You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது - என்ன நடந்தது?
Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருமாறு அவரை டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்திருந்தனர்.
ஆனால் வேறொரு வழக்கில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர் என்று ஆல்ட் நியூஸின் மற்றொரு இணை நிறுவனர் பிரதீக் சின்ஹா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "2020இல் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வரும்படி டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்தனர். அந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் இருந்து உத்தரவைப் பெற்றிருந்தார் முகமது ஜுபைர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான அவரை மாலை 6.45 மணியளவில் வேறொரு வழக்கில் அதன் முதல் தகவல் அறிக்கை நகலைக் கூட வழங்காமல் போலீஸார் கொண்டு சென்றனர். பல முறை கேட்டும் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைக் காண்பிக்கவில்லை. அவரைக் கொண்டு சென்ற வேனில் இருந்தவர்கள் தங்களுடைய பெயர் பேட்ஜை சீருடையில் அணிந்திருக்கவில்லை," என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜுபைர் அகமது மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அந்த வழக்கில் புகார்தாரர் யார், அதன் விவரம் என்ன என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.
இன்று என்ன நடந்தது?
2020ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார் முகமது ஜுபைர். அந்த வழக்கில், சமூக ஊடகத்தில் தன்னை தவறாக பேசிய ஒருவரை ஜுபைர் எதிர்கொண்ட ட்வீட் தொடர்பாக 2020இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உண்மைச் சரிபார்ப்பு குறித்த தனது ட்வீட்டிற்குப் பதிலளித்த ஒரு பயனர் ஜுபைரை தகாத வார்த்தைகளால் விமர்சித்து இடுகையை பதிவிட்டிருந்தார்.
அந்த பயனரின் ப்ரொஃபைல் படத்தை பகிர்ந்த முகமது ஜுபைர், "உங்களுடைய அழகான பேத்திக்கு சமூக ஊடகங்களில் மக்களைத் தவறாகப் பேசும் உங்களுடைய பகுதி நேர வேலை பற்றி தெரியுமா? உங்கள் ப்ரொஃபைல் படத்தை மாற்றுமாறு யோசனை கூறுகிறேன்," என்று கூறியிருந்தார். அந்த படத்தை பகிரும்போது, அதில் இருந்த சிறுமியின் படத்தை ஜுபைர் மங்கலாக தெரியும்படி செய்திருந்தார்.
இந்த நிலையில், ஜுபைரின் செயல்பாடு தொடர்பாக அந்த ட்விட்டர் பயனர் அளித்த புகாரின்பேரில் அவரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் விளக்கம் கேட்டிருந்தது. பிறகு டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அவர் மீது போக்சோ மற்றும் தகவல் தொழிநுட்பச் சட்டப்பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்தது. ஆனால், அந்த சிறுமியின் அடையாளத்தை அவர் வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தன் மீது டெல்லி காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றார் முகமது ஜுபைர்.
இந்த வழக்கு விசாரணைக்காகவே ஜுபைர் அழைக்கப்பட்டதாகக் கருதி அவர் டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவு அலுவலகத்துக்குச் திங்கள்கிழமை பிற்பகலில் சென்றார். இந்க நிலையில், அவரை காவல்துறையினர் வேறொரு வழக்கில் கைது செய்ததாக கூறி அழைத்து சென்றதாக ஆல்ட் நியூஸின் மற்றொரு நிறுவனர் பிரதீக் சின்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "2020இல் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வரும்படி டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்தனர். அந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் இருந்து உத்தரவைப் பெற்றிருந்தார் முகமது ஜுபைர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான அவரை மாலை 6.45 மணியளவில் வேறொரு வழக்கில் அதன் முதல் தகவல் அறிக்கை நகலைக் கூட வழங்காமல் போலீஸார் கொண்டு சென்றனர். பல முறை கேட்டும் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைக் காண்பிக்கவில்லை. அவரை கொண்டு சென்ற வேனில் இருந்தவர்கள் தங்களுடைய பெயர் பேட்ஜை சீருடையில் அணிந்திருக்கவில்லை," என்று கூறியுள்ளார்.
யார் இந்த முகமது ஜுபைர்?
முகமது ஜுபைர் உண்மை சரிபார்ப்பு இணையதளமான Alt News இன் இணை நிறுவனர்களில் ஒருவர். கடந்த சில வருடங்களாக போலிச் செய்திகள் தொடர்பான தகவல்களை ஆதாரங்களுடன் தமது தளத்தில் அவர் பகிர்ந்து வந்தார்.
கடந்த மே மாதம், மூன்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு மக்கள் கவனத்தை ஈர்த்த இந்து மத தலைவர்கள் - யதி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரை 'வெறுக்கத்தக்கவர்கள்' என்று ஜுபைர் குறிப்பிட்டு ஒரு இடுகையை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்து உணர்வுகளை சீர்குலைத்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் ஜுபைர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜுபைர் குறிப்பிட்டிருந்த இந்துத் தலைவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டுதல் மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர்களாக கருதப்பட்டுவர்கள். அதில் ஒருவரான யதி நரசிங்கானந்தா வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகியிருந்தார்.
நூபுர் சர்மா புகார்
கடந்த மே மாதம் முகமது நபிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் பாஜக செய்தித்தொடர்பாளரான நூபுர் சர்மாவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் பரவலாக காணப்பட்டன.
இந்த நிலையில், நூபுரின் வெட்டப்பட்ட காணொளியை ஜுபைர் அகமது தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்ததாகவும் அதன் பிறகு தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் பல முனைகளில் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் நூபுர் கூறியிருந்தார். வகுப்பு ரீதியாக போலியான கதையை கட்டமைத்து பதற்றமான சூழலை உருவாக்க முகமது ஜுபைர் முயல்வதாக நூபுர் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான இடுகையில் டெல்லி காவல்துறையை டேக் செய்து அவர் கருத்துக்களை பகிர்ந்தார்.
இந்த நிலையில், டெல்லி காவல்துறையின் துணை ஆணையாளர் மல்ஹோத்ராவிடம் ஜுபைர் மீதான கைது நடவடிக்கை பற்றி கேட்டதற்கு, வழக்கு ஒன்றில் உரிய ஆதாரங்கள் இருப்பதால் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிறையில் அடைக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஆனால், அது எந்த வழக்கு என்பதை அந்த அதிகாரி தெரிவிக்கவில்லை.
காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். "உண்மையின் ஒரு குரலைக் கைது செய்வது இன்னும் ஆயிரம் பேரை தூண்டச் செய்யும்," என்று அவர் அதில் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஜுபைரின் கைது "உண்மை மீதான தாக்குதல்" என்று குறிப்பிட்டு, அவரை விடுவிக்கக் கோரியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், அரசின் போலியான கூற்றுக்களை AltNews அம்பலப்படுத்தியதால், டெல்லி போலீசார் பழிவாங்கும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்