You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டதை நாங்கள் காணவில்லை: யுக்ரேன் அதிபர்

எல்லையிலிருந்து சில படைவீரர்களை திரும்பி வாபஸ் பெற்றுள்ளதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், அதுகுறித்து யுக்ரேனிய அதிபர் வாலடிமீர் செலன்ஸ்கி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி குறித்து முழுமையாக அறிய...

    யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி குறித்து முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ள இந்த விவகாரத்தை விளக்கும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளை வாசியுங்கள்.

    • யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யாவுடன் போரைத் தடுப்பதற்கான 5 சாத்தியமான வழிகள் என்னென்ன?
    • யுக்ரேன் எல்லையில் இருந்து பின்வாங்கும் ரஷ்ய படைகள்: 10 முக்கிய தகவல்கள்
    • யுக்ரேன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம்
  2. யுக்ரேன் நெருக்கடி: தற்போது என்ன நடக்கிறது?

    • கிரீமியாவில் ராணுவ ஒத்திகையை முடித்துவிட்டு அந்நாட்டு படைவீரர்கள் கிரீமியாவிலிருந்து வெளியேறுவதாக, இன்று (பிப். 16) காலை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
    • ஆனால், பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறுகையில், தங்கள் நடவடிக்கையிலிருந்து ரஷ்யா பின்வாங்குவதற்கான எந்த ஆதாரத்தையும் தான் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
    • ரஷ்ய படையெடுப்பு அச்சத்திற்கு மத்தியில் ஒற்றுமைக்கான நாளாக இது அமைந்திருக்கிறது.
    • இதனிடையே, யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
    • யுக்ரேன் எல்லையில் ரஷ்யா 1,50,000 படையினரை குவித்திருப்பதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ரஷ்யா ஐரோப்பாவில் போரை விரும்பவில்லை எனவும், பாதுகாப்பு குறித்த கவலைகளை போக்க நேட்டோ தவறிவிட்டதாகவும் கூறினார்.
  3. யுக்ரேன் எல்லையில் கூடுதலாக படைவீரர்கள் வாபஸ்: ரஷ்யா

    கிரீமியாவிலிருந்து இன்னும் கூடுதலாக ரஷ்ய படைவீரர்கள் வெளியேறுவதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது.

    கிரீமியாவில் ராணுவ ஒத்திகையை முடித்துவிட்டு அந்நாட்டு படைவீரர்கள் கிரீமியாவிலிருந்து வெளியேறுவதாக, இன்று (பிப். 16) காலை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

    யுக்ரேன் எல்லையில் நிறுத்தப்பட்ட தங்கள் நாட்டு துருப்புகள் திரும்பி அழைக்கப்பட்டதாக, நேற்று ரஷ்யா கூறியதையடுத்து, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

    ஆனால், பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறுகையில், தங்கள் நடவடிக்கையிலிருந்து ரஷ்யா பின்வாங்குவதற்கான எந்த ஆதாரத்தையும் தான் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

    இதனிடையே, யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது எனவும், அதனால் மனித இழப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

  4. ஜனவரியில் இந்தியாவின் ஏற்றுமதி 25.3% உயர்வு

    இந்தியாவின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 25.3% அதிகரித்து, 34.5 பில்லியன் டாலராக உள்ளது. இதுகுறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு நேற்று (பிப். 15) வெளியிட்டது.

    ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை 17.4பில்லியன் டாலராக உள்ளது.

    ஏப்ரல் 2021 முதல் ஜனவரி 2022 வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி 46.73% அதிகரித்து 335.58 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் இறக்குமதி நடப்பு நிதி ஆண்டில் 62.65% அதிகரித்து 495.75 பில்லியன் டாலராக உள்ளது.

    அதேபோன்று, தங்க இறக்குமதி கடந்த ஜனவரியில் அதிகமாக சரிந்துள்ளது. இந்த மாதம் 2.4 பில்லியன் டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது, கடந்தாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 40.5% குறைவாகும். மேலும், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பாதி அளவாகும். கடந்த டிசம்பர் மாதம் 4.72 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

  5. சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்

    சென்னையில் இன்று முதல் புத்தக கண்காட்சி தொடங்க உள்ளது என்று, தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். சென்னையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று புத்தக கண்காட்சி தொடங்க இருக்கிறது. இந்த 45-வது புத்தக கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

    காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் 790 அரங்குகளும் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்களும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன என தினத்தந்தி செய்தி கூறுகிறது.

  6. பட்டேல் முதல் ராமானுஜர் வரை பெரிய சிலைகள் சீனாவில் செய்யப்படுவது ஏன்? இந்தியாவில் முடியாதா?

