You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் இடமாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் உளவுப்பிரிவு ஐஜி ஆக பணியாற்றி வரும் ஆசியம்மாள் சென்னை காவல்துறை அமலாக்கப்பிரிவு ஐஜி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு மத்திய அரசு பணியில் இருந்து மாநில பணிக்குத் திரும்பியுள்ள செந்தில்வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
பிரசாந்த் முத்துராமன்
இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு: டளஸ் , அநுர குமார இருவரையும் வீழ்த்தினார்
நன்றி நேயர்களே
இன்றைய நேரலை பக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய செய்தித் துளிகள் இதோ...
- இலங்கை புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வான நிலையில் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டுள்ளனர்.
- இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு நிகழ்வு ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழ்நாடு உளவுப்பிரிவு தலைவராக உள்ள ஆசியம்மாள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு மத்திய அரசு பணியில் இருந்து மாநில பணிக்கு திரும்பியுள்ள செந்தில்வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எடுத்துக் கொண்ட சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு ஆகியோரை இந்திய தடகள சங்கம் இடைநீக்கம் செய்துள்ளது.
- கள்ளக்குறிச்சியில் பள்ளி விடுதியில் மாணவி இறந்த விவகாரத்தில் அவரது மறு உடற்கூராய்வு நிறைவடைந்துள்ளது. அவரது சடலத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவரது பெற்றோரை மாநில காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
- இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி; 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
- அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். புதிய கட்டண உயர்வு தொடர்பான தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
- இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் அவை இன்று தொடங்கியது.
CWG 2022: ஊக்கமருந்து சோதனையில் தோல்வி - தனலட்சுமி, ஐஸ்வர்யா பாபு இடைநீக்கம்
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ். தனலட்சுமி எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, தேசிய அளவில் சாதனை படைத்த கர்நாடகாவைச் சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை செலுத்திக் கொண்டது பரிசோதனை முடிவில் கண்டறியப்பட்டுள்ளதால் அவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி பூமி பூஜை: புரோகிதரை விரட்டிய நடவடிக்கை குறித்து என்ன சொல்கிறார் எம்.பி செந்தில்குமார்?
தமிழ்நாடு காவல்துறை உளவுத்துறை ஐஜி ஆக செந்தில்வேலன் நியமனம்
தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு தலைவராக பணியாற்றி வரும் ஆசியம்மாள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு மத்திய அரசுப் பணியில் இருந்து மாநில அரசுப் பணிக்குத் திரும்பியுள்ள செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வரும் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவில் கூடுதல் தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளார். இவருக்கு கீழ் இரண்டு ஐ.ஜிக்கள் உள்ளனர். ஒருவர் ஐ.ஜி அரசியல் விவகாரங்கள் உள்ளிட்ட பொதுவான உளவு விவகாரத்தையும் மற்றொருவர் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஐ.ஜி ஆகவும் இருக்கிறார்.
இதில் ஆசியம்மாள் அரசியல் விவகாரங்களை கவனித்து வந்தார். மற்றொரு ஐ.ஜி ஈஸ்வரமூர்த்தி அதே பணியைத் தொடர்கிறார்.
பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசியம்மாள், சென்னையில் உள்ள காவல்துறை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி - தடகள வீராங்கனைகள் தனலட்சுமி, ஐஸ்வர்யா இடைநீக்கம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத வகையில், தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ். தனலட்சுமி மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ட்ரிபிள் ஜம்ப் வீராங்கனை ஐஸ்வர்யா பாபு ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளதால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதாக இருவருக்கும் நடத்தப்பட்ட தலா இரண்டு சோதனையில் முடிவு பாசிட்டிவ் ஆக வந்ததால் அவர்கள் இந்திய விளையாட்டு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ள பர்மிங்காம் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வான 37 பேர் கொண்ட இந்திய அணியில் இந்த இரண்டு வீராங்கனைகளும் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், தனலட்சுமி, ஐஸ்வர்யா ஆகியோர் தலா இரண்டு சுற்று சோதனைகளில் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டறியப்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி கலவரத்தில் தூக்கிச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்க கோரி கனியாமூரில் தண்டோரா
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நீதி கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது.
இதில் பள்ளி கட்டிடங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள், பள்ளியில் இருந்த கம்ப்யூட்டர், நாற்காலிகள், மாணவர் இருக்கை மற்றும் மேஜைகள், மின் விசிறிகள், குளிர் சாதனப் பெட்டி உட்பட பொருள்களை பள்ளியில் இருந்து எடுத்துச் சென்றதாக காட்டும் காணொளிகள் வெளியாயின.
பள்ளியை சுற்றியுள்ள கிராம மக்கள் எடுத்துச் சென்றனர். இதன் வீடியோ காட்சிகளும் கலவரத்திற்கு பிறகு வெளியானது.
