் எப்படி இயங்கும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

    கெஜ்ரிவால் இல்லாத டெல்லியில் கட்சியையும் ஆட்சியையும் கையாளக்கூடிய திறமையான தலைமையை கண்டுபிடிப்பதே சவாலாக உள்ளது.

    லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், இந்த சவால் இன்னும் பெரிதாகிவிட்டது.

    டெல்லி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் குஜராத்தில் அக்கட்சி தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கவிருந்தது. கேஜ்ரிவால் அதன் நட்சத்திர பேச்சாளராக இருந்தார்.

    கைது அச்சத்தின் மத்தியில் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், டெல்லி அரசின் அமைச்சர் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்கள் தலைமைப் பதவிக்காக விவாதிக்கப்பட்டதாக சில செய்திகள் கூறுகின்றன.

    டெல்லி அரசில், கல்வி, நிதி, பொதுப்பணித்துறை, வருவாய் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளுக்கு அதிஷி பொறுப்பேற்றுள்ளார். கேஜ்ரிவாலுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.

    இதேபோல், சௌரப் பரத்வாஜ் டெல்லி அமைச்சரவையின் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார், மேலும் சுகாதாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற பல முக்கிய இலாகாக்களை கையாண்டு வருகிறார்.

    இருப்பினும், முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார் என்று அதிஷி மற்றும் சோம்நாத் பார்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

    'தேவைப்பட்டால் சிறையில் இருந்தே அரசை நடத்துவார். அவர் தண்டனை பெறாததால் சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவதை எந்தச் சட்டமும் தடை செய்யவில்லை. கெஜ்ரிவால் முதல்வராக இருந்தார், இருக்கிறார், இருப்பார்.” என்றார் அதிஷி.

  3. மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் எவை?

    பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. இந்தக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை ஆகியோரது பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

    காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு திருச்சி மற்றும் தேனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

  4. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது: அமலாக்கத்துறை சோதனையில் என்ன நடந்தது?

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்ந்து 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாமல் இருந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, இன்று மாலை அவரது வீட்டிற்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    இந்த வழக்கில் ஏற்கெனவே முன்னாள் துணை முதல்கர் மணிஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்தக் கைது குறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “ஒரு மாநில முதல்வரை கைது செய்து விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய அரசியல் நகர்வுதான் என்று இந்தக் கைது நடவடிக்கையை விசிக தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

  5. ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டி

    ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில்தான் தாம் போட்டியிடுவதாகவும் இரட்டை சின்னம் கிடைக்கவில்லை என்பதால் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    “எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க விரும்பினார்கள். ஆனால், இரட்டை இலை சின்னம் இல்லாத காரணத்தால் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும்” தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் “பாஜகவில் தனக்கு அன்பும் உரிய அங்கீகாரமும் உள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

    மேலும், “இரட்டை இலை சின்னத்தை எதிர்த்துப் போட்டியிடவில்லை எனவும் இரட்டை இலை சின்னத்தைப் பெறவே தேர்தலில் களமிறங்குவதாகவும்” கூறிய அவர் சின்னத்தைப் பெறுவதற்கான போராட்டம் தொடரும் எனவும் கூறினார். அதோடு, பாஜகவிற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய அவர், தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு தன்னை பாஜகவினர் நிர்பந்திக்கவில்லை என்று கூறினார்.

  6. அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை ஏற்பாடா? என்ன நடக்கிறது?

    அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக டெல்லி அரசின் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சௌரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.

    அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது போலத் தெரிகிறதுஎன்றும் கேஜ்ரிவாலை போனில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இல்லத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(மார்ச் 21) மாலை சென்றடைந்தனர். கேஜ்ரிவாலை அழைப்பதற்காக அதன் குழு வந்திருப்பதாக அமலாக்கத்துறையை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் சௌரப் பரத்வாஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    “டெல்லி முதல்வர் வீட்டுக்குள் யாரையும் அனுமதிக்காத காவல்துறையின் செயல்பாடு, உள்ளே இருக்கும் சூழல் குறித்து உணர்த்துகிறது. முதல்வர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதைப் போலத் தெரிகிறது. அவர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், அவரைக் கைது செய்வதற்கான முழு ஏற்பாடுகளும் நடந்து வருவதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.

  7. தேர்தல் பத்திரங்கள்: முழு விவரங்களையும் பகிரங்கப்படுத்திய தேர்தல் ஆணையம்

    பாரத ஸ்டேட் வங்கி இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு தரவுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது.

