You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக வரிசையில் இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றாக அமருவார்களா?
அஇஅதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் மோதல் நிலவும் நிலையில், எடப்பாடி தரப்பு புதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரைத் தேர்வு செய்துள்ளது. அதை ஏற்கக்கூடாது என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு. என்ன நடக்கும்?
அஇஅதிமுகவின் தலைமைப் பதவிக்கான போட்டியில் எடப்பாடி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடவிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமியும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு பொதுக் குழுவைக் கூட்டியது. அதில் எடப்பாடி கே. பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதற்குப் பிறகு ஜூலை 17ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நடத்தியது. அந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, துணைச் செயலர் பதவியிலிருந்த மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தி அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றங்கள் குறித்த செய்திக் குறிப்பு ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு இது தொடர்பாக கடிதமும் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது.
சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்
இந்த நிலையில், அ.தி.மு.கவின் தலைவர் யார் என்ற விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தானே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பில் தொடர்வதாக ஜூலை 22ஆம் தேதி ஓ. பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை சபாநாயகருக்கு அனுப்பினார்.
இந்த நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி எடப்பாடி கே. பழனிச்சாமி, சட்டமன்ற துணைக் கொறடா அரக்கோணம் ரவி மூலமாக கடிதம் ஒன்றைக் கொடுத்தனுப்பினார். அந்தக் கடிதத்தில் சட்டமன்றம் கூடும் தினத்தன்று நடக்கும் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற முறையில் ஆர்.பி. உதயகுமார் அழைக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனக் கோரியிருந்தார்.
இதையறிந்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, நேற்று ஒரு கடிதத்தை சபாநாயகருக்கு அளித்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக தானே தொடர்வதால், சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்து எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அது பற்றி தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டுமென்று ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருந்தார்.
அக்டோபர் 17ஆம் தேதி கூடும் கூட்டத் தொடரைப் பொறுத்தவரை, ஐந்து நாட்களே நடக்கவிருக்கிறது. சபாநாயகரைப் பொருத்தவரை, இந்த விவகாரம் இன்னமும் தன் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லலாம். அல்லது நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் முடிவெடுக்கும்வரை காத்திருக்கப்போவதாகச் சொல்லலாம். அல்லது இரு தரப்பில் ஒரு தரப்பின் கோரிக்கையை ஏற்கலாம். இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுப்பது என்பது, முழுக்க முழுக்க சபாநாயகரின் தனியுரிமை தொடர்பானது.
ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் மாற்றப்படவில்லையென்றால், சபையில் எடப்பாடி கே. பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் அருகருகே அமர வேண்டியிருக்கும். இந்த நிலை, எடப்பாடி தரப்பு ஏற்கத்தக்கதாக இருக்காது.
என்ன செய்யப்போகிறது இபிஎஸ் தரப்பு?
இந்த நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "பேரவைத் தலைவருக்கென பேரவை விதிகள் இருக்கின்றன. காலம் காலமாகக் கடைபிடிக்கப்படும் மாண்பு இருக்கறது. இதன் அடிப்டையில்தான் அவர் இயங்க முடியும். தற்போதைய சூழலில் ஜூலை 11 பொதுக் குழு செல்லும் என்பதுதான் நடைமுறையில் இருக்கிறது.
ஆகவே ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும். இதன் அடிப்படையில், ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.கவிலேயே இல்லை என்ற முடிவெடுத்து, அவருக்கு அ.தி.மு.க. வரிசையில் அமர இடமளிக்கக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அளித்த கடிதத்தை சபாநாயகர் ஏற்க வேண்டும். அதுதான் முறையாக இருக்கும்" என்றார்.
ஒருவேளை இந்த விவகாரம் தன் பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தால் என்ன செய்வது? "இன்றைக்கு வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம். சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும் நாளிலும் அப்படிச் சொல்ல முடியாது. ஒரு முடிவெடுத்தாக வேண்டும். ஓ. பன்னீர்செல்வத்திற்கு வேறு இடத்தில்தான் இடமளிக்க வேண்டும்" என்கிறார் ஜெயக்குமார்.
அதுபோல நடக்காவிட்டால், இந்தக் கூட்டத்தொடரை அ.தி.மு.க. புறக்கணிக்க நேரலாம். ஆனால், அது அவ்வளவு சரியான முடிவாக இருக்காது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.
சபாநாயகர் என்ன செய்வார்?
"இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஒரு முடிவை முதல் நாளிலேயே அறிவிக்கலாம். அதற்காக அ.தி.மு.கவினர் காத்திருப்பார்கள். ஒருவேளை அந்த முடிவு, எடப்பாடி தரப்பிற்கு உவப்பானதாக இல்லாவிட்டால், எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒரு நாள் அவையைப் புறக்கணித்துவிட்டு, மறுநாள் வரலாம்.
இந்தக் கூட்டத் தொடரில்தான் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையும் ஆகியவை தாக்கல்செய்யபடவிருக்கின்றன. இது இந்த இரண்டு நிகழ்வுகளுமே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்தவை. இது தொடர்பாக அவையில் விவாதம் நடக்கும்போது அங்கு அ.தி.மு.க. இல்லாவிட்டால் அவர்கள் கருத்தைப் பதிவுசெய்ய முடியாமல் போய்விடும். அந்தச் சூழல் ஏற்படுவதை அ.தி.மு.க. விரும்பாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.
இப்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் அ.தி.மு.கவிடம் 66 இடங்கள் இருக்கின்றன. அதில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆகியோர் இருக்கின்றனர். மீதமுள்ள 62 இடங்கள் எடப்பாடி கே. பழனிச்சாமி வசமே இருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்