You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

"உத்தரபிரதேசத்தில் முன்பு மாஃபியாக்கள், குற்றவாளிகளே ஆதிக்கம் செலுத்தினர்": பிரதமர் மோதி விமர்சனம்

உத்தரபிரதேசத்தில் முன்பு மாபியாக்கள், குற்றவாளிகளே ஆதிக்கம் செலுத்தியதாக, பிரதமர் நரேந்திர மோதி விமர்சித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவுபெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. மணல் கடத்தல் டிராக்டர்களை பிடித்த காவல்துறையினரை சிறை பிடித்த பொதுமக்கள்

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை யில் மணல் கடத்தப்படுவதாக ராஜதானி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.ஐ.ராமபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இரண்டு டிராக்டர்களில் மணல் கடத்தப்பட்டு வருவதை அறிந்து பாலக்கோம்பை ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக டிராக்டர் உரிமையாளர்களான சேகர் மற்றும் அன்னக்கிளி ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த விவகாரத்தை அறிந்த பாலக்கோம்பையில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்ததையும் அது தொடர்பாக உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அவர்களை அப்பகுதியிலிருந்து செல்லாதவாறு முற்றுகையிட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் ஆண்டிபட்டி டி.எஸ்.பி தங்ககிருஷ்ணுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அண்டிபட்டி டி.எஸ்.பி. தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போதும் பொதுமக்கள் உடன்படாததால் அதிரடிப் படையினரின் உதவியுடன் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்திய காவல்துறையினர் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து ராஜதானி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

  3. தமிழக மீனவர்களை சந்தித்த இலங்கை கடற்றொழில் அமைச்சர்

    யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, நேற்று புத்தாண்டு தினத்தன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துப் பேசியுள்ளார்.

    இதன்போது, அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அவர்களுக்கு அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், இந்திய மீனவர்களின் செயற்பாடுகளினால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகின்றமை குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.

    மேலும் அத்துமீறல் செயற்பாடுகளின் போது கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்படும் எனவும் இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இந்திய மீனவர்களைச் சிறையில் - தான் சந்தித்தபோது; இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக வந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாக, சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் கூறினார்.

    ”எங்களின் கடலுக்குள் வந்து நீங்கள் சட்டவிரோதமாக இழுவைமடி படகைப் பயன்படுத்தக் கூடாது. அதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என அவர்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

    மேலும் தான் கூறிய விடயங்களை தமிழக மீனவர்களிடம் எடுத்துச் சென்று, உண்மை நிலைமையைத் தெரியப்படுத்துமாறு மீனவர்களிடம் வேண்டிக்கொண்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

    ”கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுவிக்கும்படி இந்திய மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். முதலில் இந்த சட்ட விரோத தொழிலை நிறுத்துமாறு நான் கூறியுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

    இதேவேளை இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறு தான் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.கைது செய்யப்பட்டு தடுப்புக் காவவில் வைக்கப்பட்டுள்ள 69 தமிழக மீனவர்களை நேற்றைய தினம் சிறையில் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு தேவையான சில அத்தியவசியப் பொருட்களை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  4. இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம்

    மரவள்ளிக் கிழங்கு - சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது - சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை தொகையின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

    குறிப்பாக காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்து விட்டன. சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ 240 ரூபாய்க்கு கிடைத்த கேரட் தற்போது 560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பச்சை மிளகாயின் தப்போதைய விலை 1000 ரூபாய். இதற்கு முன்னர் 250 ரூபாய்க்கு ஒரு கிலோ பச்சை மிளகாய் விற்கப்பட்டதாகக் கூறுகிறார் - கிழக்கு மாகாணம் அட்டாளைச்சேனையில் காய்கறி கடையினை நடத்தி வருகின்ற ஜவ்பர்.

  5. நாளை தொடங்குகிறது 15 - 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பு மருந்து முகாம்

    தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை தொடங்க உள்ளது என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  6. "சசிகலாவுக்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை": அமைச்சர் ராஜகண்ணப்பன்

    சசிகலாவுக்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை என, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    மதுரை விமான நிலையத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளரிடம் கூறுகையில், "தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது போல் பொங்கல் பண்டிகைக்கும் சிறப்புப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் பயணிகளை பாதுகாப்பாக ஊருக்கு அழைத்துச் செல்லவும் மீண்டும் அவர்களது இடத்திற்கு வந்து சேர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அதிகாரிகள் தரப்பில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எந்தவிதமான சிரமமும் இன்றி பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு நடக்காமல் இருக்க அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போல ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகள் தொடர்கிறது" என்றார்.