    இந்தத் தரவுகளில், தேர்தல் பத்திர எண்களுடன் கூடிய இரண்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. முதல் பட்டியலில் நிறுவனங்களின் பெயர்களும் அவர்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் எண்களும் உள்ளன.

    இரண்டாவது பட்டியலில் அதே எண்கள் கொண்ட தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் பணம் பெற்றுள்ளன என்ற விவரம் உள்ளது.

    இதன் மூலம், எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் பற்றித் தன்னிடம் உள்ள அனைத்து தரவுகளையும் பகிரங்கப்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். இப்போது இரண்டு பட்டியலில் உள்ள தேர்தல் பத்திர எண்களைப் பொருத்திப் பார்த்தால், எந்தெந்த நிறுவனம் எந்த கட்சிக்கெல்லாம் நிதியளியத்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

  8. பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டி

    தமிழ்நாடு பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னணி தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 9 வேட்பாளர்களின் பெயர்களும் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,

    • தென்சென்னை – தமிழிசை சௌந்தர்ராஜன்
    • மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்
    • வேலூர் – ஏ.சி.ஷண்முகம்
    • கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன்
    • நீலகிரி – எல்.முருகன்
    • கோயம்புத்தூர் – கே.அண்ணாமலை
    • பெரம்பலூர் – டி.ஆர்.பாரிவேந்தர்
    • நெல்லை – நயினார் நாகேந்திரன்
    • கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்
  9. தேர்தல் பத்திரங்கள்: முழு விவரங்களையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த எஸ்பிஐ

    இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இன்று பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது. சமர்பிக்கப்பட்ட இந்தத் தரவுகளில் தேர்தல் பத்திரங்களுக்கான பிரத்யேக வரிசை எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இந்த வரிசை எண்கள் மூலமாக நன்கொடையாளர்கள் குறிப்பாக எந்தக் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியளித்தார்கள் என்பதையும், எவ்வளவு பணத்தை அக்கட்சிகள் பெற்றார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

    இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது. அதில் "எஸ்பிஐ இப்போது அனைத்து விவரங்களையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில் முழுமையான வங்கிக் கணக்கு எண்களும், கேஒய்சி விவரங்களும் மட்டும் இல்லை. மற்றபடி அனைத்து விவரங்களும் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன," என்று கூறப்பட்டுள்ளது.

  10. ”யுத்தத்தின் மூலம் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை” - விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி

    இவர் வசந்தி வடிவேல். விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான வடிவேல் வசந்தி தற்போது இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பின் புதுமண்டபத்தடியில் வசித்து வருகிறார்.

    1996இல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோதே விடுதலை புலிகள் அமைப்பினர் தன்னைக் கடத்தியதாக அவர் கூறுகிறார்.

    ஈழப்போரின்போது தனது முகம் சிதலமடைந்ததாகவும் இதனால் ஒரு கண்ணில் பார்வையை இழந்துவிட்டதாகவும் வடிவேல் வசந்தி கூறுகிறார்.

    மகனுக்கு 2 மாதங்களாக இருக்கும்போது வடிவேல் வசந்தியை அவரது கணவர் விட்டுச் சென்றார். யுத்தத்தின் மூலம் தனக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த வடிவேல் வசந்தி தற்போது, எவ்வித உதவியும் இன்றி வாழ்வதாக ஆற்றாமையோடு கூறுகிறார்.

    சொந்தமாக வீடு கட்டுவதற்கு அவருக்கு அரசின் உதவி கிடைத்தது. அதேநேரம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை தற்போதுவரை கிடைக்கவில்லை என்றும் வடிவேல் வசந்தி கூறுகிறார்.

  11. ருதுராஜ் கெய்க்வாட்: ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசியவர் - தோனியிடம் கற்றுக்கொண்டது என்ன?

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் மற்றும் சி.எஸ்.கே.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நடந்த விஜய் ஹசாரே கோப்பையின் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து ஏழு சிக்சர்களை அடித்து லிஸ்ட்-ஏ கிரிக்கெட் சாதனை படைத்தார். அவர் தனது ஆட்டத்தில் தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன?

    விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  12. தமிழ்நாடு ஆளுநருக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது என்ன?

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து சட்டமன்ற உறுப்பினராக அவர் தொடர்வதற்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நீக்கப்பட்டது. தமிழக அமைச்சரவையில் மீண்டும் பொன்முடியை அமைச்சராக சேர்க்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.

    பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் கூறியதாக தகவல் வெளியான நிலையில், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது.

    இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    பொன்முடி மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், தமிழக ஆளுநர் அவர் இன்னும் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகவில்லை எனக் கூறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்கி வாதத்தை முன்வைத்தார்.

    மேலும் 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அமைச்சரை நியமிக்கும் முதலமைச்சரின் பரிந்துரையை எந்த ஆளுநரும் மறுத்ததில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு, உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்று சிங்வி கூறினார்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, "உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், அதை ஆளுநரால் எப்படி மறுக்க முடியும்," என்றார்.

    "ஆளுநரின் இந்தச் செயல்பாடு எங்களுக்குக் கவலை அளிக்கிறது. உச்சநீதிமன்றம் ஒரு வழக்கின் தீர்ப்புக்கு தடை விதித்த நிலையில், ஆளுநர் எவ்வாறு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைப்பது அரசமைப்புக்கு எதிரானது என எப்படிக் கூற முடியும்?"

    பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் தவறு இழைத்துள்ளார். ஏற்கெனவே மாநில அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போட்டார், பின்னர் நீதிமன்றம் தலையிட்டவுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதன் தொடர்ச்சியாக தற்போது ஒருவரை அமைச்சராக்க முதலமைச்சர் அளித்த பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்கிறார் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    "ஆளுநருக்கு சட்ட ஆலோசனை வழங்கும் நபர்கள் தவறான வழிகாட்டுதலை வழங்கியுள்ளனர். இனிமேல் ஆளுநர் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை நிறுத்தி வைத்தால் அதை ஆளுநர் பின்பற்றிச் செயல்பட வேண்டும். பொன்முடி விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். எங்களால் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். ஆனால் இதைச் சத்தமாக வெளியே சொல்ல விரும்பவில்லை," என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    பின்னர் இந்த வழக்கு நாளை வரை விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

  13. சிஎஸ்கே-வின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இனி மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியை ருத்ராஜ் கெய்க்வாட் வழிநடத்துவார். இதுகுறித்த அறிவிப்பு சி.எஸ்.கே. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் தெரிவித்துள்ளது.

  14. டி.எம்.கிருஷ்ணா: சங்கீத கலாநிதி விருது குறித்த எதிர்ப்புக்கு மியூசிக் அகாடமி பதில்

    கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை எதிர்த்து, மியூசிக் அகாடமி ஆண்டு விழாவைப் புறக்கணிப்பதாக இசைக் கலைஞர்கள் ரஞ்சனி மற்றும் காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி பதிலளித்துள்ளார்.

    மார்ச் 21, வியாழன் அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிராக ரஞ்சனி மற்றும் காயத்ரி பகிரங்கமாகத் தெரிவித்த கருத்துகள் மற்றும் விழாவைப் புறக்கணிக்கும் அவர்களது முடிவு, ஆகியவற்றின் பின்னணியும் நோக்கமும் பல சந்தேகங்களை எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

    “டி.எம்.கிருஷ்ணா பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செய்து வரும் இசைப் பணிக்காக மட்டுமே இந்த ஆண்டு அகாடமியின் செயற்குழு, அவரை சங்கீத கலாநிதி விருதுக்காகத் தேர்ந்தெடுத்தது. எங்கள் இந்தத் தேர்வுக்கு வேறு எந்தக் காரணங்களும் இல்லை,” எனவும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், “வரவிருக்கும் ஆண்டு விழாவைப் புறக்கணிப்பதற்கான உங்கள் முடிவை நாங்கள் கருத்தில் எடுத்துக்கொள்கிறோம். ஏனெனில் நீங்கள் விரும்பாத, விருதுக்குத் தகுதியற்ற மற்றும் மோசமான இசை ரசனை கொண்ட ஒரு இசைக் கலைஞரை அகாடமி விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாக நீங்கள் கருதுகிறீர்கள்.

    நீங்கள் எனக்கும் அகாடமிக்கும் அனுப்பிய கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்கள். இது ஒழுக்கக்கேடானதாக இருப்பதைத் தாண்டி, உங்கள் கடிதத்தின் நோக்கம் மற்றும் பின்னணி குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது,” என்று முரளி கூறியுள்ளார்.

    மேலும், “நீங்கள் எங்களிடமிருந்து ஒரு தெளிவான பதிலைப் பெறுவதற்கு முன்பாக, சமூக ஊடகங்களில் இதுகுறித்துப் பேசியுள்ளீர்கள். பொதுவாக இத்தகைய செயல்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை. ஆனால், கர்நாடக சங்கீதத் துறையில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு இந்தப் பதிலை அளிக்கிறோம்,” என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் மெட்ராஸ் மியூசிக் அகாடமி தலைவர் முரளி.

    டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராக இருவரும் பேசிய கருத்துகள் குறித்துத் தனது அதிர்ச்சியை அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ள முரளி, சங்கீத கலாநிதி விருதைத் தேர்ந்தெடுப்பது மியூசிக் அகாடமியின் உரிமை என்றும் கூறியுள்ளார்.

  15. விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி

    நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி இறுதியாகி, தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியினர் நேரில் சென்று மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிகவின் நிர்வாகிகளுடன் அதிமுகவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் பரப்புரையை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தார். அத்துடன் ஜனவரி 24ஆம் தேதி திருச்சியில் அதிமுக சார்பாக நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள தன்னை எடப்பாடி பழனிசாமி அழைத்ததாகவும் அவர் கூறினார்.

    திருச்சி மாநாட்டில், அதிமுக கூட்டணியில் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தொடங்க இருப்பதாக பிரேமலதா செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

    அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், "வெற்றிலை பாக்கு மாற்றி உறுதி செய்து விட்டோம். தேதி மட்டும் பின்னர் அறிவிக்கப்படும்," என்றார்.

    தேமுதிக போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளைக்குள் வெளியிடப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

  16. மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்புக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

    சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை கண்காணிக்க, உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை உருவாக்குவதற்கான அறிவிப்பை புதன்கிழமை (மார்ச் 20) மத்திய அரசு வெளியிட்டது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) கீழ் இப்பிரிவு செயல்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் இந்த உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.

    "தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் விதி 3 இன் துணை விதி (1) இன் உட்பிரிவு (பி) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், எந்தவொரு உண்மைச் சரிபார்ப்பையும் செய்ய முடியும். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) கீழ் உள்ள பிரிவு, வணிகம் தொடர்பாக மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவாகும்" என்கிறது அந்த அறிவிப்பு.

    இந்த பிரிவை அமைப்பதற்கு எதிராக `ஸ்டாண்ட் அப் காமெடியன்` குணால் கம்ரா மற்றும் எடிட்டர்ஸ் கில்ட் சார்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த, மார்ச் 13-ம் தேதியன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. இரு நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியால் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மும்பை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியின் முழுமையான மற்றும் நியாயமான பரிசீலனையைப் பாதிக்கக்கூடிய கருத்தைத் தெரிவிப்பதைத் தவிர்க்கிறோம்" என தெரிவித்தார்.

    "மத்திய அரசு மார்ச் 20, 2024 அன்று வெளியிட்ட அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.

    "பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் மீதான விதி 3(1)(b)(5) இன் தாக்கம் உயர் நீதிமன்றத்தால் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். அதன்படி, அரசின் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது" என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  17. "ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்" - மத்திய அரசை கூட்டாக விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

    காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியதன் மூலம், மத்திய அரசு ஜனநாயகத்தைக் கொன்றுவிட்டதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொருளாளர் அஜய் மக்கான் ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    வங்கிக் கணக்குகளை முடக்கும் முடிவு, காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான குற்ற நடவடிக்கை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதற்கு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    காங்கிரசின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்பு முடக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    ரூ. 14 லட்சம் வருமான வரி பிரச்னைக்காக, ரூ.285 கோடி அளவிலான பணத்தை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த நடவடிக்கை காங்கிரசின் நிதி சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நடவடிக்கை குறித்து நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் மௌனம் சாதிப்பது குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்றும் கூறினார்.

    இதனால் அக்கட்சியால் ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும் கட்சி விளம்பரங்கள் கொடுக்கவும் முடியவில்லை என்று தெரிவித்தார். இது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று அவர் கூறினார்.

    மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரசின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியதால், தங்களால் சரியாக பிரசாரம் செய்ய முடியவில்லை என்றும் அஜய் மக்கான் கூறினார்.

    மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "தேர்தல் பத்திரங்கள் சட்டத்திற்கு புறம்பானது என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது, ஆனால் அதே தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தனது கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்தது. மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பணப்பற்றாக்குறையால் இந்த தேர்தலில் சரியாக போட்டியிட முடியாமல் போகலாம்" என தெரிவித்தார்.

