அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய சமூக ஊடக தளம், ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கிறது.
அமெரிக்க அதிபராக இருந்தபோதும், அந்த பதவியில் இருந்து இறங்க மறுத்தபோதும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததாகக் கூறி டொனால்ட் டிரம்புக்கு கடந்த ஆண்டு ஃபேஸ்புக், யூட்யூப், ட்விட்டர் ஆகிய பிரதான சமூக ஊடக தளங்கள் தடை விதித்தன.
இந்த நிலையில், தமது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த ட்விட்டரை விட மேம்பட்ட சமூக ஊடக பக்கத்தை தாமே தொடங்கப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் டிரம்ப் தொடங்கியிருக்கும் சமூக ஊடக தளம், அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் ஆப்ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் அறிமுகமாகியிருக்கிறது.
இந்த சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்வதில் சில ஆரம்ப கால பயனர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த சமூக ஊடக தளத்தின் தலைமை திட்ட நிர்வாகியும் முன்னாள் எம்.பியுமான டேவின் நியூன்ஸ், இந்த தளம் மார்ச் மாத இறுதிக்குள்ளாக முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு செய்ய விரும்பும் பயனர்கள் பலரிடம், "மிகப்பெரிய அளவில் தளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்கள் வருவதால் உங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளோம்," என்ற செய்தியை அந்த சமூக ஊடக நிறுவனம் அளித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.
ட்ரூத் சோஷியல் தளத்தை டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி குழுமம் (டிஎம்டிஜி) என்ற டிரம்பின் ஊடக நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கி ஓராண்டாகிறது.
இதற்கு முன்பு இந்த தளத்தில் சேர்ந்து இடுகைகளை பதவிட சுமார் 500 பீட்டா சோதனை ஓட்ட பயனர்களுக்கு ட்ரூத் சோஷியல் நிறுவனம் வாய்ப்பு வழங்கியிருந்தது.
கடந்த வாரம் டிரம்பின் மகனான ஜூனியர் டொனால்ட் ட்ரூத் சோஷியல் தளத்தின் பக்கத்தை சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து, "தயாராக இருங்கள். உங்களுடைய விருப்பமான தலைவர் விரைவில் உங்களை இதில் சந்திப்பார்," என்று கூறியிருந்தார்.