You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோயிலில் கூட்ட நெரிசல் - 12 பேர் பலி

காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் உள்ளது வைஷ்ணோ தேவி கோயில். இந்த சம்பவம் இன்று காலை சுமார் 2.45 மணிக்கு நடந்துள்ளது. காயமடைந்தோர் நரைனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. நாகையில் வடமாநிலத்தவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ரூ.6.35 லட்சம் கொள்ளை

    நாகை அடுத்த தெத்தி கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மத்திய பிரதேச மாநிலம் மன்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கி பிளாஸ்டிக் நாற்காலிகள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிளாஸ்டிக் நாற்காலி விற்பனை செய்துவரும் ஈஸ்வர் பஞ்சாரா, 40 பணியாளர்களை வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல தொழில் முடித்து வந்த வடமாநிலத்தவர்கள் 40 பேர் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.

    அப்போது, நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 15 பேர் கொண்ட மர்ம கும்பல், வட மாநிலத்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்து பணத்தை தர மறுத்த அவர்களை சராமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளை அடித்து நொறுக்கியதோடு, கத்தி முனையில் அங்கிருந்த 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து, இரண்டு லோடு வாகனங்களை நொறுக்கி, 6 செல்போன்களை திருடி தப்பிச் சென்றனர்.

    நீண்ட நாள் நோட்டமிட்டு உள்ளூரை சேர்ந்த கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என நாகூர் காவல் நிலைய காவல்துறையினர் கூறுகின்றனர்.

  3. காளையின் சிலையை வணங்கி புத்தாண்டை வரவேற்ற கிராம மக்கள்

    புத்தாண்டை முன்னிட்டு தங்கள் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காளையின் சிலையை வணங்கி 2022 ஆம் ஆண்டை கீழக்குயில்குடி கிராம மக்கள் வரவேற்றனர்.

    மதுரை மாவட்டம் நாகமலை அருகே அமைந்துள்ளது கீழக்குயில்குடி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது சுக்குரு தேவன் காளையின் சிலை. இவ்வூரைச் சேர்ந்த சின்னப்புலி வகையறாவில் வந்த சுக்குரு தேவன் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்தார்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடிய இந்த காளையின் நினைவாக சுக்குரு தேவன் பரம்பரையைச் சேர்ந்த குடும்பத்தார் சிலை அமைத்து வணங்கி வருகின்றனர். புத்தாண்டின் முதல் நாளான இன்று 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் வண்ணம் காளையின் சிலைக்கு அலங்காரம் செய்து பூ, பழம் உள்ளிட்ட பொருட்களோடு ஊர் மக்கள் அனைவரும் வணங்கி மகிழ்ந்தனர்.

    ஊர் மக்கள் கூறுகையில், "அந்தக் காலத்தில் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் சுக்குரு தேவன் காளை பங்கேற்று வெற்றிகளை ஈட்டியது. இதன் காரணமாக எங்கள் ஊரும் பெயர் பெற்று விளங்கியது. இறந்த அந்த காளையின் நினைவாக நாங்கள் சிலை வைத்து வணங்கி வருகிறோம்.

    எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களின் கபடி குழுவும் போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னால் இந்த காளையை வணங்கிவிட்டு தான் செல்வர். வெற்றிபெற்ற கோப்பைகளையும் இங்கு வைத்து அந்த இளைஞர்கள் வழிபடுவர்.

    அதுமட்டுமன்றி ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலன்று சுக்குரு தேவன் காளையின் சிலைக்கு விழா எடுத்து மகிழ்கிறோம். இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக விழா கொண்டாடுவோம்" என்றனர்.

  4. 2022இல் வடகொரியாவின் திட்டம் என்ன? - கிம் ஜோங்-உன் உரை

    "வாழ்வா, சாவா" என பெரும் போராட்டத்துக்கிடையில், சரிவை சந்தித்து வரும் வடகொரியாவின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கே இந்தாண்டில் தேசியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என, வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார்.