  18. தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப். 13 முதல் கோடை விடுமுறை

    ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    2023-2024 கல்வியாண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வுகளுக்கு பிறகு, ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்காக பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். தேர்தலுக்கு பிறகு, ஏப்ரல் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும். ஏப்ரல் 26ம் தேதி ஆண்டின் கடைசி வேலை நாளாக இருக்கும்.

  19. இரண்டாவது கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இரண்டாவது கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    நேற்று முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு இருந்தது. மேலும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா 1 இடங்களும் ஒதுக்கி இருந்த நிலையில், மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

    புதுச்சேரி தொகுதி மற்றும் தமிழ்நாட்டில் மீதமுள்ள 16 தொகுதிகளில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பாளரையும் அதிமுக அறிவித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்

    • கோவை - சிங்கை ராமச்சந்திரன்
    • திருச்சி - கருப்பையா
    • பெரம்பலூர் - சந்திரமோகன்
    • மயிலாடுதுறை - பாபு
    • ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
    • தருமபுரி - அசோகன்
    • திருப்பூர் - அருணாசலம்
    • நீலகிரி - லோகேஷ்
    • வேலூர் - பசுபதி
    • திருவண்ணாமலை - கலியபெருமாள்
    • கள்ளக்குறிச்சி - குமரகுரு
    • சிவகங்கை - சேகர் தாஸ்
    • நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
    • புதுச்சேரி - தமிழ்வேந்தன்
    • தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
    • கன்னியாகுமரி - பசிலியா நசரேத்

    சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்

    விளவங்கோடு இடைத்தேர்தல் - ராணி

  20. டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது - கர்நாடக இசை உலகில் எழும் எதிர்ப்பு

    கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மியூசிக் அகாடமி நிகழ்வுகளில் தாங்கள் பங்கேற்க போவதில்லை என, சக கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி இருவரும் அறிவித்துள்ளனர்.

    கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி சமீபத்தில் `சங்கீத கலாநிதி` விருதை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக இசைப் பாடகர்கள் ரஞ்சனி மற்றும் காயத்ரி தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

    அதில், "இந்தாண்டு மியூசிக் அகாடமி நடத்தும் இசை மாநாடு மற்றும் வரும் டிச. 25 அன்று நாங்கள் நடத்தவிருந்த இசைக் கச்சேரியையும் நாங்கள் திரும்ப பெற்றுக்கொள்கிறோம். ஏனெனில், இந்த மாநாட்டுக்கு டி.எம். கிருஷ்ணா தலைமை தாங்கவிருக்கிறார். அவர், கர்நாடக இசை உலகுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். தியாகராஜர் மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோரை அவர் அவமானப்படுத்தியுள்ளார்" என தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக இசைக் கலைஞராக இருப்பதை அவமானகரமாக கருதும் வகையில் அவருடைய நடவடிக்கைகள் உள்ளதாகவும் இசை ஆன்மிகத்தை அவர் அவமதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடக இசையை அவர் கொச்சைப்படுத்துவதாகவும் அவர்கள் அப்பதிவில் கூறியுள்ளனர். மேலும், பெரியாரை விமர்சித்துள்ள ரஞ்சனி-காயத்ரி, அவரை தொடர்ந்து டி.எம். கிருஷ்ணா புகழ்வது ஆபத்தானது என கூறியுள்ளனர்.

    அதேபோன்று, ஹரிகதா கலாட்சேபம் நடத்திவரும் துஷ்யந்த் ஸ்ரீதர், டி.எம். கிருஷ்ணாவுக்கி விருது வழங்கியதை சுட்டிக்காட்டி, அடுத்தாண்டு ஜன. 1 அன்று நடைபெறும் நிகழ்வில் தான் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார். 2017-ம் ஆண்டிலிருந்து அவர் மியூசிக் அகாடமியில் ஹரிகதா கலாட்சேபம் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிரான இந்த பதிவுகளுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த சர்ச்சை குறித்து டி.எம். கிருஷ்ணா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

    கர்நாடக இசை உலகில் சாதிய பாகுபாடுகள் குறித்து டி.எம். கிருஷ்ணா தொடர்ச்சியாக பேசிவருகிறார். கர்நாடக இசை குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது அல்ல எனக்கூறி வரும் கிருஷ்ணா, அதை சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு செல்வதற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மிருதங்கம் செய்பவர்கள் குறித்து `செபாஸ்டியன்&சன்ஸ்` எனும் புத்தகத்தை எழுதியுள்ள அவர், 2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசாசே விருது பெற்றுள்ளார்.