காணாமல்போகும் காட்டுயிர்: இந்தியாவில் 10 ஆண்டுகளில் 984 புலிகள் பலி - காரணம் என்ன?
2021-ம் ஆண்டில் மொத்தம் 127 புலிகள் இந்தியா முழுக்க உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன. பி.டி.ஐ செய்தியின்படி, கடந்த வியாழக்கிழமை அன்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தியளவில் 2021-ம் ஆண்டு 126 புலிகள் இறந்துள்ளதாகத் தெரிவித்தது.
டிசம்பர் 29-ம் தேதி வரையிலான தரவுகளின்படி 126 புலிகள் என்றிருந்த நிலையில், டிசம்பர் 30-ம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள கச்சிரோலி பகுதியில் மற்றுமொரு பெண் புலி உயிரிழந்தது பதிவானது.
அதற்கு முந்தைய 29-ம் தேதியன்று, மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாராவில், ஒரு புலி உயிரிழந்தது. அதோடு சேர்த்து, அதிகளவிலான புலிகள் உயிரிழந்துள்ள மாநிலமாக, மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
மேலும், கடந்த வாரத்திலேயே மேலும் ஒரு பெண் புலி மத்திய பிரதேசத்தின் டிண்டோரியில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. முதல்கட்ட சோதனையின்போது, விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பி.டி.ஐ செய்தி கூறுகிறது.