    ஆளும் கட்சி கூட்டத்தின்நிறைவு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அவர் உரையாற்றினார், அதேசமயம், ஆட்சியில் அமர்ந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கொரோனாவால் ஏற்பட்ட தடைகளால், வட கொரியா உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    அவருடைய உரையில் அமெரிக்கா குறித்தோ தென் கொரியா குறித்தோ நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

  5. பிரதான் மந்திரி கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு 10வது தவணை உதவித்தொகை விடுவிப்பு

    பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10-வது தவணை தொகை இன்று விடுவிக்கப்பட்டது.

    10.09 கோடி விவசாயிகளுக்கு 20,900 கோடி ரூபாய் உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோதி இன்று சனிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுவித்தார்.

    விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் இதுவரை சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக தலா 2,000 ரூபாய் என, ரூ.6,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

  6. விமான கழிவறையில் தனிமைப்படுத்திக் கொண்ட ஆசிரியை

    ஓர் அமெரிக்க பள்ளி ஆசிரியை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது நடுவானில் தெரிய வர, சுயமாக முன் வந்து தன்னைத் தானே ஐந்து மணி நேரம் கழிவறையில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    மரிசா ஃபொடெயோ கடந்த டிசம்பர் 20ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரத்திலிருந்து, ஐஸ்லாந்தின் ரெய்க்ஜவீக் நகரத்துக்கு விமானத்தில் பயணித்த போது அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டதை உணர்ந்தார்.

    விமானத்துக்குள் தன்னோடு கையில் கொண்டு வந்திருந்த கொரோனா விரைவு சோதனை கிட்டைப் பயன்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

  7. சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்துக: அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட கோரி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக, அவர் இன்று சனிக்கிழமை எழுதிய கடிதத்தின் சுருக்கம்:

    "பெருமழை குறித்த அறிவிப்புகள் உரியநேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாதநிலை உள்ளதை காண்கிறோம். உதாரணமாக 30-12-2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆய்வறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய மிதமான மழை காலையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் என தெரிவித்து, அதே சமயம் இடியுடன் கூடிய இலேசான மற்றும் மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

    பின்னர் மாலை 3.40 மணிக்கு இந்த மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் என குறிப்பிட்டிருந்தது.

    ஆனால், மிகக் கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வியாழக்கிழமை மதியம் முதல் இரவு வரை பெய்தது. மாலை 4.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்ச் அலர்ட்” வெளியிட்டது. அதற்குள் மிக அதிக கன மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பலபகுதிகள் மூழ்கி அதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் சென்னையில் ஏற்பட்டது.

    இது, சென்னை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்யவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பெருமழை புயல் போன்ற “ரெட் அலர்ட்” சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்".

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  8. திருடப்பட்ட மரகத லிங்கம் கண்டுபிடிப்பு

    கடந்த 2016-ஆம் ஆண்டு திருக்குவளையில் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்த மரகதலிங்கம் திருடப்பட்டது. இதுகுறித்து சிலை தடுப்பு காவல் துறையினர் தீவிர புலன் விசாரணை செய்த போது, தஞ்சையைச் சேர்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் மரகத லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரனையில் இது திருக்குவளையில் திருடப்பட்ட மரகத லிங்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது.

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சிலை தடுப்பு டிஐஜி இந்த லிங்கம் திருக்குவளை ஆலயத்திற்கு சொந்தமானது என்பதை தங்களிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டதாகவும், இந்த லிங்கத்தை தங்களிடம் ஒப்படைத்து நித்திய பூஜைக்கு வழிவகை செய்யவேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் விடுத்துள்ள காணொளி பதிவில் தெரிவித்துள்ளார்.

  9. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

    ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாடை அணிந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற மிக முக்கிய ஆன்மிக தளங்களில் ஒன்று என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்ளில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு முதலே ராமேஸ்வரம் வர தொடங்கினர்.

    ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று அதிகாலை முதலே புனித நீராடி முன்னோர்களுக்காக பிரார்த்தனை செய்தனர். பின்னர் ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செயதனர். சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் அனைவரையும் திருக்கோவில் நுழைவுவாயிலில் நிறுத்தி முழுமையான உடல் பரிசோதனை செய்து முகக்கவசம் கட்டாயமாக அணிந்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கோவிலுக்குள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  10. மோதியை வரவேற்கும் திமுகவின் நிலையை மக்கள் அறிவர் - செல்லூர் ராஜூ

    திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மோதியை எதிர்த்துவிட்டு தற்போது வரவேற்பு அளிப்பதில் மக்களுக்கே தெரியும் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று? என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ பேசுகையில், அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், ஒமிக்ரான் கொரோனோ தொற்று நீங்க வேண்டியும் , கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சியம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தோம் என்றார்.

    மேலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அதிமுக அரசு செய்தது போல திமுக அரசும் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் முதலமைச்சராக சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார், அவரோடு சேர்ந்து அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார். தமிழக மக்களுக்கு திமுக எதிர்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் என்கிற வாக்குறுதியை திமுக அரசு செயல்படுத்தும் என நம்புவதாக கூறினார் செல்லூர் ராஜூ. ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் மற்றொரு ஊரடங்கு வருமோ? என்கிற அச்சத்தில் மக்கள் இருப்பதாகக் கூறினார் மதுரை மாநகராட்சி கிராமம் போல உள்ளது, வீதியெங்கும் சாக்கடை பெருக்கடுத்து ஓடும் நிலை உள்ளது. அதிமுக சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 4ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகக் கூறினார். மதுரை மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும்.

    அந்த நிதியை முதல்வர் நிச்சயம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் ஆளும் கட்சி, எதிர்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும் அதிமுக மக்களின் நலனுக்காக போராடும் எனவும் கூறினார். வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரும் பேசாத வகையில் தமிழ் கலாச்சாரத்தையும், பெருமையையும் பேசிவருபவர் மோதி என்றும், உலகெங்கும் தமிழர்களின் கலாச்சார பெருமையை பறைசாற்றிவருகிறார் என்றும் கூறினார். பிரதமர் மோதி மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்றார்.

  11. சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து 4 பேர் உயிரிழப்பு. 8 பேர் படுகாயம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே களத்தூரில் ஆர்.வி.கே.எம் என்ற பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்த நான்கு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    மேலும் எட்டு பேர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.வி.கே.எம் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியை மேற்கொண்டபோது எதிர்பாராதவிதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதில் ஏழுக்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறி தரைமட்டமாயின. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கும் மற்றும் தீயை அணைப்பதற்கும் சிவகாசியில் இருந்து இரு தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குமார், பெரியசாமி, செல்வம், உட்பட நான்கு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

    கோபாலகிருஷ்ணன், முனியாண்டி, காலியப்பன், அழகர்சாமி, முருகேசன் உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  12. இந்தியாவில் ஒமிக்ரான் நிலவரம் என்ன?

    கொரோனாவின் ஒமிக்ரான் திரிபால் இப்போது 23 இந்திய மாநிலங்களில் கோவிட் தொற்று பரவியுள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை 1431 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 454 பேருக்கும், டெல்லியில் 351 பேருக்கும் ஒமிக்ரான் தொற்றியுள்ளது என்று இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அடுத்ததாக தமிழ்நாடு, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களில் முறையே 118, 115, 109 பேருக்கு ஒமிக்ரான் உள்ளது.

  13. வைஷ்ணோ தேவி கோயிலில் மக்கள் நெருக்கடியால் 12 பேர் பலி

    இன்று (ஜனவரி 1ஆம் தேதி, சனிக்கிழமை) காலை, இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் மக்கள் நெருக்கடி காரணமாக 12 பேர் வரை இறந்திருப்பதாகவும், 13 பேருக்கு காயம் ஏற்படிருப்பதாகவும் அப்பிரதேசத்தின் டிஜிபி தில்பாக் சிங் ஏ.என்.ஐ முகமையிடம் கூறினார்.

    இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, இந்த சோக சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தோருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரன நிதியிலிருந்து வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை சுமார் 2.45 மணிக்கு நடந்ததாக ஏ என் ஐ முகமையில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தோர் நரைனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் என பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அப்பகுதியின் மருத்துவ அலுவலர் கோபல் தத் கூறினார்.

  14. 2022-இல் கொரோனாவை வெல்வோம் - உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரேயேசூஸ், 2022இல் கொரோனா வைரஸ் தொற்றுநோயை வெல்வோம் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தமது புத்தாண்டு செய்தியில் "குறுகிய தேசியவாதம் மற்றும் தடுப்பூசி பதுக்கல் செயல்பாடுகளை" அவர் எச்சரித்தார். கொரோனா தொற்று என உலகம் அறிந்திராத காலத்தில் சீனாவில் அறியப்படாத நிமோனியா பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்புக்கு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வைரஸ் தொற்றை 2022இல் வெல்வோம் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார் கேப்ரேயேசூஸ்.

    உலக அளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 287 மில்லியனாக உள்ளது. அதே நேரத்தில் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் மக்கள் அந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

    உலகெங்கிலும் உள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்கும் வேளையில் அதை அவர்கள் கொண்டாட முடியாத வகையில் பல்வேறு நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த இரண்டு ஆண்டு காலத்தில் கொரோனா வைரஸ், பல நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது. சில நாடுகள் அவற்றின் எல்லைகளை மூடியுள்ளன. பல நாடுகளில் குடும்பங்கள் வைரஸ் பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பிரிந்து இருக்கின்றன.

    சில இடங்களில் முக கவசத்தை அணியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உருமாறி வரும் கொரோனா திரிபில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க சிறப்பு டோஸ் போட்டுக் கொள்ளும் வாய்ப்புகளும் ஆராயப்பட்டு வருகின்றன. சில மேற்கு நாடுகள் இந்த சிறப்பு டோஸ் திட்டத்தை அமல்படுத்தியும் வருகின்றன.

  15. புத்தாண்டு 2022: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

    புத்தாண்டு 2022-ஐ முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  16. தமிழக வழிபாட்டுத்தலங்களில் மக்கள் சிறப்புப் பிரார்த்தனை

    இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் புத்தாண்டை வழக்கமான உற்சாகத்துடன் மக்கள் வரவேற்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விடுதிகளில் வழக்கமாக நடத்தப்படும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    பல்வேறு மாநில அரசுகள் டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் ஜனவரி 1 காலை 6 மணிவரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

    சென்னையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதேசமயம், முக்கிய கோயில்கள், தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனைகள், பூஜைகள் நடைபெற்றன.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புத்தாண்டு பிறந்தபோது பலரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

    மும்பையின் பந்த்ரா வொர்லி கடல் இணைப்பு பகுதியில் மின்னொலி மூலம் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கர்நாடகா மாநிலத்தின் பல நகரங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊடரங்கு ஜனவரி 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக இருக்கவில்லை.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் பகுதியில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.

  17. புதுச்சேரியில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

    புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அரசு சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    பழைய துறைமுகம், கடற்கரை, பேரடைஸ் பீச் உள்ளிட்ட இடங்களில் நான்கு இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அந்தந்த மாநில அரசுகள் தடை அல்லது கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.ஆனால், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தது.முதல்முறையாக கடற்கரை சாலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்னொலி நடனம் நடைபெற்றது.

    இதனை வெளிமாநில சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர். கடற்கரை சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாண்டை கொண்டாட குவிந்தனர்.

  18. ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது

    ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வாண வேடிக்கையுடன் 2022 புத்தாண்டு வரவேற்கப்பட்டது. ஆனால், பொது இடங்களில் மக்கள் பெருமளவில் இல்லாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.

    உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களில் அமைதியான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன.

    கொரோனா, ஒமிக்ரான் திரிபு பரவலை கவனத்தில் கொண்டு பல நாடுகள் மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளன.

    சிட்னியில் நிகழ்த்தப்பட்ட உலகப் புகழ்பெற்ற வாணவேடிக்கை விண்ணில் கண்கவர் வண்ணங்களில் ஜொலித்தன.

  19. பிபிசி தமிழ் நேயர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.