      • எழுதியவர், ராமகிருஷ்ண வரிகுடி
      • பதவி, பிபிசி தெலுங்கு

    11-12 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த வைதீக சமய தத்துவ ஆசிரியரும், சீர்திருத்தவாதியுமான ராமானுஜாச்சாரியாரின் 'சமத்துவ சிலை'யை பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் திறந்து வைத்தார்.

    216 அடி உயர சிலை இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இது தயாரிக்கப்பட்டது ஒரு சீன நிறுவனத்தால். இதை தயாரிக்க 7 ஆயிரம் டன் பஞ்சலோகம் (ஐந்து உலோகங்களின் கலவை) பயன்படுத்தப்பட்டது.

    சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத்தின் கேவடியாவில் நிறுவப்பட்ட உலகின் மிக உயரமான 'ஒற்றுமையின் சிலை' என பெயரிடப்பட்ட வல்லபாய் பட்டேல் சிலை தயாரிப்பிலும் சீன நிறுவனங்களின் பங்கே இருந்தது. இந்த சிலை 597 அடி உயரம் கொண்டது.

    இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியான டாக்டர் பிஆர் அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கலச் சிலையை நிறுவும் நோக்கத்துடன் 2017 ஆம் ஆண்டில் தெலங்கானா அரசு, அப்போதைய துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரியின் தலைமையில் ஒரு குழுவை சீனாவுக்கு அனுப்பியது.

  7. இந்தியாவில் புதிதாக 30,615 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் நேற்று தொடங்கி 24 மணிநேரத்தில் புதிதாக 30,615 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்று கண்டறிந்த தொற்று எண்ணிக்கையைவிட 11 சதவீதம் அதிகமாகும். கடந்த 24 மணிநேரத்தில் 82,988 பேர் குணமடைந்துள்ளனர். 514 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 3,70,240

    தினசரி தொற்று பாதிப்பு விகிதம்: 2.45%

    குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை: 4,18,43,446

    இதுவரை 173.86 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,325 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

    தமிழ்நாட்டில் நேற்று (பிப். 15) புதிதாக 1,325 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,39,221ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 31,368 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 85,969

    நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை: 84,004

    தமிழ்நாட்டில் அரசு சார்பாக 69 மற்றும் தனியார் சார்பாக 264 என, மொத்தம் 333 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

    நேற்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 5,894 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 33,69,907ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று தனியார் மருத்துவமனைகளில் 7 பேர், அரசு மருத்துவமனைகளில் 7 பேர் என, 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,946ஆக உயர்ந்துள்ளது.

  8. வணக்கம்!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. இந்த நாளின் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு வழங்கவிருக்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    எங்களுடன் இணைந்திருங்கள்.

  9. உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் நிறைவு

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  10. யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்க இன்னும் வாய்ப்பு உள்ளது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது எனவும், அதனால் மனித இழப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.யுக்ரேன் எல்லையில் ரஷ்யா 1,50,000 படையினரை குவித்திருப்பதாக ஜோ பைடன் கூறுகிறார். கொஞ்சம் படையினரை தற்போது வாபஸ் பெற்றிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

  11. பிரபல இந்தி, வங்க மொழிப் பாடகர் பப்பி லஹரி மரணம்

    பிரபல இந்தி, வங்க மொழிப் பாடகர், பாலிவுட் இசையமைப்பாளர், பாஜகவில் இணைந்த அரசியல்வாதி என்ற பல முகங்களை உடைய பப்பி லஹரி மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலை காலமானார்.

    அவருக்கு வயது 69.

    வங்காள பிராமணக் குடும்பத்தில் பிறந்தவரான பப்பி லஹரி பாலிவுட் திரையுலகில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர்.

    கடந்த ஆண்டு கோவிட் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார் பப்பி லஹரி. ஆனால், கடந்த செப்டம்பரில் அவரது குரல் தேய்ந்து வருவதாக செய்திகள் வெளியாயின. ஆனால், அது பொய்ச் செய்தி என்று அவர் தரப்பில் இருந்து மறுப்பு வந்தது.

    இந்நிலையில், அவரது உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பை ஜுஹு பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு புதன்கிழமை அவர் மரணமடைந்தார். அவருக்கு பப்பா லஹரி என்ற மகனும், ரமா லஹரி மகளும் உண்டு.

    2014ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த பப்பி லஹரி அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் கட்சியை பலப்படுத்த உதவி செய்வார் என்று நம்பப்பட்டது.

    அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  12. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலைப் பக்கத்துக்கு நேயர்களை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    எங்களோடு இணைந்திருங்கள்.

    இந்த நாள் இனியதாகட்டும்.