ஹிஜாப் சர்ச்சை: நீதிபதியை விமர்சித்த கன்னட நடிகர் கைது
கர்நாடகாவில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கான தடைக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித்தை விமர்சிக்கும் வகையில் தமது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டில் பதிவான பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில், புகார் அளித்த பெண்ணின் நடத்தை குறித்து நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதை தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட சேத்தன் குமார், “பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மன அமைதியை குலைக்கும் வகையிலான கருத்துக்களை நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் கூறியிருந்தார். இவர்தான், அரசுப் பள்ளிகளில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் அனுமதிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வார். அவருக்கு இது குறித்த போதுமான தெளிவு இருக்கிறதா?” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சேத்தன் குமாருக்கு எதிராக,“குறிப்பிட்ட பிரிவினரை குற்றம் செய்ய தூண்டுதல்” மற்றும் “அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதித்தல்” உள்ளிட்ட பிரிவுகளில் பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
சேத்தன் குமார் கைது செய்யப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதில் சிலர் காவல்துறை செயல்பாட்டின் நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர்.
தலித் ஆர்வலராக அறியப்படும் சேத்தன் குமார், கர்நாடகாவில் வலதுசாரி இயக்கங்களுக்கு எதிராக நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
பிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, இவர் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.