புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு
இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, கடந்த 15ம் தேதி, பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளுக்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.
இதில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் என முக்கிய கட்சிகள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவை வழங்கியிருந்தனர்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.