நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ.
- பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், நார்வே, இராக்கில் உள்ள தூதரகங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள துணைத் தூதரகத்தை ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
- இலங்கை, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், இலங்கை மத்திய வங்கியின் புதிய தலைவரை நியமிக்க உள்ளது.
- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு மத்தியில், இலங்கை நாடாளுமன்றத்தில், தற்போது நடைபெற்று வரும் பிரச்னை சம்பந்தமாக விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையின் நிதித்துறை செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொடுத்துள்ளார்.
- இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து, அரசியல் குழப்பங்களும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம் நடத்தினர்.
- கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார்.
- யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் பேசியுள்ளார்.
- இலங்கை ஜனாதிபதி செயலக வளாகத்தை நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இளைஞர், இளம் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.