    கரும்பு கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு வாங்க வேண்டும், அவர்களது வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு சசிகலா வைத்த கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சசிகலாவுக்கெல்லாம் பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை என பேட்டியை முடித்துக் கொண்டார்.

  7. "உத்தரபிரதேசத்தில் முன்பு மாஃபியாக்கள், குற்றவாளிகளே ஆதிக்கம் செலுத்தினர்": பிரதமர் மோதி விமர்சனம்

    உத்தரபிரதேசத்தில் முன்பு மாபியாக்கள், குற்றவாளிகளே ஆதிக்கம் செலுத்தியதாக, பிரதமர் நரேந்திர மோதி விமர்சித்துள்ளார்.

    பிரதமர் மோதி இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோதி பேசுகையில், "இந்த பல்கலைக்கழகம் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 1,000-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பட்டம் பெறுவார்கள். விளையாட்டுக் கருவிகள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். புதியகல்விக் கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    உத்தரபிரதேசத்தில் முன்பு (முந்தைய ஆட்சிக்காலங்களில்) மாபியாக்கள், குற்றவாளிகள்தான் ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நில அபகரிப்பில் ஈடுபட்டனர்.

    அதேபோன்று, முந்தைய அரசுகள் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நம் நாட்டு இளைஞர்கள், விளையாட்டுத்துறையை தங்களது பணியாக தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

  8. வெள்ள பாதிப்பு நிவாரணம்: தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? - சு.வெங்கடேசன் கேள்வி

    தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கு நிதி அனுப்பாமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்குப் பருவமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, மத்திய அரசின் ஆய்வுக்குழுவினரும் நேரடியாக வந்து பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்காலிகமாக சீர்செய்வதற்கு 1,510 கோடி ரூபாயும் உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீர்செய்வதற்கு 4,719 கோடி ரூபாயும் கோரி மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது.

    இதற்கு எந்தவித பதிலும் வராததால், டிசம்பர் 29 ஆம் தேதி பிரதமருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் நினைவூட்டல் கடிதம் ஒன்றையும் எழுதினார். ஆனால், டிசம்பர் 30 ஆம் தேதி குஜராத், அசாம், கர்நாடகா, உத்தரகண்ட், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய ஆறு மாநிலங்களில் ஏற்பட்ட பேரிடருக்கு ரூ.3,063.21 கோடியை வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை.

    இந்நிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை. குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1,000 கோடி அறிவிக்கிறார் பிரதமர். தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எட்டிப் பார்க்காதது ஏன்? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

  9. ஆன்லைன் ரம்மி: மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை

    ஆன்லைன் ரம்மி காரணமாக, மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயதான மணிகண்டன் என்பவர், தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தாரா என்ற மனைவியும், 10 வயது மற்றும் ஒரு வயதில் இரு மகன்களும் இருந்தனர். இந்நிலையில், இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மணிகண்டனுக்கு 20 லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    கடன் நெருக்கடி அதிகமானதால் கடந்த 2 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் மணிகண்டன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை காலையும் சண்டை வலுக்கவே, மனைவி தாராவையும் குழந்தைகளையும் மணிகண்டன் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டதாக துரைப்பாக்கம் போலீஸார் தெரிவிக்கின்றனர். கடன் தொல்லை காரணமாகவே மணிகண்டன் இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

  10. திட்டங்களைத் தொடங்கி வைக்க வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் வேண்டாம் என சொல்லாது: கனிமொழி

    திட்டங்களைத் தொடங்கி வைக்க வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் வேண்டாம் என சொல்லாது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

    வரும் 12-ம் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோதி மதுரை வரவுள்ளார்.

    இந்நிலையில், மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அரசின் பிரதிநிதியாக மாநில அரசின் திட்டங்களை தொடங்குவதற்காக பிரதமர் மோதி தமிழகம் வருகிறார்.

    திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் வேண்டாம் என சொல்லாது. இங்கு நமக்குத் திட்டங்கள் தேவையாக இருக்கிறது. கருத்தியல் ரீதியாக எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும், மக்களுக்கு எது நல்லது என்பதையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

    திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் வருகையை எதிர்த்ததாகவும், தற்போது ஆளும்கட்சியானவுடன் பிரதமர் வருகையை வரவேற்பதாகவும், எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் கனிமொழி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  11. மேற்குவங்கத்தில் பள்ளிகள், கல்லூரிகளை நாளை முதல் மூட உத்தரவு

    மேற்குவங்க மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகளை நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒமிக்ரான் பரவல் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான உத்தரவை மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் ஹெச்கே திவேதி இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.

    அதில், அழகு நிலையங்கள், சலூன்கள், விலங்கியல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களையும் நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படவும், அனைத்து விதமான நிர்வாகக் கூட்டங்களும் காணொலி வாயிலாக நடைபெறும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  12. தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "தென் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டிய இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தேனி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    02.01.22 முதல் 03.01.2022 வரை: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  13. தென்னாப்பிரிக்காவின் நாடாளுமன்ற கட்டடத்தில் தீ விபத்து

    தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து அதிகளவிலான கரும்புகை வெளியாவது தெரிகிறது.

    நிறவெறிக்கு எதிராக போராடி, சமீபத்தில் மறைந்த பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவுக்கு, நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கட்டிடத்தின் மேல்பகுதி தீப்பிடித்ததாகவும், தேசிய சட்டப்பேரவை கட்டடத்திலும் தீ பற்றியதாகவும் முதல்கட்டமாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் பெட்ரீஷியா டீ லில்லே கூறுகையில், நாடாளுமன்றத்தின் மேல்சபையில் தீ அணைக்கப்பட்டதாகவும், தேசிய சட்டப்பேரவை கட்டடத்தில் தீ இன்னும் எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    விடுமுறை காரணமாக, நாடாளுமன்றம் தற்போது கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  14. தமிழ்நாட்டுக்கு மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப் பெற வேண்டும்: ராமதாஸ்

    தமிழ்நாட்டுக்கு மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப் பெற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக, ராமதாஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க 16,000 மருத்துவக் கல்வி இடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பது தான் 157 புதிய மருத்துவக் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டதன் நோக்கமாகும்.

    புதிய கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இரு ஆண்டுகளுக்குள் அவை தொடங்கப்பட வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நிபந்தனையாகும். அதன்படி, 2019 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளே நடப்புக் கல்வியாண்டில் திறக்கப்பட வேண்டும். ஆனால், 2014 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் பல 7 ஆண்டுகளாகியும் இன்னும் அமைக்கப்படாதது அவை அறிவிக்கப்பட்ட நோக்கத்தையே சிதைப்பதாகும்.

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை. இவற்றில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இல்லை என்பதால் அவற்றில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரலாம். இது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும்.

    விருதுநகரில் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோதியால் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    ராமதாஸின் முழு அறிக்கையை வாசிக்க:

  15. தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்

    தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகள் தொடங்கின.

    தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் இருந்து தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கர் பாசன பகுதி கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என்று அழைக்கப்படுகிறது.

    கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமாா் 14,707 ஏக்கரில் முதல்போக சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் போக சாகுபடி பணிகளான, பரம்பு அடித்தல், நாற்று நடுதல் போன்றவைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு போதுமான நீர்வரத்து இன்றி இருந்ததால், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் இரண்டாம் போக சாகுபடி நடைபெறவில்லை.

    இந்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை போதுமான அளவு பெய்து, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ள நிலையில், போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இரண்டாம் போக நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர்.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேற்று வரை விநாடிக்கு 600 கனஅடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்ட நிலையில், இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகளுக்காக கூடுதலாக விநாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு தற்போது விநாடிக்கு 1,200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  16. தமிழ்நாட்டில் 15-18 வயதுள்ளவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி

    தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை தொடங்க உள்ளது என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டையில் இஒன்று ஞாயிற்றுக்கிழமை 17 ஆவது தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது என மக்களின் ஒத்துழைப்பு அவசியம்" என்றார்.

    தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 33.46 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில பொது சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக, மாவட்டங்களில் உள்ள துணை சுகாதார இயக்குநர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, 2007 ஆம் ஆண்டு, அதற்கு முன்பிறந்தவர்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்குத் தகுதியானவர்களாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பான பட்டியலை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், தனியார் பள்ளிகள் தயார் செய்து வைக்க வேணடும்.

    கோவின் செயலியில் பத்தாம் வகுப்பு அடையாள அட்டை, ஆதார் கார்டு மூலம் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், தடுப்பூசிப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் சிறப்பு அலுவலராக ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும், கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்குப் பள்ளிகளில் போதிய இடவசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும், மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளை தொடங்கி ஆறு நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  17. இந்தியாவில் நவம்பரில் 17.50 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்

    இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் 17.50 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது என, ஐஏஎன்எஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக, வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் மாதத்தில் 602 புகார்கள் வந்ததாகவும், அதில் 36 புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-ன்படி, 6-வது மாதமாக நவம்பர் மாத அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். பயனாளிகளின் பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் அடங்கிய இந்த அறிக்கையில், பெறப்பட்ட புகார்கள், தீர்வுகள், தடை செய்யப்பட்ட கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் 17.50 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ள்ன.

    செயற்கை நுண்ணறிவில் அதிகமான முதலீடு செய்து தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகிறோம். புள்ளிவிவர ஆய்வாளர்கள், வல்லுநர்களை பணியமர்த்தியிருக்கிறோம். இவை அனைத்தும் பயனாளிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாகும்.

    எங்களுடைய சேவையில் இன்னும் அதிகமாக வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவோம்" என, வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் 20 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன. இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் அப் பயனர்கள் உள்ளனர்.

  18. "அரசு அதிகாரிகள், காவல்துறையினரை மிரட்டும் திமுகவினர்": ஓபிஎஸ் கண்டனம்

    பொது அமைதிக்கான அச்சுறுத்தலும், காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படாத நிலையும் திமுக ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டுள்ளது என்பதை காவல்துறை சார் ஆய்வாளரின் ஒலிநாடா செய்தி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கடந்த எட்டு மாத காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது தீயசக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வது தெள்ளத் தெளிவாகிறது.

    ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படாதவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நாட்டை இழப்பார் என்ற திருக்குறளை மனதில் நிலை நிறுத்தி, திமுகவினர் அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், மக்கள் தங்கள் பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளவும், சார் ஆய்வாளர் சீனிவாசனை மிரட்டிய திமுகவினரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத் தரவும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்கவும் உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட முழு அறிக்கையை வாசிக்க:

  19. பட்டாசு ஆலை வெடி விபத்து: தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படை

    சிவகாசி அருகே களத்தூரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியது, தடை செய்யப்பட்ட ரசாயன மூலப்பொருட்களை பயன்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

    ஆலையில் விதிமுறைகளை மீறி பட்டாசு உற்பத்தி செய்து விபத்தை ஏற்படுத்தியதாக ஆலையின் உரிமத்தை ரத்து செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் வழிவிடு முருகனை 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதனிடையே, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  20. உணவளிக்கும் உள்ளம்: 16 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தோசை விற்கும் சாவித்திரி பாட்டி

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தாடிபத்ரியில் சாவித்திரி சிறிய தோசைகளை 1 ரூபாய்க்கு விற்கிறார்.

    கடந்த 30 ஆண்டுகளாக இப்படித்தான் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

    ஆரம்பத்தில், குருணை அரிசியில் தோசைகள் சமைத்து விற்றார். இப்போது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் அரிசியைக் கொண்டு தோசைகள் தயாரிக்கிறார்.

    இங்கே தோசையுடன் இரண்டு வகையான சட்னிகளும் பரிமாறப்படுகின்றன.

    தோசையின் விலை 16 வருடங்களுக்கு முன் ஒரு தோசை விலை ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அப்படித்தான்.

    சாவித்திரி குறித்த காணொலி தொகுப்பை காணுங்கள்: