"புதுச்சேரி அருகே இன்னும் 1 மணி நேரத்தில் கரையை கடக்கும்"
நிவர் புயல் புதன்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கலாம் என்று கணித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரியில் இருந்து 60 கி.மீ, கடலூரில் இருந்து 55 கி.மீ, சென்னையில் இருந்து 120 கி.மீ தூரத்தில் புயல் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மணிக்கு 16 கி.மீ வேகத்தில் புயல் கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். புயல் கரையை கடக்கும் நிகழ்வு, நள்ளிரவைக் கடந்த அதிகாலை 3 மணிக்கு முன்பாக முடிந்து விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 முதல் 145 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள காத்திருப்பதாக புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.