இந்த நிலையில், இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள சூழலில், பள்ளியிலிருந்து எடுத்துச் சென்ற பள்ளி உடமைகளை தூக்கிச் சென்றவர்கள், திருப்பித் தரவேண்டும் என்றும், தவறினால், போலீஸார் விசாரணைக்கு உள்ளாக நேரிடும். ஆகவே எடுத்து சென்ற பொருட்களை மீண்டும் பள்ளி வளாகத்திலேயே கொண்டு வந்து வைத்துவிடும் படி, சின்னசேலம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில், கிராம உதவியாளர் கனியாமூர் கிராமத்தில் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இலங்கையில் ரணிலுக்கு எதிராக வெடித்த போராட்டம் - களத்தில் இருந்து செய்தி வழங்கும் பிபிசி தமிழ்
தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் இடமாற்றம்
அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு: கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியிருந்தனர். இதனைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனைத் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த நிலையில் கோவை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவினர் இந்தத் தீர்ப்பை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயராமன், அம்மன் அர்ஜுனன் உள்ளிட்ட பல மூத்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பத்திரிகையாளர் ஜுபைருக்கு 6 வழக்குகளிலும் பிணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
செய்திகளை உண்மைப் பரிசோதனை செய்யும் ஆல்ட் நியூஸ் தளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 6 வழக்குகளில் இருந்தும் அவருக்கு இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
கைது செய்வதற்கான அதிகாரம் அளவோடு பயன்படுத்தப்படவேண்டும் என்று தனது உத்தரவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"ஜுபைரை மேலும் சிறையில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவருக்கு எதிரான எல்லா முதல் தகவல் அறிக்கைகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு, அவற்றை ஒரே ஒரு அதிகாரத்தின் கீழ் விசாரிக்கவேண்டும். 20 ஆயிரம் ரூபாய்க்கான பிணை ஆவணத்தின் கீழ் தன் மீதான வழக்குகளில் இருந்து இடைக்காலப் பிணையில் விடுவிக்கப்படவேண்டும். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 6 முதல் தகவல் அறிக்கைகளும் டெல்லி போலீசுக்கு மாற்றப்படவேண்டும். இந்த வழக்குகள் தொடர்பில் உத்தரப்பிரதேச அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு கலைக்கப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு டெல்லி திஹார் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்படவேண்டும்" என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கவேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
உதயநிதிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரஜினி ரசிகர்கள்: காரணம் என்ன?
அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்கவேண்டும் - உயர் நீதிமன்றம்
அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஜூலை 11ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதே கூட்டத்தில் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். முன்னதாக, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஆதரவாளர்களோடு ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.
பூட்டியிருந்த அலுவலகத்தை அவரது ஆதரவாளர்கள் உடைத்துத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கே இருந்த இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அந்த இடம் போர்க்களம் போலக் காட்சி அளித்த நிலையில், அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு கதவைப்பூட்டி சீல் வைத்தார்கள் அரசு அலுவலர்கள். இதையடுத்து அலுவலகத்துக்கு உரிமை கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரண்டு தரப்பும் நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கைது நடவடிக்கை தொடரும் - புதிய எஸ்.பி. பகலவன்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பகலவன் இன்று, வன்முறை நிகத்தப்பட்ட பள்ளியை ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த வழக்கின் முழு விவரம் அடுத்தகட்ட விசாரணையில் தெரியும். தொடர்ந்து பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் முழு விவரத்தையும் பாதுகாப்பு கருதி தற்போது கூற இயலாது. ஆனால் நாங்கள் முன்னுரிமை கொடுப்பது, சகஜ நிலையை நீடிக்கச் செய்வதில் மட்டுமே.
இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-யின் சிறப்புப் புலனாய்வு குழு, நடத்தி வருகிறது. இதனால் இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை அடுத்தடுத்து தெரியவரும். இந்த கலவரம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் "கைது நடவடிக்கை தொடரும். அதற்கான கட்டாயம் இருக்கிறது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு வழிகளில் வழக்கு தொடர்ந்து வருகிறோம். அவை அனைத்தும் ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப அமையும். பள்ளி மாணவி எந்த சூழலில் இறந்ததற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். இதில் மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் உங்களுக்கு தெரியவரும்," என்றார் அவர்.
பெற்றோர் மாணவியின் உடலை வாங்க மறுப்பது ஏன் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "பெற்றோருக்கு மகள் மரணம் தொடர்பாக மனக்குறை இருக்கும். அந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் அவர்கள் குறையைத் தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாங்கள் தொடர்ந்து அவர்களிடம் பேசி வருகிறோம். மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்து நல்லடக்கம் செய்யும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்," என்று காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
தற்போது இங்கிருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை முழுவதுமாக சரி செய்யும் முயற்சியைச் செய்து வருகிறோம். மேலும் இந்த வழக்கு தொடர்பாக எங்கள் தரப்பில் சின்ன தரவுகளை கூட வெளியிட மாட்டோம். இதில் தடயவியல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகே இந்த வழக்கு தொடர்பான விஷயங்களை விளக்க முடியுமென அவர் தெரிவித்தார்.
மேலும், "கைது செய்யப்பட்ட தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மீது குற்றவியல் தண்டனை சட்டம் 306 பிரிவின் கீழ் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணையில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சிறப்புக் குழு ஆய்வு செய்து வருகிறது," என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?
கள்ளக்குறிச்சி கலவரத்தில், போலீஸ் வாகனத்தில் ஒருவர் தீ பற்ற வைக்கும் காணொளி பரவி வருகிறது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தின் போது கலவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், போலீசார் வாகனத்தின் மீது, ஒரு திரவத்தை ஊற்றுகிறார். வாகனம் பற்றி எரிகிறது. தொடர்ந்து, ஒன்று காலியானதும் இன்னொரு பாட்டில்/பாக்கெட் எடுத்து ஊற்றுகிறார்.
இந்தக் காணொளி காட்சி வைரலாக பரவி வருகிறது. ஆனால், இவர், பேருந்து மீது ஊற்றும் எரிபொருள் திரவம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதிமுக: தங்கமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உடன், நில அளவையிடும் பணியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தனியொரு எம்.பி, ஆனாலும் இலங்கை ஜனாதிபதி ஆன ரணில் விக்கிரமசிங்க - யார் இவர்?
முன்னாள் அமைச்சர் இல்லத்தில் சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நில அளவையிடும் பணியிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.