You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
சென்னையில் இன்று முதல் புத்தக கண்காட்சி தொடங்க உள்ளது என்று, தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். சென்னையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று புத்தக கண்காட்சி தொடங்க இருக்கிறது. இந்த 45-வது புத்தக கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் 790 அரங்குகளும் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்களும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன என தினத்தந்தி செய்தி கூறுகிறது.
பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் மரணம்
டெல்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த வன்முறையில் குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து, ஹரியாணா மாநிலம், சோனிபத் அருகே சாலை விபத்தில் இறந்ததாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, டெல்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்கு தீப் சித்து செவ்வாய்க்கிழமை காரில் புறப்பட்டுச் சென்றார். இரவு 9.30 மணியளவில் ஹரியாணா மாநிலம், சோனிபத் அருகே குண்ட்லி-மானேசர்-பல்வல் விரைவுவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது தீப் சித்துவின் கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், தீப் சித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த பெண் பலத்த காயமடைந்தார். பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், என்றார்.டெல்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டை பகுதியில் வன்முறை வெடித்தது. அதற்கு முக்கியக் காரணம் தீப் சித்து என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர், பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் கைதாகி ஏப்ரல் இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தேவைப்படும் நேரத்தில் காவல் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது என்று வெளியான செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.
2023 G20 உச்சிமாநாட்டிற்கான செயலகத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
2023 G20 உச்சிமாநாட்டிற்கான செயலகத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
2023 ஜி-20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கான வேலைகளை கவனிப்பதற்கு ஒரு செயலகத்தை நிறுவுவதற்கான வேலையை மத்திய அமைச்சரவை செவ்வாய் அன்று தொடங்கியது. இந்தியா இந்த சர்வதேச அமைப்பின் தலைவராக டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை வழி நடத்தும். இந்தியாவில் நடத்தப்பட இருக்கும் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இது வழிவகுக்கும் என்று தி இந்து நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்